1. நீங்கள் வாழ்ந்து பெருகி, ஆண்டவர் உங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கொடுத்த நாட்டில் புகுந்து அதை உரிமையாக்கிக் கொள்ள, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற கட்டளைகளையெல்லாம் அனுசரிக்கக் கவனமாய் இருப்பீர்களாக.
|
2. உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் படைத்து, உன்னைப் பரிசோதித்து, தம்முடைய கட்டளைகளை நீ அனுசரிப்பாயோ அனுசரிக்க மாட்டாயோவென்று உன் இதயத்திலுள்ளதை நீயே அறியும்படியாக, நாற்பதாண்டளவாய் பாலைவனத்திலே உன்னை நடத்திவந்த எல்லா வழிகளையும் நினைப்பாயாக.
|
3. (உள்ளபடி) அவர் உன்னைப் பசியினால் வருத்தினார். பின்பு நீயும் உன் முன்னோரும் அறிந்திராத மன்னாவை உனக்கு அளித்தார். அதனால்: மனிதன் அப்பத்தினால் மட்டும் அன்று, கடவுள் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறான் என்று உனக்குக் காண்பித்தருளினார்.
|
5. ஆதலால் ஒருவன் தன் மகனுக்குக் கற்பிப்பதுபோல், கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கற்பித்தாரென்று நீ உன் இதயத்தில் உணர்ந்து அறிந்துகொள்வாயாக.
|
6. நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவருடைய வழிகளில் நடந்து, அவருக்கு அஞ்சும்படியன்றோ (அவர் அவ்வாறு உன்னைப் படைத்தார்).
|
7. ஏனென்றால், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை நல்ல நிலத்திலே புகச்செய்வார். அது ஆறு, ஏரி, ஊற்றுகள் மிகுந்த நாடு. அதிலுள்ள பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பல நதிகள் புறப்படுகின்றன.
|
8. கோதுமை வாற்கோதுமை முந்திரிக்கொடிகளும், அத்திமரம் ஒலிவமரம் மாதுளஞ் செடிகளும் அதிலே வளரும். அவ்விடத்தில் எண்ணெயும் தேனும் மிகுதியாக உண்டு.
|
9. அது எக்காலமும் நிறைவாக (நீ) அப்பம் உண்ணத்தக்கதும், ஒன்றும் உனக்குக் குறைவு வைக்காததுமான நாடு. அதில் கற்கள் இரும்பாய் இருக்கின்றன. அதன் மலைகளில் செம்பு வெட்டியெடுக்கப்படுகிறது.
|
10. ஆகையால், நீ உண்டு நிறைவு கொண்டபோது உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்த சிறந்த நாட்டிற்காக அவரைப் போற்றக் கடவாய்.
|
11. நீ ஒருபோதும் உன் கடவுளாகிய ஆண்டவரை மறவாதே. நான் இன்று உனக்கு விதிக்கின்ற அவருடைய கட்டளைகளையும் சடங்கு ஆசாரங்களையும் நீதிமுறைகளையும் அசட்டை செய்யாதபடிக்கு எச்சரிக்கையாய் இருப்பாயாக.
|
12. இல்லாவிட்டால், நீ உண்டு நிறைவு கொண்டு அழகிய வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருக்கும்போதும், ஆட்டுமந்தைகளையும்
|
13. மாட்டுமந்தைகளையும் சம்பாதித்துப் பொன்னையும் வெள்ளியையும் மிகுதியாய்க் கைக்கொண்டிருக்கும் போதும், ஒருவேளை நீ செருக்குற்றவனாய்,
|
14. உன்னை எகிப்திலும் அடிமைத்தன வீட்டிலுமிருந்து புறப்படச் செய்த உன் கடவுளாகிய ஆண்டவரை மறந்தாலும் மறக்கலாம்.
|
15. (அவரை மறவாதே.) அவரன்றோ கொள்ளிவாய்ப் பாம்புகளும் திப்சாஸ் என்னும் நச்சுப் பாம்புகளும் தேள்களும் உள்ள, பயங்கரமான பெரிய நீரில்லாப் பாலைவழியாய் உன்னை நடத்தி அழைத்து வருகையில், மிகக் கடினமான கல் மலையிலிருந்து நீரருவிகள் புறப்படச் செய்து,
|
16. உன் முன்னோர்கள் அறிந்திராத மன்னாவைக் கொண்டு உன்னை உண்பித்து, உன்னைத் தாழ்த்திப் பரிசோதித்த பின்பு, இறுதியில் உன்மீது இரக்கமுள்ளவராய் இருந்தார்?
|
17. ( அவர் இப்படியெல்லாம் செய்ததன் உட்கருத்து ஏதென்றால்: ) என் திறமையினாலேயும், என் புய வலிமையினாலேயும் நான் அந்தச் செல்வமெல்லாம் சம்பாதித்தேன் என்று உன் இதயத்திலே நீ சொல்லாமல்,
|
18. உன் கடவுளாகிய ஆண்டவரை நினைத்து, அவரே செல்வத்தைச் சம்பாதிப்பதற்கான ஆற்றலை உனக்குக் கொடுத்திருக்கிறாரென்று நீ அறியும்படியாகவேயாம். அவர் உன் முன்னோருக்கு ஆணையிட்டுக் கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று, அப்படிச் செய்தார். இந்நாளிலே (நடக்கிறது) அதற்குச் சான்று பகரும்.
|
19. ஆனால், நீ உன் கடவுளாகிய ஆண்டவரை மறந்தவனாய், பிற கடவுளரைப் பின்பற்றி அவர்களை வணங்கித்தொழுது வருவாயாயின், நீ முற்றிலும் அழிந்து போவாயென்று இக்கணமே உனக்கு அறிவிக்கிறேன்.
|
20. உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய குரலுக்கு நீங்கள் கீழ்ப்படியாமல் போனால், உங்களுக்கு முன்பாக ஆண்டவர் அழித்த மக்களை போல் நீங்களும் அழிந்து போவீர்கள்.
|