1. மீட்க இயலாதவாறு ஆண்டவரின் கை குறுகிவிடவில்லை; கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது மந்தமாகி விடவில்லை.
|
2. உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும், உங்கள் கடவுளுக்கும் இடையே பிளவை உண்டாக்கியுள்ளன; உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன.
|
3. உங்கள் கைகள் இரத்தப்பழியால் கறைபட்டுள்ளன; உங்கள் விரல்கள் தீமையால் தீட்டுப்பட்டுள்ளன. உங்கள் உதடுகள் பொய்களை உதிர்க்கின்றன; உங்கள் நாக்கு தீயவற்றை முணுமுணுக்கின்றது.
|
4. நீதியான வழக்கைக் கொண்டு வருபவர் எவரும் இல்லை; உண்மையுடன் வழக்காடுபவர் யாருமில்லை; வெறுமையான வாதங்கள்மீது நம்பிக்கை வைத்துப் பொய்யைப் பேசி, வஞ்சனையைக் கருத்தரித்துத் தீமையைப் பெற்றெடுக்கின்றனர்.
|
5. நச்சுப் பாம்பின் முட்டைகளை அடைகாக்கிறார்கள்; சிலந்திப் பூச்சியின் வலையைப் பின்னுகிறார்கள்; அவற்றின் முட்டைகளை விழுங்குபவர் சாவார்; உடைபடும் முட்டையிலிருந்து கட்டுவிரியன் வெளிவரும்.
|
6. அவற்றின் வலைகள் உடையாகப் பயன்படா; அவற்றின் வேலைப்பாடுகளைக் கொண்டு எவரும் தம்மைப் போர்த்துக்கொள்ளமாட்டார்; அவர்களின் செயல்கள் தீயின; அவர்களின் கையில் இருப்பன வன்முறைச் செயல்களே!
|
7. தீமை செய்ய அவர்கள் கால்கள் விரைகின்றன; குற்றமற்ற இரத்தம் சிந்த அவர்கள் துடிக்கின்றனர்; அவர்கள் எண்ணங்கள் தீயவை; பாழாக்குதலும் அழிவுமே அவர்கள் வழித்தடங்களில் உள்ளன.
|
8. அமைதி வழியை அவர்கள் அறியார்; நீதியின் பாதையில் அவர்கள் நடக்கவில்லை; தாங்கள் செல்லும் பாதைகளைக் கோணலாக்கினர்; அவற்றில் நடப்பவர் எவரும் அமைதியை அறியார்.
|
9. ஆதலால், நீதி எங்களுக்கு வெகு தொலையில் உள்ளது; நேர்மை எங்களை நெருங்கி வரவில்லை. ஒளிக்கெனக் காத்திருந்தோம்; காரிருள்தான் கிட்டியது; விடியலை எதிர்பார்த்தோம்; இருளிலேயே நடக்கின்றோம்;
|
10. பார்வையற்றோரைப் போல் சுவரைப்பிடிக்க நாங்கள் தடவுகின்றோம்; கண்ணில்லாதவரைப்போல் எங்கள் வழியில் தடுமாறுகின்றோம்; நண்பகலிலும் மங்கிய பொழுதிலும் செத்தவர்போல் இருக்கின்றோம்.
|
11. கரடியைப் போல் நாங்கள் யாவரும் உறுமுகின்றோம்; புறாக்களைப்போல் பெருமூச்சுடன் விம்முகின்றோம்; நீதித்தீர்ப்புக்காகக் காத்திருந்தோம், ஒன்றையும் காணவில்லை; விடுதலையை எதிர்பார்த்திருந்தோம், அது எங்களுக்குத் தொலையில் உள்ளது.
|
12. உம் திருமுன் எங்கள் குற்றங்கள் பெருகியுள்ளன; எங்கள் பாவங்கள் எங்களுக்கு எதிராய்ச் சான்று சொல்கின்றன; எங்கள் குற்றங்கள் எங்களோடு தான் இருக்கின்றன; எங்கள் தீச்செயல்களை நாங்களே அறிவோம்.
|
13. ஆண்டவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து அவரை வஞ்சித்தோம்; எங்கள் கடவுளைப் பின்பற்றாமல் அகன்று போனோம்; ஒடுக்குவதையும் கிளர்ச்சி செய்வதையும்பற்றிப் பேசினோம்; பொய்யானவற்றை மனதில் உருவாக்கி அவற்றை மொழிந்தோம்.
|
14. நீதி துரத்தப்பட்டது; நேர்மை தொலையில் நின்றது; பொது இடங்களில் வாய்மை நிலைகுலைந்தது; உண்மைக்கு அங்கே இடம் இல்லை.
|
15. உண்மை என்பதே இல்லாமல் போய்விட்டது; தீமையினின்று விலகியவர் சூறையாடப்படுகின்றார்; ஆண்டவர் அதைக் கண்டார்; அவர் பார்வையில் நீதியின்மை தீயதாய்ப் பட்டது.
|
16. இதில் தலையிட ஓர் ஆள்கூட இல்லை என்று கண்டு ஆண்டவர் திகைப்புற்றார்; அவரது கையே அவருக்கு வெற்றி கொணர்ந்து; அவரது நேர்மையே அவரைத் தாங்கி நின்றது.
|
17. அவர் நேர்மையை மார்புக் கவசமாய் அணிந்துகொண்டார்; விடுதலையைத் தலைச்சீராவாய்த் தம் தலையில் வைத்துக்கொண்டார்; அநீதிக்குப் பழிவாங்குதலை ஆடையாய் உடுத்திக் கொண்டார்; அன்புவெறியை மேலாடையாகப் போர்த்திக் கொண்டார்.
|
18. தம் பகைவரின் செயல்களுக்குத் தக்க கைம்மாறு அளிப்பார்; அவர்களிடம் தம் சீற்றத்தைக் காட்டுவார்; தம் எதிரிகளுக்குத் தக்க தண்டனை வழங்குவார்; தீவு நாடுகளுக்கும் தகுந்த பதிலடி கொடுப்பார்.
|
19. மேலை நாட்டினர் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; கீழைநாட்டினர் அவரது மாட்சிக்கு நடுங்குவர்; ஆண்டவரின் பெருங்காற்று அடித்து வர, ஓடிவரும் ஆறென அவர் வருவார்.
|
20. சீயோனுக்கு மீட்பராக அவர் வருவார்; யாக்கோபில் தீயதனின்று திரும்பியவரிடம் வருவார், என்கிறார் ஆண்டவர்.
|
21. அவர்களுடன் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே; உன்மேல் இருக்கும் என் ஆவியும் உன் வாயில் நான் வைத்துள்ள என் வார்த்தைகளும் உன் வாயினின்றும் உன் வழி மரபினர் வாயினின்றும் வழிவழிவரும் உன் தலைமுறையினர் வாயினின்றும் இன்றும் என்றென்றும் நீங்கிவிடாது, என்கிறார் ஆண்டவர்.
|