ஏசாயா 47 : 1 (RCTA)
பபிலோன் என்னும் மகளே, கன்னிப் பெண்ணே, அரியணை விட்டிறங்கிப் புழுதியில் உட்கார்; தரை மீது அமர்ந்துகொள்; கல்தேயர் மகளுக்கு அரியணை கிடையாது; ஏனெனில், மெல்லியலாள், இளநங்கை என இனி நீ அழைக்கப் படமாட்டாய்.
ஏசாயா 47 : 2 (RCTA)
எந்திரக் கல்லைச் சுற்றி, மாவரைக்கக் கடவாய், முக்காட்டை அகற்றிவிடு; தோள் மீதுள்ள ஆடையை நீக்கிவிடு; உன் உடையைத் தூக்கிக் கொண்டு ஆற்றைக் கட.
ஏசாயா 47 : 3 (RCTA)
உனது நிருவாணம் வெளிப்படும், உன் மானக்கேடு காணப்படும்; இங்ஙனம் நாம் பழிவாங்குவோம், மனிதன் எவனும் நம்மை எதிர்க்க முடியாது.
ஏசாயா 47 : 4 (RCTA)
நம்முடைய மீட்பர்- சேனைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர்- இஸ்ராயேலின் பரிசுத்தர் ஆவர்.
ஏசாயா 47 : 5 (RCTA)
கல்தேயரின் மகளே, இருளில் நுழைந்து மவுனமாய் உட்கார்ந்திரு; ஏனெனில், அரசுகளின் தலைவி என இனி நீ அழைக்கப்படமாட்டாய்.
ஏசாயா 47 : 6 (RCTA)
நம் மக்கள் மீது கோபமுற்றோம், நம் உரிமைச் சொத்தைப் பங்கப்படுத்தினோம்; அவர்களை உன் கையில் விட்டுவிட்டோம், அவர்களுக்கு நீ இரக்கம் காட்டவில்லை; வயதில் முதிர்ந்தவர் மேல் கூட உன் நுகத்தை வைத்து அழுத்தினாய்
ஏசாயா 47 : 7 (RCTA)
என்றென்றும் நான் தலைவியாய் விளங்குவேன்" என்றாய்; ஆதலால் நீ இவற்றை உன் உள்ளத்தில் சிந்தித்துப் பார்க்கவில்லை; உனக்கு வரவேண்டியதை எண்ணிப் பார்க்கவில்லை.
ஏசாயா 47 : 8 (RCTA)
மென்மையானவளே, கலக்கமின்றி வாழ்பவளே, "நானே தனிப்பெரும் அரசி, என்னையன்றி வேறில்லை; நான் கைம்பெண்ணாய் ஆகமாட்டேன், மலடியாகவும் இருக்கமாட்டேன்" என்று உன் உள்ளத்தில் எண்ணுபவளே, நாம் சொல்வதை இப்போது கேள்:
ஏசாயா 47 : 9 (RCTA)
மலட்டுத்தன்மை, கைம்மை இவ்விரண்டும் நெடிப்பொழுதில் ஒரே நாளில் உனக்கு நேரும்; நீ கணக்கற்ற பில்லி சூனியங்களைக் கையாண்டாலும், உன் மந்திரவாதங்களுக்கு மிதிமிஞ்சிய ஆற்றலிருப்பினும், இந்த தீமைகளெல்லாம் உனக்கு வந்தே தீரும்.
ஏசாயா 47 : 10 (RCTA)
என்னைப் பார்க்கிறவர் ஒருவருமில்லை" என்று சொல்லிக் கொண்டு, அஞ்சாமல் கொடுமைகளைச் செய்துவந்தாய்; உன் ஞானமும் உன் கல்வியறிவும் உன்னை மோசஞ் செய்து விட்டன; நீயோ, "நானே தனிப்பெருந் தலைவி, என்னையன்றி வேறில்லை" என்று உன் உள்ளத்தில் எண்ணினாய்.
ஏசாயா 47 : 11 (RCTA)
தீமை உன் மேல் திண்ணமாய் வரும், எங்கிருந்து வருமென உனக்குத் தெரியாது; வேதனை உன் மேல் பெருக்கெடுத்து வரும், அதற்குப் பரிகாரம் தேட உன்னால் இயலாது; அழிவு உன் மேல் திடீரென விழும், அதைப் பற்றி ஒன்றும் அறியமாட்டாய்.
ஏசாயா 47 : 12 (RCTA)
உன் மந்திரவாதிகளோடும், நீ இளமை முதல் உன் தொழிலாய்க் கொண்டிருக்கும் பில்லி சூனியங்களோடும் நின்றுகொள்; அவை உனக்குப் பயன்படுமோ என்றும், அவற்றால் இன்னும் ஆற்றல் பெறுவாயோ என்றும் பார்ப்போம்.
ஏசாயா 47 : 13 (RCTA)
உன் ஆலோசனைகளின் எண்ணிக்கையால் சோர்வடைந்தாய், கிரகங்களைக் கணிக்கும் சோதிட நூல் அறிஞரும், நாள் நட்சத்திரத்தை ஆராய்ந்து, எதிர் காலத்தை உனக்குச் சொல்பவரும், இப்போது வரட்டும், வந்து உன்னை மீட்கட்டும் பார்ப்போம்.
ஏசாயா 47 : 14 (RCTA)
இதோ, அவர்கள் வைக்கோலைப் போல் இருக்கிறார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; தீயின் அழலினின்று அவர்கள் தங்கள் உயிரை விடுவிக்க மாட்டார்கள்; குளிர்காயப் பயன்படும் தீப்பொறியில்லை இவை, எதிரே உட்காரத் தக்க நெருப்புமில்லை இது.
ஏசாயா 47 : 15 (RCTA)
யாரோடு உழைத்துழைத்துச் சோர்ந்தாயோ அவர்களும், இளமை முதல் உன்னோடு வணிகம் நடத்தியவர்களும், ஒவ்வொருவரும் ஒரு திசையில் ஓட்டமெடுப்பர், உன்னை மீட்க ஒருவனும் இருக்க மாட்டான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15

BG:

Opacity:

Color:


Size:


Font: