1. இஸ்ரயேல் தழைத்து வளர்ந்த திராட்சைக்கொடி, அது மிகுதியான கனிகளைத் தனக்கே தாங்கி நிற்கின்றது; எவ்வளவு மிகுதியாகக் கனிகளைக் கொடுத்ததோ, அவ்வளவு மிகுதியாய்ப் பலிபீடங்களை அமைத்தது; எத்தகைய சிறப்புடன் நாடு செழிப்புற்றதோ, அதற்கு இணையாய்ச் சிலைத் தூண்கள் சிறப்புப் பெற்றன.
|
2. இருமனம் கொண்ட மக்களாகிய அவர்கள், தங்கள் குற்றத்திற்காகத் தண்டனை பெறுவார்கள்; ஆண்டவர் அவர்களுடைய பலிபீடங்களைத் தகர்த்திடுவார்; அவர்களுடைய சிலைத் தூண்களை நொறுக்கிடுவார்.
|
3. அப்போது அவர்கள், "நமக்கு அரசன் இல்லை; ஆண்டவருக்கு நாம் அஞ்சி நடக்கவில்லை; அரசன் இருந்தாலும், நமக்கு என்ன செய்வான்?" என்பார்கள்.
|
4. வீண் வார்த்தைகளையே அவர்கள் பேசுகின்றார்கள். பொய்யாணை இட்டு உடன்படிக்கை செய்கின்றார்கள்; ஆதலால், வயலின் உழவுச் சால்களில் முளைக்கும் நச்சுப் பூண்டுகள் போலத் தண்டனைத் தீர்ப்பு முளைக்கும்.
|
5. சமாரியாவில் குடியிருப்போர் பெத்தாவேனிலுள்ள கன்றுக் குட்டியை முன்னிட்டு நடுங்குவர்; அதன் மேன்மை இப்பொழுது மறைந்துபோயிற்று; அதைக் குறித்து அதன் மக்கள் துயர் அடைவார்கள்; அதன் குருக்களும் அதற்காகப் புலம்புவார்கள்.
|
6. அதுவே அசீரியாவிலுள்ள யாரேபு மன்னனுக்கு அன்பளிப்பாகக் கொண்டுபோகப்படும். எப்ராயிம் வெட்கமடைவான், இஸ்ரயேல் தன் ஆலோசனையால் நாணமடைவான்.
|
8. இஸ்ரயேலின் பாவமாகிய சிலை வழிபாட்டின் உயர்ந்த இடமெல்லாம் அழிக்கப்படும்; முள்களும், முட்புதர்களும் அவற்றின் பலிபீடங்கள்மேல் வளரும்; அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, "எங்களை மூடிக்கொள்ளுங்கள்" குன்றுகளைப் பார்த்து, 'எங்கள்மேல் விழுங்கள்' என்று சொல்வார்கள்.
|
9. இஸ்ரயேலர் கிபயாவில் தங்கியிருந்த நாளிலிருந்தே பாவம் செய்து வந்தார்கள்; கிபயாவில் பொல்லார்மேல் எழுந்த கடும் போர் அவர்கள்மேலும் வராதா?
|
10. நான் வந்து அவர்களைத் தண்டிப்பேன்; அவர்கள் செய்த இரட்டைத் தீச் செயல்களுக்குத் தண்டனை வழங்கும் பொருட்டு அவர்களுக்கு எதிராக வேற்றினத்தார் ஒன்றுகூடுவர்.
|
11. எப்ராயிம், நன்றாகப் பழக்கப்பட்டதும், புணையடிக்க விரும்புவதுமான பசுவாய் இருக்கின்றான்; நானோ அதன் அழகான கழுத்தின்மேல் நுகத்தடியை வைப்பேன்; எப்ராயிமை ஏரில் பூட்டுவேன்; யூதா உழுவான்; யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.
|
12. நீதியை நீங்கள் விதைத்துக் கொள்ளுங்கள்; அன்பின் கனியை அறுவடை செய்யுங்கள்; உங்கள் தரிசு நிலத்தை உழுது பண்படுத்துங்கள்; ஏனெனில் ஆண்டவர் வந்து உங்கள்மேல் நேர்மையைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடும் காலம் நெருங்கிவந்துவிட்டது.
|
13. நீங்கள் கொடுமையை உழுதீர்கள்; தீவினையை அறுவடை செய்தீர்கள்; பொய்ம்மைக் கனியைத் தின்றீர்கள்; உங்கள் தேர்ப்படைகளின் மேலும், வீரர்களின் எண்ணிக்கையின் மேலும் நீங்கள் நம்பிக்கை வைத்தீர்கள்.
|
14. ஆதலால் உங்கள் மக்களிடையே போர்க் குரல் எழும்பும்; உங்கள் அரண்கள் யாவும் அழிக்கப்படும்; போரின் நாளில் பெத்தர்பேலைச் சல்மான் அழித்தபோது அன்னையர் தம் பிள்ளைகளோடு மோதியடிக்கப்பட்டது போல அது இருக்கும்.
|
15. பெத்தேலே! உன் கொடிய தீவினைக்காக உனக்கும் இவ்வாறே செய்யப்படும். பொழுது விடியும்போது இஸ்ரயேலின் அரசன் அழிந்து போவது உறுதி.
|