1. பின்பு அரிய பெரிய அறிகுறி இன்னொன்று விண்ணில் கண்டேன். ஏழு வானதூதர் ஏழு வாதைகளை வைத்திருந்தனர். இறுதியான வாதைகள் அவையே. அவற்றோடு கடவுளின் கோபம் நிறைவுறும்.
|
2. நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு காட்சியைக் கண்டேன். விலங்கின் மீதும் அதன் சிலையின் மீதும் எண்களால் குறிக்கப் பட்ட ஆள் மீதும் வெற்றி கொண்டவர்களையும் நான் கண்டேன். அவர்கள் கடவுள் தந்த யாழ்களைக் கையில் கொண்டு கண்ணாடிக் கடலருகே நின்றனர்.
|
3. கடவுளுடைய ஊழியனாகிய மோயீசனின் பாடலையும் இவ்வாறு பாடினர்: எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரே, உம் செயல்கள் பெரியன, வியப்புக்குரியன. நாடுகளுக்கெல்லாம் அரசரே, உம் வழிகள் நேர்மையானவை, உண்மையானவை.
|
4. ஆண்டவரே, உமக்கு அஞ்சாதவர் எவர்? உமது பெயரை மகிமைப்படுத்தாதவர் எவர்? நீர் ஒருவரே புனிதர். எல்லா இனத்தவரும் வந்து உம் திருவடி பணிவர். ஏனெனில் உம் நீதிச் செயல்கள் வெளிப்படையாயின.
|
6. ஏழு வாதைகளை வைத்திருந்த ஏழு வானதூதர்கள் அவ்வாலயத்திலிருந்து வெளிவந்தனர். அவர்கள் ஒளிமிக்க தூய ஆடை அணிந்து, மார்பிலே பொற்கச்சைகள் கட்டியிருந்தனர்.
|
7. நான்கு உயிர்களுள் ஒன்று என்றென்றும் வாழ்கிற கடவுளின் கோபத்தால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை ஏழு வானதூதர்களுக்கும் அளித்தது.
|
8. கடவுளின் மாட்சிமையும் வல்லமையும் அவ்வாலயத்தைப் புகையினால் நிரப்பின. ஏழு வானதூதர் கொணர்ந்த ஏழு வாதைகள் முற்றுப் பெறும்வரை, ஒருவரும் அவ்வாலயத்தினுள் நுழைய இயலவில்லை.
|