1. அதற்கு யோபு கூறிய பதில்;
2. என்போன்ற வலிமையற்றவர்க்கு எத்துணைப் துணைபுரிந்தீர்! ஆற்றலற்ற தோளுக்கு எவ்வளவு துணைநின்றீர்!
3. என் போன்ற அறிவற்றவர்க்கு எவ்வளவு அறிவுரை கூறினீர்! நன்னெறிகளை நிறையக் காட்டீனீர்!
4. எவர் துணைகொண்டு இயம்பினீர் இம்மொழிகளை? எவர்தம் ஏவுதல் உம்மிடமிருந்து வெளிப்பட்டது?
5. கீழ்உலகின் ஆவிகள் நடுங்குகின்றன; நீர்த் திரள்களும் அவற்றில் வாழ்வனவும் அஞ்சுகின்றன.
6. பாதாளம் கடவுள்முன் திறந்து கிடக்கிறது; படுகுழி அவர்முன் மூடப்படவில்லை.
7. வெற்றிடத்தில் வடபுறத்தை அவர் விரித்தார்; காற்றிடையே உலகைத் தொங்கவிட்டார்.
8. நீரினை மேகத்துள் பொதித்துள்ளார்; அதன் நிறைவால் முகிலும் கிழிவதில்லை.
9. தம் அரியணையின் முகத்தை மூடுகின்றார்; முகிலை அதன்மேல் பரப்புகின்றார்.
10. நீர்ப்பரப்பின் மீது வட்டம் வரைந்து, இருளுக்கும் ஒளிக்குமிடையில் எல்லை அமைத்தார்.
11. விண்ணின் தூண்கள் அதிர்கின்றன; அவர் அதட்டலில் அதிர்ச்சியடைகின்றன.
12. ஆழியைத் தம் ஆற்றலால் அடக்கினார்; இராகாபை அழித்தார் அறிவுக்கூர்மையால்.
13. தம் மூச்சால் வான்வெளியை ஒளிர்வித்தார்; தம் கையால் விரைந்தோடும் பாம்பை ஊடுருவக் குத்தினார்.
14. ஓ! இவையாவும் அவர்தம் செயல்களின் விளிம்புகளே! எத்துணை மென்குரல் அவற்றில் கேட்கின்றது. அவர்தம் வல்லமையின் இடிமுழக்கத்தை அறிய யாரால் இயலும்?