2. மனிதா, எகிப்து நாட்டின் அரசன் பார்வோனுக்கும் அவன் நாட்டு மக்களுக்கும் சொல்: "நீ உன் மகிமையில் யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்;
|
3. இதோ லீபானில் உள்ள கேதுரு மரத்துக்கு நீ ஒப்பாவாய்; அதில் அழகிய கிளைகள் உண்டு; அடர்ந்த நிழலுண்டு; அது ஓங்கிய உயரமுள்ளது; உச்சி மேகத்தைத் தொடுகிறது;
|
4. தண்ணீர் அதனைத் தழைக்கச் செய்தது; மிகுதியான நீர் அதனை உயர்ந்து வளரச் செய்தது; ஆறுகள் அடிமரத்தைச் சுற்றி ஓடுகின்றன; அதிலிருந்து ஓடும் அருவிகள் காட்டிலுள்ள மரங்களுக்கு எல்லாம் பாய்கின்றன.
|
5. ஆகையால் அந்தக் கேதுரு மரம் காட்டிலுள்ள மற்றெல்லா மரங்களை விட உயர்ந்து வளர்ந்தது; அதன் தளிர்கள் பலுகின; மிகுந்த ஈரத்தால் கொம்புகளும் கிளைகளும் வளர்ந்தோங்கின.
|
6. அது தன் நிழலைச் சுற்றிலும் பரவச் செய்தது; வானத்துப் பறவைகள் அதன் கொம்புகளில் தத்தம் கூடுகளைக் கட்டிக் கொண்டன. வயல் வெளி மிருகங்கள் அதன் கிளைகளின் கீழ் தங்கள் குட்டிகளைப் போட்டன; பல நாட்டு மக்கள் அதன் நிழலிலே குடிகொண்டார்கள்.
|
7. அதன் வேர்கள் ஆழ்ந்த தண்ணீருக்குள் இருந்ததால் அதன் கிளைகள் படர்ந்திருந்தன; பசுங்கொழுந்துகள் மிகுந்திருந்தன; மரம் மிகவும் அழகாய் இருந்தது.
|
8. கடவுளின் சோலையிலுள்ள கேதுரு மரங்கள் இதை விடச் செழித்தவை அல்ல; தேவதாரு மரங்கள் இதைவிட உயரமல்ல; பிலத்தான் மரங்கள் இதைப் போலத் தழைத்ததில்லை, கடவுளின் சோலையிலுள்ள எந்த மரமும் இதற்கு நிகரில்லை; அழகிலே இதற்கு இணையில்லை.
|
9. ஏனெனில் அடர்ந்த கிளைகளாலும், செறிந்த தழைகளாலும் அதனை நாம் அழகு செய்தோம்; கடவுளின் சோலையிலுள்ள அழகிய மரங்களெல்லாம் அதைக் கண்டு பொறாமை கொண்டன.
|
10. ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: அது தன் உயரத்தைக் கண்டு செருக்குற்றதாலும், தன் செறிந்த கிளைகளின் மிகுதியான தழைப்பசுமையைப் பெருமிதமாய்க் காட்டி இறுமாந்ததாலும்,
|
11. நாம் அதைப் புறவினத்தாருள் மிகுத்த வலிமையுள்ளவனுடைய கையில் ஒப்படைப்போம்; அவன் அதன் அக்கிரமத்திற்கு ஏற்ப தான் விரும்புவதை அதற்குச் செய்வான்; நாமும் அதைத் தள்ளிப்போட்டோம்.
|
12. வேற்று நாட்டவருள் மிகக் கொடிய அந்நியர் வந்து, அதனை வெட்டிப் போடுவார்கள்; அதன் கிளைகள் எல்லாம் மலைகளிலும் கணவாய்களிலும் வீழும்: அதன் கொழுந்துகள் சுற்றிலுமுள்ள நீரோடைகளில் விழுந்து சிதைந்து போகும்: பூமியிலுள்ள மக்கள் அனைவரும் அதன் நிழலை விட்டகலுவார்கள்.
|
13. பாழ்பட்ட அம்மரத்திலே வானத்துப் பறவைகள் வாசம் செய்யும்; அதன் கிளைகளினிடையில் பூமியின் மிருகங்கள் யாவும் பதுங்கி ஒடுங்கும்.
|
14. இனிமேல் நீரினருகே நடப்பட்ட மரங்கள் தங்கள் உயரத்தை முன்னிட்டுச் செருக்கடைதலாகாது; மேகம் வரை வளரக் கூடாது; நீர் நிலைகளுக்கருகில் வாழும் மரங்கள் அவற்றைப் போல் உயரமாய் வளருதலாகாது; ஏனெனில் அவையெல்லாம் செத்துப் போகும்; ஆழ்குழிக்குள் செல்லும் மனிதர்களோடு கீழுலகுக்குத் தள்ளப்படும்.
|
15. ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: அந்தக் கேதுரு மரம் பாதாளத்தில் இறங்கும் அந்நாளில் அங்கே இழவு கொண்டாடச் செய்வோம்; அதனைப் பாதாளத்தால் மூடிவிடுவோம்; தண்ணீரையும் ஆறுகளையும் அடைத்து விடுவோம்; அதன் இழவை முன்னிட்டு லீபான் மலை புலம்பியழும்; காட்டு மரங்கள் யாவும் திகிலடையும்.
|
16. ஆழ்குழியில் இறங்குகிறவர்களோடு நாம் அதனைப் பாதாளத்தில் வீழ்த்தும் போது, அதன் வீழ்ச்சியின் ஓசையால் பூமியின் மக்கள் அனைவரும் நடுங்குவார்கள். அப்போது, சோலைவனமாகிய லீபானில் எஞ்சியுள்ள சிறந்த மரங்களும், அழகான தருக்களும், தண்ணீர் பாயும் மரங்களும் யாவும் பூமியின் ஆழத்தில் ஆறுதல் அடையும்.
|
17. ஆனால் இவையும் அதைப் போலச் செத்தவர்களோடு பாதாளத்தில் இறங்க வேண்டியிருக்கும்; ஆம், அதன் நிழலை அணுகி வாழ்ந்த புறவினத்தாரும் அழிவார்கள்.
|
18. அழகிலும் மகிமையிலும், சிங்காரச் சோலையின் மரங்கள் யாவற்றிலும் சிறந்திருந்த கேதுரு மரமே, நீ எதற்கு ஒப்பாயிருக்கிறாய்? மற்ற மரங்களோடு நீயும் ஆழ்குழியில் வீழ்த்தப்படுவாய்; வாளால் வெட்டுண்ட விருத்தசேதனமில்லாப் புறவினத்தாரோடு கிடப்பாய்; அங்ஙனமே பார்வோனுக்கும், அவன் நாட்டு மக்கள் அனைவருக்கும் நடக்கும், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
|