ஏசாயா 41 : 1 (RCTA)
தீவுகளே, என் முன் மௌனமாயிருங்கள், மக்களினங்கள் வலிமையைப் புதுப்பிக்கட்டும்; அருகில் நெருங்கி வந்து பேசட்டும்; வழக்காட ஒருங்கே நாம் நெருங்கி வருவோம்.
ஏசாயா 41 : 2 (RCTA)
செல்லுமிடமெல்லாம் வெற்றி எதிர்கொள்ளும் வீரரைக் கீழ்த்திசையில் எழுப்பியவர் யார்? அவருக்கு மக்களினங்களைக் கையளித்து, அரசர்களை அவருக்குக் கீழ்ப்படுத்தியவர் யார்? அவருடைய வாள் அவர்களை தவிடு பொடியாக்குகிறது, அவரது வில் அவர்களைப் புயலில் அகப்பட்ட வைக்கோலைப் போலச் சிதைக்கிறது.
ஏசாயா 41 : 3 (RCTA)
அவர்களைத் துரத்திச் செல்கிறார், கலக்கமின்றித் தம் வழியில் முன்னேறுகிறார், அவருடைய அடிச்சுவடுகள் வழியில் காணப்படா.
ஏசாயா 41 : 4 (RCTA)
இவற்றையெல்லாம் செயல்படுத்தி முடித்தவர் யார்? தொடக்கத்திலிருந்து தலைமுறைகளை அழைத்தவரே அன்றோ? முதலும் முடிவுமாயிருக்கிற ஆண்டவராகிய நாமே இவற்றைச் செய்தோம்.
ஏசாயா 41 : 5 (RCTA)
தீவுகள் இவற்றைக் கண்டன, கண்டு அஞ்சின; பூமியின் எல்லைகள் பார்த்துத் திகில் கொண்டன; அருகில் நெருங்கி அணுகி வந்தன.
ஏசாயா 41 : 6 (RCTA)
அவனவன் தன் அயலானுக்குத் துணையாய் நிற்பான், "தைரியமாயிரு" என்று தன் சகோதரனுக்குச் சொல்வான்.
ஏசாயா 41 : 7 (RCTA)
கன்னான் தட்டானுக்கு ஊக்கமூட்டுவான், சுத்தியால் தட்டுபவன் சம்மட்டியால் அடிப்பவனிடம், பொருந்தும்படி பற்ற வைத்து, "நன்று" என்று சொல்லி உற்சாகப்படுத்துவான்; அசையாதபடி அதை ஆணிகளால் இணைப்பான்.
ஏசாயா 41 : 8 (RCTA)
ஆனால் நம் ஊழியனாகிய இஸ்ராயேலே, நாம் தேர்ந்தெடுத்த யாக்கோபே, நம் அன்பன் ஆபிரகாமின் வழித்தோன்றலே,
ஏசாயா 41 : 9 (RCTA)
உலகின் கடைசிப் பகுதிகளிலிருந்து உன்னைக் கூட்டி வந்தோம், தொலைநாடுகளிலிருந்து உன்னை வரவழைத்தோம்; "நீ நம்முடைய ஊழியன்; உன்னைத் தேர்ந்து கொண்டோம், உன்னைத் தள்ளிவிட வில்லை" என்றுனக்குச் சொன்னோம்.
ஏசாயா 41 : 10 (RCTA)
நீ அஞ்சாதே, ஏனெனில் நாம் உன்னோடிருக்கிறோம்; நம்பிக்கையில் தளராதே, ஏனெனில் நாம் உன் கடவுள்; உன்னை உறுதிப்படுத்துவோம், உனக்கு உதவி செய்வோம்; நம்முடைய வலக்கை உன்னைத் தாங்கிக் கொள்ளும்.
ஏசாயா 41 : 11 (RCTA)
இதோ, உனக்கெதிராய்ப் போர் புரிகிறவர் அனைவரும், வெட்கி நாணிப்போவார்கள்; உன்னுடன் முரண்படும் மனிதரெல்லாம் ஒன்றுமில்லாமையாய் அழிந்து போவார்கள்.
ஏசாயா 41 : 12 (RCTA)
உன்னுடைய விரோதிகளை நீ தேடுவாய், ஆனால் அவர்களைக் காணமாட்டாய்; உன்னை எதிர்த்துப் போரிடுவோர் அழிந்தொழிவார்கள்.
ஏசாயா 41 : 13 (RCTA)
ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் நாமே உன்னுடைய வலக் கையைப் பிடித்துக் கொண்டு, "அஞ்சாதே, நாமே உனக்குத் துணையாயிருப்போம்" என்று உன்னிடம் சொல்லுகின்றோம்.
ஏசாயா 41 : 14 (RCTA)
புழுவுக்கு நிகரான யாக்கோபே, அற்பமான இஸ்ராயேலே, அஞ்சவேண்டா; நாமே உனக்குத் துணை நிற்போம், என்கிறார் ஆண்டவர், இஸ்ராயேலின் பரிசுத்தரே உன் மீட்பர்.
ஏசாயா 41 : 15 (RCTA)
புதிய, கூரிய பற்களையுடைய புணையடிக்கும் எந்திரம் போல் உன்னை ஆக்குவோம்; மலைகளை மிதித்து நொறுக்குவாய், குன்றுகளைத் தவிடு பொடியாக்கிடுவாய்.
ஏசாயா 41 : 16 (RCTA)
அவற்றை நீ தூற்றுவாய், காற்று அடித்துச் செல்லும், புயல் அவற்றைச் சிதறடிக்கும்; ஆண்டவரில் நீ அக்களிப்பாய், இஸ்ராயேலின் பரிசுத்தரில் அகமகிழ்வாய்.
ஏசாயா 41 : 17 (RCTA)
ஏழைகளும் எளியவரும் தண்ணீர் தேடுகின்றனர், ஆனால் கிடைக்கவில்லை; தாகத்தால் அவர்கள் நாக்கு வறண்டுள்ளது; ஆண்டவராகிய நாம் அவர்கள் மன்றாட்டைக் கேட்போம், இஸ்ராயேலின் கடவுளாகிய நாம் அவர்களைக் கைவிட மாட்டோம்.
ஏசாயா 41 : 18 (RCTA)
மொட்டைக் குன்றுகளைப் பிளந்து ஆறுகளையும், பள்ளத் தாக்குகள் நடுவில் ஊற்றுகளையும் புறப்படச் செய்வோம்; பாலை நிலத்தை நீர் நிலைகளாகவும், வறண்ட பூமியை நீரோடைகளாகவும் ஆக்குவோம்.
ஏசாயா 41 : 19 (RCTA)
பாலை நிலத்தில் கேதுரு மரங்களையும் வேலமரம், மீர்ச்செடி, ஒலிவ மரங்களையும் உண்டாக்குவோம்; பாழ்வெளியில் தேவதாரு மரங்களையும் புன்னை மரங்களையும் ஊசியிலை மரங்களையும் வைப்போம்.
ஏசாயா 41 : 20 (RCTA)
அப்போது, ஆண்டவருடைய கையே இதைச் செய்தது, இஸ்ராயேலின் பரிசுத்தரே இதை உண்டாக்கினார் என்பதை எல்லாரும் பார்த்துத் தெரிந்து கொள்வர், சிந்தித்து ஒருங்கே கண்டுபிடிப்பர்.
ஏசாயா 41 : 21 (RCTA)
உங்கள் வழக்கை இப்பொழுது சொல்லுங்கள், என்கிறார் ஆண்டவர்; உங்கள் சார்பான சான்றுகளை எடுத்துக் காட்டுங்கள், என்கிறார் யாக்கோபின் மாமன்னர்.
ஏசாயா 41 : 22 (RCTA)
அவர்களே வரட்டும், வந்து நடக்கப் போவதை நமக்கு எடுத்துச் சொல்லி அறிவிக்கட்டும்; முன்னே நிகழ்ந்தவற்றை எடுத்துச் சொல்லுங்கள், நாம் சிந்தித்து அவற்றின் விளைவுகளை அறிந்துகொள்வோம்; அல்லது நிகழப் போவதை நீங்களே நமக்குக் கூறுங்கள்.
ஏசாயா 41 : 23 (RCTA)
நீங்கள் தெய்வங்களென நாம் அறியும் பொருட்டு, எதிர்காலத்தில் நடக்கப் போவதை அறிவியுங்கள்; நன்மையோ தீமையோ முடிந்தால் செய்யுங்கள், நாமே பார்த்து ஒருங்கே பேசிக்கொள்வோம்.
ஏசாயா 41 : 24 (RCTA)
இதோ, நீங்கள் வெறுமையினின்று புறப்பட்டவர்கள், உங்கள் செயல் ஒன்றுமில்லாமையிலிருந்து செய்யப்பட்டது, உங்களைத் தேர்ந்து கொள்பவன் அருவருப்பானதைச் செய்கிறான்.
ஏசாயா 41 : 25 (RCTA)
வடதிசையில் ஒருவனைத் தூண்டி விட்டோம், அவன் கீழ்த்திசையிலிருந்து வருவான்; அவன் நமது திருப்பெயரைப் போற்றுவான், மன்னர்களைச் சேற்றைப் போலும், குயவன் காலால் மிதித்துத் துவைக்கும் களிமண்ணைப் போலும் நடத்துவான்.
ஏசாயா 41 : 26 (RCTA)
நாம் அறியும் பொருட்டுத் தொடக்கத்திலிருந்து அறிவித்தவன் யார்? "நீ சொன்னது சரி" என்று நாம் ஒப்புக் கொள்ளும்படி முதலிலிருந்தே கூறியவன் யார்? அவ்வாறு அறிவித்தவனோ, முன்னுரைத்தவனோ யாருமில்லை, உங்கள் சொற்களைக் கேட்டவனோ எவனுமில்லை
ஏசாயா 41 : 27 (RCTA)
ஆனால், "இதோ, திரும்பி வருகிறார்கள்" என்று நாம் தாம் முதலில் சீயோனுக்கு அறிவித்தோம்; நற்செய்தித் தூதனை யெருசலேமுக்கு அனுப்பினோம்.
ஏசாயா 41 : 28 (RCTA)
நாம் கவனித்துப் பார்த்தோம்; அவர்களுள் ஆலோசனை தருபவனோ, கேள்விக்குப் பதில் சொல்பவனோ இல்லை.
ஏசாயா 41 : 29 (RCTA)
இதோ, அவர்கள் அனைவரும் ஒன்றுமில்லை; அவர்களின் செயல்கள் வீணே; அவர்களின் சிலைகள் வெறும் காற்றும் வியர்த்தமும் தான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29

BG:

Opacity:

Color:


Size:


Font: