1. உங்களிடையே பரத்தைமை உண்டெனக் கேள்விப்படுகிறேன். ஒருவன் தன் தந்தையின் மறுமனைவியை வைத்துக் கொண்டிருக்கிறானாம். இத்தகைய பரத்தைமை பிற இனத்தாரிடையே கூடக் காணப்படவில்லை.
|
2. இதை அறிந்தும் நீங்கள் இறுமாப்புடன் இருப்பது எப்படி? துயரமடைந்திருக்க வேண்டாமா? இப்படிச் செய்தவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளி வைத்திருக்க வேண்டாமா?
|
3. நான் உடலால் உங்களோடு இல்லாவிடினும் உள்ளத்தால் உங்களோடு இருக்கிறேன். நான் உங்களோடு இருப்பதாக எண்ணி அச்செயலைச் செய்தவனுக்கு ஏற்கெனவே தீர்ப்பு அளித்துவிட்டேன்.
|
4. நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் நீங்கள் கூடிவரும்போது நானும் உள்ளத்தால் உங்களோடு இருப்பேன். அப்போது நம் ஆண்டவர் இயேசுவின் வல்லமையோடு,
|
5. அத்தகையவனைச் சாத்தானிடம் ஒப்புவிக்க வேண்டும். அவனது உடல் அழிவுற்றாலும் ஆண்டவரின் நாளில் அவன் மீட்படைவதற்காக இவ்வாறு செய்வோம்.
|
6. நீங்கள் பெருமை பாராட்டுவது நல்லதல்ல. சிறிதளவு புளிப்புமாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா?
|
7. எனவே புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்து விடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருப்பீர்கள். உண்மையில் நீங்கள் புளிப்பற்ற மாவாய்த்தான் இருக்கிறீர்கள். ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்.
|
8. ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.
|
9. பரத்தைமையில் ஈடுபடுவோருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நான் உங்களுக்கு என் கடித்தில் எழுதியிருந்தேன்.
|
10. ஆனாலும் இவ்வுலகில் பரத்தைமையில் போராசையுடையோர், கொள்ளையடிப்போர், சிலைகளை வழிபடுவோர் ஆகியோரைப் பற்றி நான் பொதுவாக எழுதவில்லை. அப்படியானால் நீங்கள் இவ்வுலகை விட்டே வெளியேற வேண்டியிருக்குமே!
|
11. உங்கள் நடுவில் "சகோதரர்" அல்லது "சகோதரி" என்னும் பெயரை வைத்துக்கொண்டு பரத்தைமையில் ஈடுபடுபவராகவோ பேராசையுடையவராகவோ சிலைகளை வழிபடுகிறவராகவோ பழிதூற்றுகிறவராகவோ குடிவெறியராகவோ கொள்ளையடிப்பவராகவோ இருப்பவர்களோடு உறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என்றுதான் உங்களுக்கு எழுதியிருந்தேன்; அவர்களோடு உணவருந்தவும் வேண்டாம்.
|
12. (12-13) திருச்சபைக்கு வெளியே இருப்பவர்கள் குற்றவாளிகள் என நான் ஏன் தீர்ப்பளிக்க வேண்டும்? கடவுளே அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார். உள்ளே இருப்பவர்களுக்கு நீங்கள்தானே தீர்ப்பளிக்க வேண்டும்? ஆகையால் அத்தீயவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளி வையுங்கள்.
|