மத்தேயு 27 : 1 (RCTA)
காலையானதும் தலைமைக்குருக்கள், மக்களின் மூப்பர் எல்லாரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர்.
மத்தேயு 27 : 2 (RCTA)
அவரைக் கட்டி நடத்திச் சென்று ஆளுநர் பிலாத்திடம் கையளித்தனர்.
மத்தேயு 27 : 3 (RCTA)
அப்போது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் தண்டனைக்கு உள்ளானதைக் கண்டு, மனம் வருந்தி, முப்பது வெள்ளிக் காசுகளையும் தலைமைக்குருக்களிடமும் மூப்பரிடமும் கொண்டுவந்து,
மத்தேயு 27 : 4 (RCTA)
"மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்" என்றான். அவர்களோ, "எங்களுக்கென்ன ? அஃது உன் பாடு" என்றனர்.
மத்தேயு 27 : 5 (RCTA)
அவனோ வெள்ளிக்காசுகளை ஆலயத்தில் எறிந்துவிட்டுப் போனான். போய் நான்றுகொண்டான்.
மத்தேயு 27 : 6 (RCTA)
தலைமைக்குருக்கள் வெள்ளிக்காசுகளை எடுத்து, "காணிக்கைப் பெட்டியில் இவற்றைப் போடக்கூடாது; ஏனெனில், இவை இரத்தத்தின் விலை" என்றனர்.
மத்தேயு 27 : 7 (RCTA)
ஆலோசனை செய்து, அன்னியரை அடக்கம்செய்ய அவற்றைக்கொண்டு 'குயவன் நிலத்தை' வாங்கினர்.
மத்தேயு 27 : 8 (RCTA)
அதனால்தான் அந்நிலம் இன்றுவரை ' இரத்த நிலம் ' எனப்படுகிறது.
மத்தேயு 27 : 9 (RCTA)
"இஸ்ராயேல் மக்களால் விலைமதிக்கப் பெற்றவருடைய விலையாகிய முப்பது வெள்ளிக்காசுகளை எடுத்து,
மத்தேயு 27 : 10 (RCTA)
ஆண்டவர் எனக்குக் குறித்தபடியே குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள்" என்று எரேமியாஸ் இறைவாக்கினர் கூறியது அப்பொழுது நிறைவேறியது.
மத்தேயு 27 : 11 (RCTA)
இயேசு ஆளுநர்முன் நின்றார். ஆளுநர் அவரை: "நீ யூதரின் அரசனோ ?" என்று வினவ, இயேசு, "நீர்தாம் சொல்கிறீர்" என்றார்.
மத்தேயு 27 : 12 (RCTA)
தலைமைக்குருக்களும் மூப்பரும் சாட்டிய குற்றங்களுக்கு அவர் மறுமொழி ஒன்றும் கூறவில்லை.
மத்தேயு 27 : 13 (RCTA)
அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி, "உனக்கு எதிராக இத்தனைச் சான்றுகள் கூறுகிறார்களே; உன் காதில் விழவில்லையா ?" என்று கேட்டார்.
மத்தேயு 27 : 14 (RCTA)
அவரோ ஒன்றுக்கும் பதில் சொல்லவில்லை. அதைக் கண்டு ஆளுநர் மிகவும் வியப்புற்றான்.
மத்தேயு 27 : 15 (RCTA)
திருவிழாதோறும் மக்கள் விரும்பும் ஒரு குற்றவாளியை ஆளுநர் விடுதலைசெய்வது வழக்கம்.
மத்தேயு 27 : 16 (RCTA)
பரபாஸ் என்ற பேர்போன கைதி ஒருவன் இருந்தான்.
மத்தேயு 27 : 17 (RCTA)
எனவே, மக்கள் ஒன்றுகூடினபோது, பிலாத்து, "நான் யாரை விடுதலைசெய்ய வேண்டும் என்கிறீர்கள் ? பரபாசையா, மெசியா என்னும் இயேசுவையா ?" என்று கேட்டார்.
மத்தேயு 27 : 18 (RCTA)
ஏனெனில், அவர்கள் அவரைக் கையளித்தது பொறாமையால்தான் என்று அறிந்திருந்தார்.
மத்தேயு 27 : 19 (RCTA)
அவர் நீதியிருக்கைமீது வீற்றிருந்தபொழுது அவர் மனைவி அவரிடம் ஆளனுப்பி, "அந்நீதிமானின் காரியத்தில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில், அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்" என்று கூறினாள்.
மத்தேயு 27 : 20 (RCTA)
தலைமைக்குருக்களும் மூப்பரும் பரபாசை விடுவிக்கவும், இயேசுவைத் தொலைக்கவும் கேட்கும்படி மக்களை ஏவிவிட்டனர்.
மத்தேயு 27 : 21 (RCTA)
ஆளுநர், "இவ்விருவரில் யாரை உங்களுக்கு நான் விடுதலையாக்க வேண்டும் என்கிறீர்கள் ?" என்று அவர்களைக் கேட்டார். அவர்களோ, "பரபாசை" என்றனர்.
மத்தேயு 27 : 22 (RCTA)
பிலாத்து, "அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்யட்டும் ?" என்றார். எல்லாரும், "அவன் சிலுவையில் அறையப்படட்டும்" என்றனர்.
மத்தேயு 27 : 23 (RCTA)
ஆளுநர், "இவன் செய்த தீங்கு என்ன ?" என்று அவர்களைக் கேட்டார். அவர்களோ, "சிலுவையில் அறையப்படட்டும்" என்று இன்னும் உரக்கக் கூச்சலிட்டனர்.
மத்தேயு 27 : 24 (RCTA)
பிலாத்து தம்மால் ஒன்றும் ஆகவில்லை என்றும், அதற்கு மாறாகக் கலகமே ஏற்படுகிறதென்றும் கண்டு, தண்ணீர் எடுத்து மக்கள்முன்னிலையில், "இவனுடைய இரத்தத்தின் மட்டில் நான் குற்றம் அற்றவன்; அது உங்கள் பாடு" எனக் கூறிக் கைகழுவினார்.
மத்தேயு 27 : 25 (RCTA)
அதற்கு மக்கள் அனைவரும், "இவன் இரத்தம் எங்கள்மேலும், எங்கள் பிள்ளைகள்மேலும் இருக்கட்டும்" என்றனர்.
மத்தேயு 27 : 26 (RCTA)
பின்னர், அவர்களுக்கு இசைந்து பரபாசை விடுதலைசெய்தார். இயேசுவையோ சாட்டையால் அடித்துச் சிலுவையில் அறையும்படி கையளித்தார்.
மத்தேயு 27 : 27 (RCTA)
ஆளுநருடைய படைவீரர் இயேசுவை அரண்மனைக்கு நடத்திச் சென்று அங்கே இருந்த பட்டாளத்தினர் எல்லாரையும் அவர்முன் ஒன்றுசேர்த்தனர்.
மத்தேயு 27 : 28 (RCTA)
அவருடைய ஆடைகளைக் களைந்து செந்நிறப் போர்வையை அவருக்குப் போர்த்தினர்;
மத்தேயு 27 : 29 (RCTA)
முள்ளால் ஒரு முடியைப் பின்னி அவர் தலையில் வைத்தனர்; வலக்கையில் ஒரு பிரம்பைக் கொடுத்தனர். அவர்முன் முழந்தாளிட்டு, "யூதரின் அரசே, வாழி" என்று எள்ளி நகையாடினர்.
மத்தேயு 27 : 30 (RCTA)
அவர்மேல் துப்பிப் பிரம்பை எடுத்து அவரைத் தலையிலடித்தனர்.
மத்தேயு 27 : 31 (RCTA)
அவரை எள்ளி நகையாடியபின் அப்போர்வையைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து, அவரைச் சிலுவையில் அறையக் கூட்டிச் சென்றனர்.
மத்தேயு 27 : 32 (RCTA)
வெளியே செல்லுகையில் சீரேனே ஊரானாகிய சீமோன் என்ற ஒருவனைக் கண்டனர். அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினர்.
மத்தேயு 27 : 33 (RCTA)
மண்டை ஓடு எனப் பொருள்படும் கொல்கொத்தா என்னும் இடத்துக்கு வந்தனர்.
மத்தேயு 27 : 34 (RCTA)
கசப்புக் கலந்த திராட்சை இரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தனர். அவரோ அதைச் சுவைத்தபின் குடிக்க விரும்பவில்லை.
மத்தேயு 27 : 35 (RCTA)
அவரைச் சிலுவையில் அறைந்த பின்னர், சீட்டுப்போட்டு அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர்.
மத்தேயு 27 : 36 (RCTA)
பின்னர், உட்கார்ந்து காவல்காத்தனர்.
மத்தேயு 27 : 37 (RCTA)
அவருடைய தலைக்கு மேல் அவரைப் பற்றிய குற்ற அறிக்கையை வைத்தனர். அதில், "இவன் யூதரின் அரசன் இயேசு" என்று எழுதியிருந்தது.
மத்தேயு 27 : 38 (RCTA)
அவருக்கு வலப்பக்கத்தில் ஒருவனும், இடப்பக்கத்தில் ஒருவனுமாகக் கள்வர் இருவரை அவருடன் சிலுவையில் அறைந்தார்கள்.
மத்தேயு 27 : 39 (RCTA)
அவ்வழியே சென்றவர்கள் தலையை ஆட்டி,
மத்தேயு 27 : 40 (RCTA)
"ஆலயத்தை இடித்து மூன்று நாட்களில் கட்டுவோனே, உன்னையே காப்பாற்றிக்கொள். நீ கடவுள்மகனாய் இருந்தால் சிலுவையிலிருந்து இறங்கி வா" என்று அவரைப் பழித்தனர்.
மத்தேயு 27 : 41 (RCTA)
அவ்வாறே தலைமைக்குருக்கள் மறைநூல் அறிஞரோடும் மூப்பரோடும் சேர்ந்து அவரை எள்ளி நகையாடி,
மத்தேயு 27 : 42 (RCTA)
பிறரைக் காப்பாற்றிய இவன் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. இவன் இஸ்ராயேலின் அரசனாம்! இப்பொழுது சிலுவையினின்று இறங்கட்டும், இவனை நம்புவோம்.
மத்தேயு 27 : 43 (RCTA)
கடவுளை நம்பியிருந்தான்; அவருக்கு இவன்மேல் பிரியமிருந்தால் இப்பொழுது விடுவிக்கட்டும். 'நான் கடவுள்மகன்' என்றானே" எனக் கூறினர்.
மத்தேயு 27 : 44 (RCTA)
அவ்வாறே அவருடன் அறையுண்ட கள்வரும் அவர் மேல் வசை கூறினர்.
மத்தேயு 27 : 45 (RCTA)
நண்பகல் தொடங்கி மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று.
மத்தேயு 27 : 46 (RCTA)
ஏறக்குறைய மூன்று மணிக்கு இயேசு, "ஏலி, ஏலி, லெமா சபக்தானி" - அதாவது "என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் ?" - என்று உரக்கக் கூவினார்.
மத்தேயு 27 : 47 (RCTA)
அங்கே நின்றவர்களுள் சிலர் அதைக் கேட்டு, "இவன் எலியாசைக் கூப்பிடுகிறான்" என்றனர்.
மத்தேயு 27 : 48 (RCTA)
உடனே அவர்களுள் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்துக் காடியில் தோய்த்து, ஒரு கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.
மத்தேயு 27 : 49 (RCTA)
மற்றவர்களோ, "பொறு, எலியாஸ் இவனைக் காப்பாற்ற வருவாரா, பார்ப்போம்" என்றனர்.
மத்தேயு 27 : 50 (RCTA)
இயேசு மறுபடியும் உரக்கக் கத்தி ஆவி துறந்தார்.
மத்தேயு 27 : 51 (RCTA)
இதோ! ஆலயத்தின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. நிலம் நடுங்கியது. பாறைகள் வெடித்தன.
மத்தேயு 27 : 52 (RCTA)
கல்லறைகள் திறக்கவே, துஞ்சிய பரிசுத்தர்களின் உடல்கள் பல எழுந்தன.
மத்தேயு 27 : 53 (RCTA)
அவர் உயிர்த்தெழுந்தபின் இவர்கள் கல்லறையை விட்டுத் திரு நகருக்கு வந்து பலருக்குத் தோன்றினார்கள்.
மத்தேயு 27 : 54 (RCTA)
நூற்றுவர்தலைவனும் அவனுடன் இயேசுவைக் காவல் காத்துக்கொண்டிருந்தோரும் நிலநடுக்கத்தையும் நடந்தது அனைத்தையும் கண்டு மிகவும் அஞ்சி, "உண்மையில் இவர் கடவுளின் மகனாயிருந்தார்" என்றனர்.
மத்தேயு 27 : 55 (RCTA)
கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்தொடர்ந்து அவருக்குப் பணிவிடை புரிந்த பெண்கள் பலர் அங்கே இருந்தனர். தொலைவில் நின்றே பார்த்துக்கொண்டு இருந்தனர்.
மத்தேயு 27 : 56 (RCTA)
அவர்களுள் மதலென் மரியாளும், யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாயான மரியாளும், செபெதேயுவின் மக்களின் தாயும் இருந்தனர்.
மத்தேயு 27 : 57 (RCTA)
மாலையானதும் அரிமத்தியா ஊராரான சூசை என்னும் செல்வர் ஒருவர் வந்தார். அவரும் இயேசுவின் சீடர்.
மத்தேயு 27 : 58 (RCTA)
அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதை அவருக்கு அளித்துவிடக் கட்டளையிட்டார்.
மத்தேயு 27 : 59 (RCTA)
சூசை உடலை எடுத்துத் தூயகோடித் துணியில் சுற்றி,
மத்தேயு 27 : 60 (RCTA)
தமக்கெனப் பாறையில் குடைந்திருந்த ஒரு புதுக் கல்லறையில் வைத்தார்; ஒரு பெரிய கல்லைப் புரட்டி, கல்லறையின் வாயிலில் வைத்துவிட்டுப் போனார்.
மத்தேயு 27 : 61 (RCTA)
அங்கே மதலேன் மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிரே அமர்ந்திருந்தனர்.
மத்தேயு 27 : 62 (RCTA)
மறுநாள், அதாவது, ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக்குருக்களும் பரிசேயரும் பிலாத்திடம் கூடிவந்து,
மத்தேயு 27 : 63 (RCTA)
"ஐயா, அந்த வஞ்சகன் உயிருடன் இருந்தபொழுது ' மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழுவேன் ' என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது.
மத்தேயு 27 : 64 (RCTA)
ஒருவேளை அவனுடைய சீடர் வந்து அவன் உடலைத் திருடிக்கொண்டு போய்விட்டு, ' இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார் ' என்று மக்களிடம் சொல்லக்கூடும். அப்பொழுது முந்தின வஞ்சனையைவிடப் பிந்தினது மோசமாயிருக்கும். இது நிகழாதபடி கல்லறையை மூன்றாம் நாள்வரை பத்திரப்படுத்தக் கட்டளையிடும்" என்றனர்.
மத்தேயு 27 : 65 (RCTA)
பிலாத்தோ அவர்களை நோக்கி, "உங்களிடம் காவல்காரர் உண்டே, போய் உங்களுக்குத் தெரிந்தபடி பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார்.
மத்தேயு 27 : 66 (RCTA)
அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரையிட்டுக் காவலரை வைத்துக் கல்லறையைப் பத்திரப்படுத்தினர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66

BG:

Opacity:

Color:


Size:


Font: