சகரியா 14 : 1 (RCTA)
இதோ, ஆண்டவரின் நாள் வருகின்றது; அப்போது, உன்னிடமிருந்து பறிக்கப்பட்ட கொள்ளைப் பொருட்கள் உன் நடுவிலேயே பங்கிடப்படும்.
சகரியா 14 : 2 (RCTA)
யெருசலேமுக்கு எதிராகப் போர் புரியும்படி மக்களினங்கள் அனைத்தையும் நாம் ஒன்று கூட்டப் போகிறோம்; நகரம் பிடிபடும்; வீடுகள் கொள்ளையிடப்படும்; பெண்கள் பங்கப்படுத்தப்படுவர்; நகர மாந்தருள் பாதிப்பேர் அடிமைகளாய் நாடு கடத்தப்படுவர்; ஆனால் எஞ்சியிருக்கும் மக்கள் நகரை விட்டு போகமாட்டார்கள்.
சகரியா 14 : 3 (RCTA)
பின்பு ஆண்டவர் வெளியே கிளம்பி வந்து போர்க் காலத்தில் போரிடுவது போல் அந்த மக்களினங்களுக்கு எதிராகப் போர்புரிவார்.
சகரியா 14 : 4 (RCTA)
அந்நாளில் அவர் கால்கள் யெருசலேமுக்கு முன்னால் கிழக்குப் பக்கத்தில் இருக்கும் ஒலிவ மரங்களடர்ந்த மலையின் மேல் நிலைகொள்ளும்; ஒலிவ மலையானது கிழக்கு மேற்காக மிக விரிந்த பள்ளத்தாக்கினால் பிளவுபடும்; அம்மலையின் ஒரு பகுதி வடக்கிலும், மற்றப்பகுதி தெற்கிலுமாகப் பிரிந்து விலகும்.
சகரியா 14 : 5 (RCTA)
அந்த மலைகளின் பள்ளத்தாக்கு ஓடுவீர்கள்; ஏனெனில் மலைகளின் பள்ளத்தாக்கு அதன் பக்கத்துப் பள்ளத்தாக்கைத் தொடும்; நீங்களோ யூதாவின் அரசனாகிய யோசியாசின் காலத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது ஓடிப் போனது போல் ஓடுவீர்கள். அப்போது உங்கள் கடவுளாகிய ஆண்டவர் வருவார்; அவரோடு பரிசுத்தர்கள் அனைவரும் வருவார்கள்.
சகரியா 14 : 6 (RCTA)
அந்நாளில், குளிரோ உறைபனியோ இராது.
சகரியா 14 : 7 (RCTA)
அந்த நாள் விந்தையான நாளாயிருக்கும்- அது ஆண்டவருக்குத்தான் தெரியும்; பகலுக்குப் பின் இரவே வராது; மாலை வேளையிலும் ஒளியிருக்கும்.
சகரியா 14 : 8 (RCTA)
அந்நாளில் உயிருள்ள நீர் யெருசலேமிலிருந்து புறப்பட்டு ஓடும்; அதில் ஒரு பாதி கீழ்க் கடலிலும், மறு பாதி மேற்கடலிலும் போய்க் கலக்கும்; அது கோடைகாலத்திலும் குளிர்காலத்திலும் ஓடிக் கொண்டிருக்கும்.
சகரியா 14 : 9 (RCTA)
அந்நாளில், ஆண்டவர் உலக முழுவதற்கும் அரசராவார்; ஆண்டவர் ஒருவரே, அவரது திருப்பெயரும் ஒன்றே.
சகரியா 14 : 10 (RCTA)
கேபா முதல் யெருசலேமுக்குத் தெற்கிலுள்ள இரெம்மோன் வரையில் உள்ள நாடு முழுவதும் சம வெளியாக்கப்படும். தன் இடத்திலேயே ஓங்கி உயர்ந்திருக்கும் யெருசலேமில் மக்கள் குடியேறுவர்; பென்யமீன் வாயில் முதல் முந்திய வாயில் இருந்த இடம் வரையில்- மூலை வாயில் வரையிலும், அனானேயல் கோபுரம் முதல் அரசனுடைய திராட்சை ஆலைகள் வரையில் மக்கள் குடியேறியிருப்பார்கள்.
சகரியா 14 : 11 (RCTA)
அங்கே மக்கள் அமைதியாய் வாழ்வார்கள்; இனி அவர்கள் சாபனைக்கு ஆளாக மாட்டார்கள்; யெருசலேம் அச்சமின்றி இருக்கும்.
சகரியா 14 : 12 (RCTA)
யெருசலேமுக்கு எதிராக எழுந்து போர் புரிந்த எல்லா மக்களினங்கள் மேலும் ஆண்டவர் அனுப்பப் போகிற கொள்ளை நோய் இதுவே: நடமாட்டமாய் இருக்கும் போதே ஒவ்வொருவனுடைய உடல் தசையும் அழுகி விழும்; அவர்களுடைய கண்கள் தம் குழிகளிலேயே அழுகி விடும்; அவர்களுடைய நாக்குகளும் வாய்க்குள்ளேயே அழுகிப் போகும்.
சகரியா 14 : 13 (RCTA)
அந்நாளில் ஆண்டவர் அவர்களுக்குள் பெரிய கலகத்தை எழுப்புவார்; ஒருவன் மற்றொருவன் கையைப் பற்றுவான்; ஒவ்வொருவனும் தன் தன் அயலானுக்கு எதிராய்க் கையுயர்த்துவான்.
சகரியா 14 : 14 (RCTA)
யூதா கூட யெருசலேமுக்கு எதிராகப் போர்தொடுக்கும். சுற்றியுள்ள எல்லா மக்களினங்களுடைய செல்வங்களாகிய பொன், வெள்ளி, ஆடைகள் முதலியவை குவியல் குவியலாய்ச் சேர்க்கப்படும்.
சகரியா 14 : 15 (RCTA)
இந்தக் கொள்ளை நோய் போலவே அவர்களுடைய பாசறைகளில் இருக்கும் குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், இன்னும் மற்றெல்லா மிருகங்களுக்கும் கொள்ளை நோய் உண்டாகும்.
சகரியா 14 : 16 (RCTA)
யெருசலேமுக்கு எதிராய் வந்த எல்லா மக்களினங்களிலும் எஞ்சியிருக்கும் ஒவ்வொருவரும் ஆண்டு தோறும் சேனைகளின் ஆண்டவராகிய அரசரை வணங்கவும், கூடாரத் திருவிழாவைக் கொண்டாடவும் போவார்கள்.
சகரியா 14 : 17 (RCTA)
உலகத்தின் இனத்தாருள் எவரேனும் சேனைகளின் ஆண்டவராகிய அரசரை வணங்க யெருலேமுக்குப் போகவில்லையானால், அவர்களுக்கு மழை பெய்யாது.
சகரியா 14 : 18 (RCTA)
எகிப்து நாட்டு மக்கள் அவர் திருமுன்னிலைக்கு வழிபாடு செய்ய வரவில்லையாயின், கூடாரத் திருவிழாவைக் கொண்டாட வராத மக்களினங்களை ஆண்டவர் வதைத்த அதே கொள்ளை நோயால் அவர்களையும் வதைப்பார்.
சகரியா 14 : 19 (RCTA)
இதுதான் கூடாரத் திருவிழாவைக் கொண்டாட வராத எகிப்துக்கும், மற்றெல்லா இனத்தாருக்கும் கிடைக்கப் போகும் தண்டனை.
சகரியா 14 : 20 (RCTA)
அந்நாளில், குதிரைகளின் கழுத்தில் கட்டியுள்ள மணிகளில், 'ஆண்டவருக்கென அர்ச்சிக்கப்பட்டவை' என்று எழுதப்பட்டிருக்கும். ஆண்டவரின் இல்லத்தில் இருக்கும் பானைகள் பீடத்தின் முன்னிருக்கும் கிண்ணங்களைப் போலிருக்கும்;
சகரியா 14 : 21 (RCTA)
யெருசலேமிலும் யூதாவிலுமுள்ள பானை ஒவ்வொன்றும் சேனைகளின் ஆண்டவருக்கென அர்ச்சிக்கப் பட்டதாய் இருக்கும்; பலியிடுபவரெல்லாம் பலியிட்ட இறைச்சியைச் சமைக்க அவற்றை எடுத்துப் பயன் படுத்துவார்கள். மேலும் அந்நாளில் சேனைகளின் ஆண்டவருடைய இல்லத்தில் வாணிகள் எவனும் இருக்கமாட்டான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21

BG:

Opacity:

Color:


Size:


Font: