எரேமியா 31 : 1 (RCTA)
ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: அக்காலத்தில், இஸ்ராயேலின் எல்லாக் குடும்பங்களுக்கும் நாமே கடவுளாய் இருப்போம்; அவர்கள் நம் மக்களாய் இருப்பார்."
எரேமியா 31 : 2 (RCTA)
ஆண்டவர் கூறுகிறார்: "வாளுக்குத் தப்பிப் பிழைத்த ஒரு மக்களினம், பாலைநிலத்தில் நம் அருளைக் கண்டடைந்தது; இஸ்ராயேல் இளைப்பாற்றியைத் தேடிய போது,
எரேமியா 31 : 3 (RCTA)
ஆண்டவர் அவனுக்குத் தொலைவில் தோன்றினார்; முடிவில்லாத அன்பினால் உன்மேல் அன்பு வைத்தோம், ஆதலால் உனக்குத் தொடர்ந்து அன்பு செய்கிறோம்.
எரேமியா 31 : 4 (RCTA)
இஸ்ராயேலாகிய கன்னிப் பெண்ணே, உன்னை நாம் மீண்டும் கட்டுவோம், நீ கட்டப்படுவாய்; மீண்டும் நீ மேளத்தோடு மகிழ்ச்சி கொண்டாடுவாரோடு ஆடிப்பாடி வெளிப்படுவாய்.
எரேமியா 31 : 5 (RCTA)
சமாரியா நாட்டு மலைகளின் மேல் மீண்டும் நீ திராட்சைக் கொடிகளை நடுவாய்; நடுகிறவர்கள் நடுவார்கள், அதன் கனிகளை உண்டு களிப்பார்கள்;
எரேமியா 31 : 6 (RCTA)
நாள் வரும்; அப்போது எப்பிராயீம் மலையில் காவலர், 'எழுந்து வாருங்கள், சீயோனுக்கு நம் கடவுளாகிய ஆண்டவரிடம் செல்வோம்' என்று கூவுவார்கள்."
எரேமியா 31 : 7 (RCTA)
ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்: "யாக்கோபைக் குறித்து மகிழ்ச்சியினால் அக்களியுங்கள்; மக்களின் தலைவர்களைக் குறித்து ஆர்ப்பரியுங்கள் குரலையுயர்த்தி அறிவியுங்கள், புகழ் பாடுங்கள்: 'ஆண்டவர் தம் மக்களை மீட்டார், இஸ்ராயேலில் எஞ்சினவர்களை மீட்டார்' என்று சொல்லுங்கள்.
எரேமியா 31 : 8 (RCTA)
இதோ, வட நாட்டினின்று நாம் அவர்களை அழைத்து வருவோம்; பூமியின் கடைகோடிகளினின்று அவர்களை ஒருமிக்கச் சேர்ப்போம்; அவர்களுள் குருடரும் முடவரும் கர்ப்பவதிகளும் பிரசவப் பெண்களும் இருப்பார்கள்; அவர்கள் எல்லாரும் சேர்ந்து பெருங் கூட்டமாய்த் திரும்பி வருவார்கள்.
எரேமியா 31 : 9 (RCTA)
அவர்கள் அழுகையோடு திரும்பி வருவார்கள்; நாமோ இரக்கத்தோடு அவர்களை அழைத்து வருவோம்; நீரோடைகளின் அருகிலேயே அவர்களை நடக்கச் செய்வோம்; இடறாத செம்மையான நேர் வழியில் நடத்தி வருவோம்; ஏனெனில் இஸ்ராயேலுக்கு நாமே தந்தை; எப்பிராயீமோ நமக்குத் தலைப்பேறான பிள்ளை.
எரேமியா 31 : 10 (RCTA)
புறவினத்தாரே, ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்: கேட்டுத் தொலைவிலுள்ள தீவுகளுக்கு அறிவியுங்கள்: 'இஸ்ராயேலைச் சிதறடித்தவர் அவர்களைச் சேர்ப்பார், ஆயன் மந்தையைக் காப்பது போல் அவர்களைக் காப்பார்' என்று சொல்லுங்கள்.
எரேமியா 31 : 11 (RCTA)
ஏனெனில் ஆண்டவர் யாக்கோபை மீட்டார்; வலியவன் கையினின்று அவனை விடுவித்தார்.
எரேமியா 31 : 12 (RCTA)
அவர்கள் வந்து, சீயோனின் உச்சியில் பாடிப் போற்றுவார்கள், ஆண்டவர் அவர்களுக்கு அளிக்கும் நன்மைகளாகிய கோதுமை, திராட்சை ரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், மாட்டு மந்தைகள் ஆகியவற்றை நாடிக் கூட்டமாய் ஓடி வருவார்கள்; அவர்களுடைய வாழ்க்கை நீர்வளம் மிக்க நிலம் போலிருக்கும்; இனி அவர்கள் வருந்த மாட்டார்கள்.
எரேமியா 31 : 13 (RCTA)
அப்போது கன்னிப் பெண்கள் நாட்டிய மாடிக் களிப்பார்கள்; இளைஞரும் முதியோரும் அவ்வாறே மகிழ்வார்கள்; அவர்களுடைய அழுகையை அக்களிப்பாக மாற்றுவோம்; அவர்களைத் தேற்றித் துயரத்தைப் போக்கி, அவர்களை மகிழச் செய்வோம்.
எரேமியா 31 : 14 (RCTA)
அர்ச்சகர்களின் உள்ளத்தைச் செழுமையானவற்றால் பூரிக்கச் செய்வோம்; நம் மக்கள் நம்முடைய நன்மைத்தனத்தால் நிரப்பப்படுவார்கள், என்கிறார் ஆண்டவர்."
எரேமியா 31 : 15 (RCTA)
ஆண்டவர் கூறுகிறார்: "ராமாவிலே கூக்குரல் கேட்டது; பேரழுகையும் ஒப்பாரியுமாக இருந்தது; இராக்கேல் தன் குழந்தைகளுக்காக அழுது கொண்டு, அவை இல்லாமையால் ஆறுதல் பெற விரும்பவில்லை."
எரேமியா 31 : 16 (RCTA)
ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: "நீ வீறிட்டழாதே, கண்ணீர் வடிக்காதே; உன் வேலைக்குத் தக்க கைம்மாறு கிடைக்கும், பகைவனின் நாட்டிலிருந்து அவர்கள் வருவார்கள்,
எரேமியா 31 : 17 (RCTA)
எதிர்காலத்திற்கு உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் திரும்பத் தங்கள் சொந்த நாட்டிற்கே வந்து சேருவார்கள், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 31 : 18 (RCTA)
எப்பிராயீம் அழுது புலம்பியதை நாம் கேட்டோம்: 'நான் அடங்காத காளை போல் இருந்தேன், நீர் என்னைத் தண்டித்தீர், நான் தண்டனை பெற்றேன்; நீர் என்னைத் திரும்பக் கொண்டு வாரும், நானும் திரும்புவேன்; ஏனெனில் என் கடவுளாகிய ஆண்டவர் நீரே.
எரேமியா 31 : 19 (RCTA)
நான் உம்மை விட்டு விலகிய பின் மனம் வருந்தினேன்; எனக்கு நீர் அறிவுறுத்திய பின் நான் மார்பில் அறைந்து கொண்டேன்; என் வாலிப வயதின் அவமானத்தைக் கண்டு நான் வெட்கி நாணி மயங்கினேன்' என்றழுதான்.
எரேமியா 31 : 20 (RCTA)
எப்பிராயீம் நம் அருமையான மகனல்லனோ? அவன் நம்முடைய அன்புக் குழந்தையன்றோ? நாம் அவனை அச்சுறுத்தும் போதெல்லாம் அவனை நினைத்துக் கொள்ளுகிறோம். அவனை நினைத்து நம் உள்ளம் உருகுகின்றது; அவனுக்கு நாம் திண்ணமாய் இரக்கம் காட்டுவோம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 31 : 21 (RCTA)
உனக்கு வழியடையாளங்களை நிறுத்திக்கொள்; கைகாட்டிகளை உனக்கென நாட்டிக்கொள்; நீ நடத்துபோன வழியாகிய நெடுஞ்சாலையைக் கவனித்துப்பார்; இஸ்ராயேல் என்னும் கன்னிப் பெண்ணே, திரும்பிவா; உன் நகரங்களாகிய இவற்றுக்குத் திரும்பிவா.
எரேமியா 31 : 22 (RCTA)
பிரமாணிக்கமில்லாத மகளே, இன்னும் எத்துணைக் காலம் நீ இவ்வாறு தத்தளிப்பாய்? ஏனெனில் பூமியில் ஆண்டவர் புதுமையான ஒன்றைப் படைக்கிறார்: மனைவி தன் கணவனைத் தேடிச் செல்கிறாள்."
எரேமியா 31 : 23 (RCTA)
இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறும் வாக்கு இதுவே: "நாம் அவர்கள் முன்னைய நன்னிலைக்குத் திரும்பக் கொண்டு வரும்போது, யூதாவின் நாட்டிலும் அதன் நகரங்களிலும், 'நீதியின் இருப்பிடமே, பரிசுத்த மலையே, ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக' என்று இன்னும் மக்கள் சொல்வார்கள்.
எரேமியா 31 : 24 (RCTA)
உழவர்களும், மந்தைகளை மேய்க்கும் இடையர்களும், யூதா நாட்டிலும், அதன் பட்டணங்களிலும் ஒருமித்துக் குடியிருப்பார்கள்.
எரேமியா 31 : 25 (RCTA)
சோர்ந்த உள்ளத்தை நாம் ஊக்குவோம்; பசித்தவன் எவனையும் திருப்தியாக்குவோம்."
எரேமியா 31 : 26 (RCTA)
அப்போது நான் விழித்தெழுந்து பார்த்தேன்; என் உறக்கம் எனக்கு இன்பமாயிருந்தது.
எரேமியா 31 : 27 (RCTA)
"இதோ, நாட்கள் வருகின்றன; அப்போது இஸ்ராயேலின் வீட்டிலும் யூதாவின் வீட்டிலும் மனிதரையும் மிருகங்களையும் விதைகளைப் போல விதைப்போம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 31 : 28 (RCTA)
பிடுங்கவும் தகர்க்கவும் சிதறடிக்கவும் அழிக்கவும் துன்பப்படுத்தவும் அவர்களை எப்படிக் கவனித்துக் கெண்டிருந்தோமோ, அப்படியே அவர்களைக் கட்டி நிலைநாட்டவும் கவனித்துக் கொண்டிருப்போம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 31 : 29 (RCTA)
தன் செயலுக்குத் தானே பொறுப்பாளி: "அந்நாட்களில் அவர்கள், 'தந்தையர் திராட்சைக் காய் தின்ன, பிள்ளைகளுக்குப் பல் கூசிற்றாம்' என்று இனிச் சொல்ல மாட்டார்கள்.
எரேமியா 31 : 30 (RCTA)
ஆனால் ஒவ்வொருவனும் அவனவன் பாவத்திற்காகச் சாவான்; திராட்சைக் காயைத் தின்னும் மனிதனுக்குத் தான் பற்கள் கூசும்.
எரேமியா 31 : 31 (RCTA)
"இதோ, நாட்கள் வருகின்றன; அப்போது நாம் இஸ்ராயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை செய்வோம், என்கிறார் ஆண்டவர்;
எரேமியா 31 : 32 (RCTA)
இது, நாம் எகிப்து நாட்டினின்று விடுவித்து, இவர்களுடைய தந்தையரைக் கைபிடித்து நடத்தி வந்த போது நாம் அவர்களோடு செய்த உடன் படிக்கையைப் போன்றிராது; நாம் அவர்களின் தலைவராய் இருந்தும் நம் உடன்படிக்கையை அவர்கள் முறித்துப் போட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 31 : 33 (RCTA)
அந்நாள் வரும் போது நாம் இஸ்ராயேல் வீட்டாரோடு செய்யப்போகும் உடன்படிக்கை இதுவே: நமது திருச்சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்போம்; அவர்களுடைய இதயங்களின் மேல் அதை எழுதுவோம்; நாம் அவர்களின் கடவுளாய் இருப்போம்; அவர்கள் நம் மக்களாய் இருப்பர், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 31 : 34 (RCTA)
இனி ஒவ்வொருவனும் தன் அயலானையோ, தன் சகோதரனையோ பார்த்து, 'ஆண்டவரை அறிந்து கொள்' என்று சொல்லிக் கற்பிக்க மாட்டான்; ஏனெனில், அவர்களுள் சிறியவன் முதல் பெரியவன் வரை அனைவரும் என்னை அறிந்து கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர்; ஏனெனில் அவர்களுடைய அக்கிரமத்தை நாம் மன்னித்து விடுவோம், அவர்களுடைய பாவத்தை இனி மேல் நினைவுகூரவே மாட்டோம்."
எரேமியா 31 : 35 (RCTA)
இஸ்ராயேல் நிலைத்திருக்கும்: ஆண்டவர் சொல்வதைக் கேளுங்கள்; அவர் பகலில் ஒளி வீசக் கதிரவனையும், இரவில் ஒளி கொடுக்க நிலவின் குறிப்பிட்ட முறைமையையும் விண்மீன்களையும் தருகிறவர்; அவர் கடலைக் கொந்தளிக்கச் செய்து அலைகளை ஒலிக்கச் செய்கிறவர்- சேனைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர்: அவர் சொல்வது:
எரேமியா 31 : 36 (RCTA)
மேற்படி ஒழுங்கு முறைமை நம் முன்னிலையிலிருந்து நீங்கிப் போகுமாயின், இஸ்ராயேலின் சந்ததியும் நம் முன்னிலையில் ஒரு தனி இனமாய் என்றென்றும் இல்லாமற் போகும். என்கிறார் ஆண்டவர்."
எரேமியா 31 : 37 (RCTA)
ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: "மேலே வான்வெளி அளக்கப்படுமாயின் கீழே பூமியின் அடிப்படைகள் சோதிக்கப்படக் கூடுமாயின், நமக்கு விரோதமாய் இஸ்ராயேல் மக்கள் செய்தவற்றை முன்னிட்டு அதன் சந்ததியார் அனைவரையும் நாம் (முற்றிலும்) கைவிடுவோம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 31 : 38 (RCTA)
இதோ, நாட்கள் வருகின்றன; ஆண்டவருக்காக இப்பட்டணம் அனானியேல் கோபுரம் முதல் மூலை வாயில் வரையில் கட்டப்படும், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 31 : 39 (RCTA)
அதனை அளக்கும் நூல் நேராகக் காரேபு குன்று வரையில் போய்க் கோவா அருகில் திரும்பும்.
எரேமியா 31 : 40 (RCTA)
பிணங்களும் சாம்பலும் நிறைந்த பள்ளத்தாக்கு முழுவதும், கேதிரோன் அருவி வரையில் உள்ள நிலப்பரப்பும், கிழக்கே உள்ள குதிரை வாயிலின் மூலை வரையிலும் அதனுள் அடங்கும். ஆண்டவருக்காக அர்ச்சிக்கப்பட்ட இந்த இடம் இனி என்றும் அழியாது, இடிபடாது."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40

BG:

Opacity:

Color:


Size:


Font: