உன்னதப்பாட்டு 5 : 1 (RCTA)
என் காதலர் தம் தோட்டத்திற்கு வந்து அதன் சிறந்த கனிகளை உண்பாராக! தலைமகன்: எனது தோட்டத்திற்கு நான் வருகிறேன், என் தங்காய்! என் மணமகளே! என் வாசனைப் பொருளுடன் என் வெள்ளைப் போளத்தைச் சேமிக்கிறேன்; என் தேனையும் என் தேனடைகளையும் உண்கிறேன், என் இரசத்தையும் என் பாலையும் குடிக்கிறேன். நண்பர்களே, சாப்பிடுங்கள்; குடியுங்கள்; அன்பர்களே, நன்றாகக் குடியுங்கள். நான்காம் கவிதை
உன்னதப்பாட்டு 5 : 2 (RCTA)
தலைமகள்: நான் உறளங்கினேன், ஆயினும் என் இதயம் விழித்திருந்தது. இதோ, என் காதலர் கதவைத் தட்டுகிறார். "கதவைத் திறந்திடுக, என் தங்காய்! என் அன்பே! என் வெண்புறாவே! என் நிறையழகியே! என் தலை பனியால் நனைந்துள்ளது, என் தலைமயிர் இரவின் தூறலால் ஈரமாயுள்ளது" என்கிறார்.
உன்னதப்பாட்டு 5 : 3 (RCTA)
என் ஆடையைக் களைந்து விட்டேன், மறுபடியும் அதை நான் உடுத்த வேண்டுமா? என் பாதங்களைக் கழுவிச் சுத்தம் செய்தேன், மறுபடியும் அவற்றை நான் அழுக்குப் படுத்தவோ?" என்கிறேன்.
உன்னதப்பாட்டு 5 : 4 (RCTA)
என் காதலர் கதவின் துவாரத்தின் வழியாய்க் கை நீட்டவே என் உள்ளம் எனக்குள் துள்ளி மகிழ்ந்தது.
உன்னதப்பாட்டு 5 : 5 (RCTA)
என் காதலர்க்குக் கதவைத் திறக்க எழுந்திருந்தேன், என் கைகளிலிருந்து வெள்ளைப் போளமும், கை விரல்களினின்று நீர்த்த வெள்ளைப் போளமும் தாழ்ப்பாள் பிடிகள்மேல் துளிதுளியாய் வடிந்தது.
உன்னதப்பாட்டு 5 : 6 (RCTA)
என் காதலர்க்கு நான் கதவைத் திறந்தேன், ஆனால் என் காதலர் திரும்பிப் போய் விட்டிருந்தார். அவர் பேசியபோது என் உயிரே உருகிற்று; அவரைத் தேடினேன், ஆனால் அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டுப் பார்த்தேன், ஆனால் பதிலே இல்லை.
உன்னதப்பாட்டு 5 : 7 (RCTA)
நகரத்தைச் சுற்றிக் காவல் வந்த சாமக் காவலர் என்னைக் கண்டார்கள்; என்னை அடித்துக் காயப்படுத்தினார்கள், அலங்கத்தின் காவலர் என் போர்வையை எடுத்துக் கொண்டனர்.
உன்னதப்பாட்டு 5 : 8 (RCTA)
யெருசலேமின் மங்கையரே, ஆணையிட்டுச் சொல்கிறேன்: என் காதலரைக் கண்டால் அவரிடம் என்ன சொல்வீர்கள்? நான் காதல் நோயுற்றதாகச் சொல்லுங்கள்.
உன்னதப்பாட்டு 5 : 9 (RCTA)
பாடகர்க்குழு: பெண்களிலெல்லாம் பேரழகியே, மற்றக் காதலர்களினும் உன் காதலர் எவ்வகையில் சிறந்தவர்? இவ்வாறு நீ எங்களிடன் ஆணையிட்டுச் சொன்னாயே, மற்றக் காதலர்களினும் உன் காதலர் எவ்வகையில் சிறந்தவர்?
உன்னதப்பாட்டு 5 : 10 (RCTA)
தலைமகள்: என் காதலர் மிக வெண்மையானவர், சிவந்தவர்; பத்தாயிரம் பேர்களில் தலை சிறந்தவர்.
உன்னதப்பாட்டு 5 : 11 (RCTA)
அவரது தலை பத்தரை மாற்றுத் தங்கம், அவர் தலை மயிர் பனங்குருத்துப் போல் தொங்குகிறது, காகத்தைப் போல் அது கருமையானது.
உன்னதப்பாட்டு 5 : 12 (RCTA)
அவர் கண்களோ பாலில் கழுவப்பட்டுப் போராறுகளின் ஓரத்தில் வாழ்ந்திருந்து மலையருவி அருகிலே தங்குகின்ற வெண்புறாக்களைப் போலுள்ளன.
உன்னதப்பாட்டு 5 : 13 (RCTA)
அவர் கன்னங்கள், நறுமணம் கொழிக்கும் வாசனைச் செடிகள் முளைக்கும் பாத்திகள்; அவர் இதழ்கள் நீர்த்த வெள்ளைப்போளஞ் சொட்டுகின்ற லீலிமலர்கள்.
உன்னதப்பாட்டு 5 : 14 (RCTA)
அவர் கைகள் மாணிக்கப் பரல்கள் பதிக்கப்பட்ட தங்க உருளைகள்; அவர் வயிறு நீல மணிகள் பதித்த யானைத் தந்தத்தின் வேலைப்பாடு.
உன்னதப்பாட்டு 5 : 15 (RCTA)
அவர் கால்கள் பொற்பாதங்களின் மேல் நிற்கும் பளிங்குத் தூண்களுக்கு ஒப்பானவை; அவர் தோற்றம் லீபானைப் போன்றது, கேதுரு மரங்களைப் போல் சிறப்பு மிக்கது.
உன்னதப்பாட்டு 5 : 16 (RCTA)
அவர் பேச்சு இணையிலா இனிமையுள்ளது, அவர் முழுவதுமே கவர்ச்சிமிக்கவர். யெருசலேமின் மங்கையரே, இவரே என் காதலர், இவரே என் துணைவர்.
❮
❯