ஏசாயா 2 : 1 (RCTA)
யூதாவையும் யெருசலேமையும் குறித்து ஆமோஸ் என்பவரின் மகனான இசையாஸ் கண்ட காட்சி.
ஏசாயா 2 : 2 (RCTA)
இறுதி நாட்களில்- ஆண்டவரின் கோயில் அமைந்துள்ள மலை மலைகளுக்கெல்லாம் உயர்ந்ததாய் நாட்டப்படும், குன்றுகளுக்கெல்லாம் மேலாக உயர்த்தப்படும், மக்களினங்கள் யாவும் அதை நோக்கி ஓடிவரும்;
ஏசாயா 2 : 3 (RCTA)
பலநாட்டு மக்கள் கூடிவந்து, "வாருங்கள், ஆண்டவரின் மலைக்கு ஏறிச் செல்வோம், யாக்கோபின் கடவுளது கோயிலுக்குப் போவோம்; தம்முடைய வழிகளை அவர் நமக்குக் கற்பிப்பார், நாமும் அவர் நெறிகளில் நடப்போம்" என்பார்கள். ஏனெனில் சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளியாகும், யெருசலேமிலிருந்தே ஆண்டவர் வாக்கு புறப்படும்.
ஏசாயா 2 : 4 (RCTA)
மக்களினங்களுக்கிடையில் அவரே தீர்ப்பிடுவார், பல்வேறு மக்களுக்கு நீதி வழங்குவார்; அவர்களோ தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள். நாட்டுக்கு எதிராய் நாடு வாள் எடுக்காது, அவர்களுக்கு இனிப் போர்ப் பயிற்சியும் அளிக்கப்படாது.
ஏசாயா 2 : 5 (RCTA)
யாக்கோபின் வீட்டாரே, வாருங்கள்; ஆண்டவரின் ஒளியிலே நாம் நடப்போம்.
ஏசாயா 2 : 6 (RCTA)
ஆம், யாக்கோபின் வீட்டாரான உம்முடைய மக்களை நீர் புறக்கணித்தீர்; ஏனெனில், அவர்கள் நடுவில் நிமித்தகம் பார்த்தல் பெருகியுள்ளது, பிலிஸ்தியரைப் போன்ற மந்திரவாதிகள் மலிந்துள்ளனர், அந்நியரோடு ஒப்பந்தம் செய்கிறார்கள்.
ஏசாயா 2 : 7 (RCTA)
அவர்கள் நாடு பொன் வெள்ளியால் நிறைந்துள்ளது, அவர்களுடைய கருவூலத்திற்கு அளவு இல்லை;
ஏசாயா 2 : 8 (RCTA)
அவர்களது நாட்டில் குதிரைப் படையும் மிகுதி, அவர்களின் தேர்ப் படைகள் எண்ணிறந்தவை. அவர்களின் நாட்டில் சிலைகள் மலிந்துள்ளன, தாங்களே செய்த கைவேலைகளை வணங்குகின்றனர்.
ஏசாயா 2 : 9 (RCTA)
ஆகவே மனிதன் தாழ்த்தப்படுவான், மக்கள் சிறுமையுறுவார்கள், அவர்களுக்கு மன்னிப்புத் தராதீர்!
ஏசாயா 2 : 10 (RCTA)
ஆண்டவருடைய அச்சம் தரும் திருமுன்னிருந்து விலகி, அவருடைய மாண்புறு மகிமையினின்று ஒதுங்கிக் கற்குகைகளில் நுழைந்து கொள்ளுங்கள், மண்ணில் பதுங்கி மறைந்து கொள்ளுங்கள்.
ஏசாயா 2 : 11 (RCTA)
இறுமாப்பான மனித கண்கள் அவமானமடையும், மனிதர்களின் செருக்கு தாழ்த்தப்படும்; ஆண்டவர் ஒருவரே அந்நாளில் உயர்த்தப்படுவார்.
ஏசாயா 2 : 12 (RCTA)
ஆம், அந்த நாள் சேனைகளின் ஆண்டவரது நாள்; பெருமையும் செருக்குமுடைய யாவற்றின் மேலும், உயர்த்தப்பட்டவை, உயர்ந்தவை அனைத்தின்மேலும்,
ஏசாயா 2 : 13 (RCTA)
லீபானில் உயர்ந்தோங்கி வளர்ந்த எல்லாக் கேதுருகளின் மேலும், பாசானில் உள்ள எல்லாக் கருவாலி மரங்கள் மேலும்,
ஏசாயா 2 : 14 (RCTA)
வானளாவிய மாமலைகள் யாவற்றின் மேலும், உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மேலும்,
ஏசாயா 2 : 15 (RCTA)
தலை நிமிர்ந்தோங்கிய கோபுரங்கள் யாவற்றின் மேலும், வலுவுடைய எல்லா மதில்களின் மேலும்,
ஏசாயா 2 : 16 (RCTA)
தர்ஸீசின் எல்லா மரக்கலங்கள் மேலும், கண்ணுக்கினிய வேலைப்பாடுகள் அனைத்தின் மேலும், அந்த நாள் வரும்.
ஏசாயா 2 : 17 (RCTA)
மனிதனின் அகந்தையெல்லாம் அடங்கும், மனிதர்களின் இறுமாப்பு தாழ்த்தப்படும்; ஆண்டவர் ஒருவரே அந்நாளில் உயர்த்தப்படுவார்.
ஏசாயா 2 : 18 (RCTA)
சிலைகள் தவிடுபொடியாக்கப்படும்;
ஏசாயா 2 : 19 (RCTA)
ஆண்டவர் உலகைத் தண்டிக்க வரும் போது, அவருடைய அச்சந்தரும் திருமுன்னிருந்து விலகி, அவருடைய மாண்புறு மகிமையினின்று ஒதுங்கி, மனிதர்கள் கற்குகைகளில் நுழைந்து கொள்வார்கள், பூமியின் குழிகளில் புகுந்து கொள்வார்கள்.
ஏசாயா 2 : 20 (RCTA)
அந் நாளில் மனிதர்கள் தாங்கள் வழிபடுவதற்காகத் தங்களுக்கெனச் செய்து வைத்திருந்த வெள்ளிச் சிலைகளையும், தங்கப் பதுமைகளையும் அகழெலிகளுக்கும் வெளவால்களுக்கும் எறிந்து விடுவார்கள்.
ஏசாயா 2 : 21 (RCTA)
ஆண்டவர் உலகைத் தண்டிக்க வரும் போது, அவருடைய அச்சந்தரும் திருமுன்னிருந்து விலகி, அவருடைய மாண்புறு மகிமையினின்று ஒதுங்கி, மனிதர்கள் பாறைகளின் வெடிப்புகளில் பதுங்கிக் கொள்வார்கள்; குன்றுகளின் பிளவுகளில் புகுந்து கொள்வார்கள்.
ஏசாயா 2 : 22 (RCTA)
மனிதனில் இனி மேல் நம்பிக்கை வைக்காதீர்கள்; அவன் உயிர் நிலையற்ற வெறும் மூச்சு தான்; மதிக்கப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்?

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

BG:

Opacity:

Color:


Size:


Font: