1. பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு; பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு; ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள், என்கிறார் ஆண்டவர்.
|
2. உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு; உன் குடியிருப்புகளின் தொங்கு திரைகளைப் பரப்பிவிடு; உன் கயிறுகளைத் தாராளமாய் நீட்டி விடு; உன் முளைகளை உறுதிப்படுத்து.
|
3. வலப்புறமும் இடப்புறமும் நீ விரிந்து பரவுவாய்; உன் வழிமரபினர் வேற்றுநாடுகளை உடைமையாக்கிக் கொள்வர்; பாழடைந்து கிடக்கும் நகர்களிலும் அவர்கள் குடியேற்றப்படுவர்.
|
4. அஞ்சாதே, நீ அவமானத்திற்குள்ளாகமாட்டாய்; வெட்கி நாணாதே, இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய்; உன் இளமையின் மானக்கேட்டை நீ மறந்துவிடுவாய்; உன் கைம்மையின் இழிநிலையை இனி நினைக்கமாட்டாய்.
|
5. ஏனெனில், உன்னை உருவாக்கியவரே உன் கணவர், "படைகளின் ஆண்டவர்" என்பது அவர்தம் பெயராம். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்; "உலக முழுமைக்கும் கடவுள்" என அவர் அழைக்கப்படுகின்றார்.
|
6. ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோலும், தள்ளப்பட்ட இளம் மனைவி போலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார், என்கிறார் உன் கடவுள்.
|
8. பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என்முகத்தை உனக்கு மறைத்தேன்; ஆயினும் என்றுமுள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார் ஆண்டவர்.
|
9. எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது; நோவாவின் காலத்துப் பெருவெள்ளம் இனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது என்று நான் ஆணையிட்டேன்; அவ்வாறே உம்மீதும் சீற்றம் அடையமாட்டேன் என்றும், உன்னைக் கண்டிக்க மாட்டேன் என்றும் ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.
|
10. மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்.
|
11. துயருற்றவளே, சூறைக்காற்றால் அலைக்கழிக்கப்பட்டவளே, ஆறுதல் பெறாது தவிப்பவளே, இதோ, மாணிக்கக்கற்களால் உன் அடித்தளத்தை அமைப்பேன், நீலக்கற்களால் உன் நிலைக்களத்தை நிறுவுவேன்.
|
12. உன் கால்மாடங்களைச் சிவப்புக் கற்களாலும், உன் வாயில்களைப் பளிங்குக் கற்களாலும் உன் மதில்கள் அனைத்தையும் விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவேன்.
|
13. உன் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்; உன் பிள்ளைகள் நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர்.
|
14. நேர்மையில் நீ நிலைநாட்டப்படுவாய்; ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்; நீ அஞ்சாதே! திகில் உன்னை அணுகாது.
|
15. எவர்களாவது உன்னை எதிர்த்துக் கூடினால் அவர்கள் என்னிடமிருந்து வந்தவர்கள் அல்லர்; உன்னைத் தாக்கவரும் எவனும் உன் பொருட்டு வீழ்ச்சியுறுவான்.
|
16. இதோ, கரிநெருப்பை ஊதிப் போர்க் கருவியை அதன் பயனுக்கு ஏற்ப உருவாக்கும் கொல்லனைப் படைத்தவர் நான்; அதைப் பாழாக்கி அழிப்பவனையும் படைத்தவர் நான்.
|
17. உன்னைத் தாக்குமாறு உருவாக்கப்பட்ட எந்தப் போர்க்கருவியும் நிலைத்திராது. உன்மேல் குற்றஞ்சாட்டித் தீர்ப்புச் சொல்ல எழும் எந்த நாவையும் நீ அடக்கிவிடுவாய்; இவையே ஆண்டவரின் ஊழியர்களது உரிமைச்சொத்தும், நான் அவர்களுக்கு அளிக்கும் வெற்றியுமாய் இருக்கின்றன, என்கிறார் ஆண்டவர்.
|