1. இறைவா, நாங்கள் எம் செவியாலே கேள்வியுற்றோம்; எங்கள் முன்னோர் எங்களுக்கு எடுத்துரைத்தனர்: முற்காலத்தில் அவர்கள் வாழ்ந்த நாளில் நீர் செய்த செயலை எங்களுக்கு எடுத்துரைத்தனர்.
|
2. நீர் உம் வல்லமையால் புற இனத்தாரை விரட்டி எங்கள் முன்னோரை நிலைபெறச் செய்தீர்: பல நாடுகளை ஒடுக்கி அவர்கள் ஓங்கச் செய்தீர்.
|
3. எங்கள் முன்னோர் நாட்டைக் கைப்பற்றியது தங்கள் வாளின் வலிமையால் அன்று, அவர்களுக்கு மீட்பு கிடைத்தது தங்கள் கைவன்மையால் அன்று: உமது வலக்கரமும் உமது புயப்பலமும், உம் முகத்தினின்று எழுந்த பேரொளியுமே அவர்களுக்குத் துணை நின்றது; ஏனெனின், நீர் அவர்கள் மீது அன்பு கூர்ந்தீர்.
|
5. எங்கள் எதிரிகளை உம் துணையால் விரட்டியடித்தோம்: எங்களை எதிர்த்து நின்றவர்களை உமது பெயரால் நசுக்கி விட்டோம்.
|
9. இப்போதோ நீர் எங்களைப் புறக்கணித்து விட்டீர்; எங்களைக் கலங்கடித்தீர்: கடவுளே, நீர் எங்கள் சேனையோடு புறப்பட்டு வரவில்லை.
|
10. எங்கள் எதிரிகள் முன் நாங்கள் பின்னடையச் செய்தீர்: எங்கள் பகைவர்கள் எங்களைக் கொள்ளையிட்டுச் சென்றனர்.
|
12. விலை எதுவுமின்றி உம் மக்களை விற்று விட்டீர்: அவர்களை விற்றதால் உமக்குக் கிடைத்த பயனோ ஒன்றுமில்லை.
|
13. எங்கள் அயலாருடைய நிந்தனைக்கு நீர் எங்களை ஆளாக்கினீர்: எங்களைச் சூழ்ந்துள்ள மக்களின் ஏளனத்துக்கும் பழிப்புக்கும் எங்களை உட்படுத்தினீர்.
|
15. எனக்குற்ற மானக்கேடு எந்நேரமும் என் கண் முன்னே நிற்கின்றது: வெட்கம் என்னை முகங்கவிழச் செய்கின்றது.
|
16. என்னை நிந்தித்துத் தூற்றுபவன் பேசுவதைக் கேட்கும் போது, என் எதிரியையும் பகைவனையும் நான் பார்க்கும் போது வெட்கிப் போகிறேன்.
|
17. நாங்களும்மை மறக்காவிடினும் உமது உடன்படிக்கையை மீறாவிடினும், இவையெல்லாம் எங்கள் மீது வந்து விழுந்தன.
|
22. எனினும் நாளெல்லாம் உமக்காக நாங்கள் கொல்லப்படுகிறோம்; கசாப்புக்குச் செல்லும் ஆடுகளெனக் கருதப்படுகிறோம்.
|
24. ஏன் உமது முகத்தை மறைத்துக் கொள்கிறீர்? நாங்கள் உறும் சிறுமையையும் துன்ப நிலையையும் ஏன் மறந்துவிட்டீர்?
|