1. சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்; பிற இனத்;;தாரை அவர்முன் அடிபணியச் செய்வார். அரசர்களை அவர்முன் ஆற்றல் இழக்கச் செய்வார்; கோட்டை வாயில்களை அவர்முன் பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார்; அவரது வலக்கையை உறுதியாகப் பற்றிப் பிடித்துள்ளார்; அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே;
|
2. நான் உனக்கு முன்னே சென்று குன்றுகளைச் சமப்படுத்துவேன்; செப்புக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களைத் தகர்ப்பேன்.
|
3. இருளில் மறைத்துவைத்த கருவூலங்களையும் மறைவிடங்களில் ஒளித்துவைத்த புதையல்களையும் உனக்கு நான் தருவேன்; பெயர் சொல்லி உன்னை அழைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை நீ அறியும்படி இதைச் செய்வேன்.
|
4. என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும் நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன்.
|
5. நானே ஆண்டவர்; வேறு எவருமில்லை; என்னையன்றி வேறு கடவுள் இல்லை; நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன்.
|
6. கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை என்று மக்கள் அறியும்படி இதைச் செய்கிறேன்; நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை.
|
7. நான் ஒளியை உண்டாக்குகிறேன்; இருளைப் படைக்கிறேன்; நல் வாழ்வை அமைப்பவன் நான்; தீமையைப் படைப்பவனும் நானே; இவை அனைத்தையும் செய்யும் ஆண்டவர் நானே.
|
8. வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும்; மண்ணுலகம் வாய்திறந்து விடுதலைக்கனி வழங்கட்டும், அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும்; இவற்றைச் செய்பவர் ஆண்டவராகிய நானே.
|
9. தன்னை உருவாக்கியவரை எதிர்த்து வழக்காடுபவனுக்கு ஐயோ கேடு! பானை ஓடுகளில் அவனும் ஓர் ஓடே! களிமண் குயவனிடம், "நீ என்னைக் கொண்டு என்ன செய்கிறாய்" என்றும் அவன் வனைந்தது அவனிடம், "உனக்குக் கைத்திறனே இல்லை" என்றும் கூறுவதுண்டோ?
|
10. தந்தையிடம், "நீர் ஏன் என்னை இப்படிப் பிறப்பித்தீர்" என்றும், தாயிடம், "நீ ஏன் என்னை இப்படிப் பெற்றெடுத்தாய்" என்றும் வினவுபவனுக்கு ஐயோ கேடு!
|
11. இஸ்ரயேலின் தூயவரும் அவனை உருவாக்கியவருமான ஆண்டவர் கூறுவது இதுவே; "நிகழவிருப்பன குறித்தும் என் மக்களைப்பற்றியும் என்னிடம் கேள்வி கேட்பீர்களா? என் கைவினை பற்றி எனக்கே கட்டளையிடுவீர்களா?
|
12. நான் உலகை உருவாக்கி அதன்மேல் மனிதரைப் படைத்தேன்; என் கைகளே வானத்தை விரித்தன; அதன் படைத்திரளுக்கு ஆணையிட்டதும் நானே.
|
13. வெற்றிபெறுமாறு நான் சைரசை எழுப்பினேன்; அவன் செல்லும் அனைத்து வழிகளையும் சீர்படுத்தினேன்; அவன் என் நகரைக் கட்டியெழுப்புவான்; நாடு கடத்தப்பட்ட என் மக்களை ஈட்டுப்பொருளோ அன்பளிப்போ பெறாது திருப்பி அனுப்புவான்" என்கிறார் படைகளின் ஆண்டவர்.
|
14. ஆண்டவர் கூறுவது இதுவே; "எகிப்தியர் தம் செல்வத்தோடும், எத்தியோப்பியர் தம் வணிகப் பொருளோடும் நெடிது வளர்ந்த செபாவியரும் உனக்கு உடைமையாவர். அவர்கள் விலங்கிடப்பட்டு, உனக்குப் பின்வந்து உன்னைப் பணிவர்; உன்னிடம் தன் மன்றாட்டைச் சமர்ப்பித்து, "இறைவன் உம்மிடம்தான் இருக்கிறார்; வேறெங்கும் இல்லை; வேறு கடவுளும் இல்லை "என்பார்கள்.
|
17. ஆண்டவர் என்றுமுள மீட்பை அளித்து இஸ்ரயேலை விடுவித்தருளினார்; என்றென்றும் நீங்கள் வெட்கக்கேடு அடையமாட்டீர்கள்; அவமதிப்புக்கும் உள்ளாக மாட்டீர்கள். "
|
18. ஏனெனில் விண்ணுலகைப் படைத்த ஆண்டவர் கூறுவது இதுவே; அவரே கடவுள்; மண்ணுலகைப் படைத்து உருவாக்கியவர் அவரே; அதை நிலைநிறுத்துபவரும் அவரே; வெறுமையாய் இருக்குமாறு படைக்காது, மக்கள் வாழுமாறு அதை உருவாக்கினார். நானே ஆண்டவர், என்னையன்றி வேறு எவரும் இல்லை.
|
19. நான் மறைவிலும் மண்ணுலகின் இருண்ட பகுதியிலும் பேசியதில்லை; "வெற்றிடத்தில் என்னைத் தேடுங்கள்" என்று நான் யாக்கோபின் வழிமரபிடம் சொல்லவில்லை; ஆண்டவராகிய நான் உண்மையே பேசுகிறேன்; நேர்மையானவற்றை அறிவிக்கிறேன்;
|
20. மக்களினங்களுள் தப்பிப் பிழைத்தோரே! ஒன்று திரண்டு வாருங்கள்; ஒருங்கே கூடுங்கள்; மரத்தால் செய்த தங்கள் சிலையைச் சுமந்து செல்வோருக்கும், விடுதலை வழங்காத தெய்வத்திடம் தொடர்ந்து மன்றாடுவோருக்கும் அறிவே இல்லை.
|
21. அறிவியுங்கள்; உங்கள் வழக்கை எடுத்துரையுங்கள்; ஒன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள்; தொடக்கத்திலிருந்து இதை வெளிப்படுத்தியவர் யார்? முதன் முதலில் இதை அறிவித்தவர் யார்? ஆண்டவராகிய நான் அல்லவா? என்னையன்றிக் கடவுள் வேறு எவரும் இல்லை; நீதியுள்ளவரும் மீட்பு அளிப்பவருமான இறைவன் என்னையன்றி வேறு எவரும் இல்லை.
|
22. மண்ணுலகின் அனைத்து எல்லை நாட்டோரே! என்னிடம் திரும்பி வாருங்கள்; விடுதலை பெறுங்கள்; ஏனெனில் நானே இறைவன்; என்னையன்றி வேறு எவருமில்லை.
|
23. நான் என்மேல் ஆணையிட்டுள்ளேன்; என் வாயினின்று நீதிநிறை வாக்கு புறப்பட்டுச் சென்றது; அது வீணாகத் திரும்பி வராது; முழங்கால் அனைத்தும் எனக்குமுன் மண்டியிடும்; நா அனைத்தும் என்மேல் ஆணையிடும்.
|
24. "ஆண்டவரில் மட்டும் எனக்கு நீதியும் ஆற்றலும் உண்டு" என்று ஒவ்வொருவனும் சொல்லி அவரிடம் வருவான்; அவருக்கு எதிராகச் சீறி எழுந்தவர் அனைவரும் வெட்கக்கேடு அடைவர்.
|