1. ஏதோமிலிருந்து வருகின்ற இவர் யார்? கருஞ்சிவப்பு உடை உடுத்திப் பொட்சராவிலிருந்து வரும் இவர் யார்? அழகுமிகு ஆடை அணிந்து பேராற்றலுடன் பீடுநடைபோடும் இவர் யார்? நானேதான் அவர்! வெற்றியை பறைசாற்றுபவர்; விடுதலை வழங்குவதில் திறன்மிக்கவர்.
|
2. உம் ஆடை சிவப்பாய் இருப்பதேன்? உம் உடைகள் திராட்சை பிழியும் ஆலையில் மிதிப்பவன் உடைபோல் இருப்பதேன்?
|
3. தனியாளாய் நான் திராட்சை பிழியும் ஆலையில் மிதித்தேன்; மக்களினத்தவருள் எவனும் என்னுடன் இருக்கவில்லை; என் கோபத்தில் நான் அவர்களை மிதித்தேன்; என் சினத்தில் அவர்களை நசுக்கினேன்; அவர்கள் செந்நீர் என் உடைகள் மேல் தெறிந்தது; என் ஆடைகள் அனைத்தையும் கறையாக்கினேன்.
|
5. சுற்றுமுற்றும் பார்த்தேன்; துணைபுரிவோர் எவருமில்லை; திகைப்புற்று நின்றேன்; தாங்குவார் யாருமில்லை; என் புயமே எனக்கு வெற்றி கொணர்ந்தது; என் சினமே எனக்கு ஊக்கமளித்தது.
|
6. சினமுற்று, மக்களினங்களை மிதித்தேன்; சீற்றமடைந்து அவர்களைக் குடிவெறி கொள்ளச்செய்தேன்; அவர்கள் குருதியைத் தரையில் கொட்டினேன்.
|
7. ஆண்டவரின் பேரன்புச் செயல்களை எடுத்துரைத்து அவருக்குப் புகழ்சாற்றுவேன்; ஏனெனில், ஆண்டவர் நமக்கு நன்மைகள் செய்துள்ளார்; தம் இரக்கத்தையும் பேரன்பையும் முன்னிட்டு இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு மாபெரும் நன்மை செய்துள்ளார்.
|
8. ஏனெனில், "மெய்யாகவே அவர்கள் என் மக்கள், வஞ்சனை செய்யாத பிள்ளைகள்" என்று அவர் கூறியுள்ளார்; மேலும் அவர் அவர்களின் மீட்பர் ஆனார்.
|
9. துன்பங்கள் அனைத்திலும் அவர்களின் மீட்பர் ஆனார்; தூதரோ வானதூதரோ அல்ல, அவரே நேரடியாக அவர்களை விடுவித்தார்; தம் அன்பினாலும் இரக்கத்தினாலும் அவர்களை மீட்டார்; பண்டைய நாள்கள் அனைத்திலும் அவர்களைத் தூக்கிச் சுமந்தார்.
|
10. அவர்களோ, அவருக்கு எதிராக எழும்பி, அவரது தூய ஆவியைத் துயருறச் செய்தனர்; ஆதலால் அவரும் அவர்களின் பகைவராய் மாறினார்; அவர்களை எதிர்த்து அவரே போரிட்டார்.
|
11. அப்பொழுது அவர் மக்கள் மோசேயின் காலமாகிய பண்டைய நாள்களை நினைவு கூர்ந்தனர்; தம் மந்தையை மேய்ப்பரோடு கடலினின்று கரையேற்றியவர் எங்கே? அவருக்குத் தம் தூய ஆவியை அருளியவர் எங்கே?
|
12. தம் மாட்சிமிகு புயத்தால் மோசேயின் வலக்கையை நடத்தி சென்றவர் எங்கே? தம் பெயர் என்றென்றும் நிலைக்குமாறு அவர்கள் முன் தண்ணீரைப் பிரித்தவர் எங்கே?
|
13. ஆழ்கடலின் நடுவே அவர்களை நடத்திச் சென்றவர் யார்? பாலை நிலத்தில் தளராத குதிரைபோல் அவர்கள் தடுமாறவில்லை.
|
14. கால்நடை பள்ளத்தாக்கினுள் இறங்கிச் அவர்களும் இளைப்பாற ஆண்டவரின் ஆவி அவர்களை நடத்தியது. இவ்வாறு, உமது பெயர் சிறப்புறுமாறு நீர் உம் மக்களை நடத்திவந்தீர்.
|
15. விண்ணகத்தினின்று கண்ணோக்கும்; தூய்மையும் மாட்சியும் உடைய உம் உறைவிடத்தினின்று பார்த்தருளும்; உம் ஆர்வமும் ஆற்றலும் எங்கே? என்மீது நீர் கொண்ட நெஞ்சுருக்கும் அன்பும் இரக்கப்பெருக்கும் எங்கே? என்னிடமிருந்து அவற்றை நிறுத்தி வைத்துள்ளீரே!
|
16. ஏனெனில் நீரே எங்கள் தந்தை; ஆபிரகாம் எங்களை அறியார்; இஸ்ரயேல் எங்களை ஏற்றுக் கொள்ளார்; ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை; பண்டை நாளிலிருந்து "எம் மீட்பர்" என்பதே உம் பெயராம்.
|
17. ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்வதேன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியதேன்? உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமைச் சொத்தாகிய, குலங்களை முன்னிட்டும் திரும்பிவாரும்.
|
18. உம் திருத்தலத்தை உம் புனித மக்கள் சிறிது காலம் உடைமையாகக் கொண்டிருந்தனர்; எங்கள் பகைவர் அதைத் தரைமட்டமாக்கினர்.
|