எபிரேயர் 1 : 1 (RCTA)
பற்பல முறையிலும் பல்வேறு வகையிலும் முற்காலத்தில் இறைவாக்கினர் வாயிலாக நம் முன்னோரிடம் பேசிய கடவுள்,
எபிரேயர் 1 : 2 (RCTA)
நாம் வாழும் இவ்விறுதி நாட்களில் நம்மிடம் தம் மகனின் வாயிலாகவே பேசியுள்ளார். இவரை எல்லாவற்றிற்கும் உரிமையாளராக்கினார். இவர் வழியாகவே உலகங்களையெல்லாம் படைத்தார்.
எபிரேயர் 1 : 3 (RCTA)
கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய உள்ளியல்பின் சாயலாகவும் விளங்கும் இவர் தம்முடைய வல்லமை மிக்க வார்த்தையால் எல்லாவற்றையும் தாங்கி வருகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்திய பின்னர் உன்னதங்களில் மகத்துவமிக்கவரின் வலப்புறத்தில் அமர்ந்துள்ளார்.
எபிரேயர் 1 : 4 (RCTA)
இவ்வாறு அவர் எவ்வளவுக்கு வான தூதர்களைவிட மேலான பெயரை உரிமையாகப் பெற்றாரோ அவ்வளவுக்கு அவர்களைவிட மேன்மை அடைந்தார்.
எபிரேயர் 1 : 5 (RCTA)
ஏனெனில் 'நீரே என் மகன், இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்' என்றும், 'நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன். அவர் எனக்கு மகனாயிருப்பார்' என்றும் எப்போதாவது வானதூதருள் யாரிடமாவது சொன்னதுண்டா?
எபிரேயர் 1 : 6 (RCTA)
மேலும் தம் தலைப்பேறானவரை இவ்வுலகிற்கு அனுப்பிவைத்தபொழுது, "கடவுளின் தூதர்கள் அனைவரும் அவரைத் தொழுவார்களாக" என்றார்.
எபிரேயர் 1 : 7 (RCTA)
வான தூதர்களைக் குறித்து, "தம் தூதர்களை ஆவிகளாகவும், தம் ஊழியர்களைத் தீயின் தழல்களாகவும் செய்கிறார்" என்று கூறுகிறார்.
எபிரேயர் 1 : 8 (RCTA)
மகனைக் குறித்துச் சொன்னதோ, "இறைவா, உம் அரியணை என்றென்றும் உளது. உம்முடைய அரசச் செங்கோல் கோணாச் செங்கோலே.
எபிரேயர் 1 : 9 (RCTA)
இறைநெறியை விரும்பினீர்; தீ நெறியை அருவருத்தீர்; ஆதலால் இறைவா, உம் கடவுள், உம் துணைவர்களினும் மேலாக உம்மை மதித்து அக்களிப்புத் தைலத்தால் உம்மை அபிஷுகம் செய்தார்."
எபிரேயர் 1 : 10 (RCTA)
மீண்டும், "ஆண்டவரே, நீரே ஆதியில் மண்ணுலகிற்கு அடித்தளம் இட்டீர். விண்ணுலகும் உமது கை வேலையே.
எபிரேயர் 1 : 11 (RCTA)
அவை அழிந்துபோம்; நீரோ நிலைத்திருக்கிறீர். அவையெல்லாம் ஆடைபோல் பழமையாய்ப்போம்.
எபிரேயர் 1 : 12 (RCTA)
போர்வையைப்போல் அவற்றைச் சுருட்டிப் போடுவீர். ஆடைபோல் அவை மாற்றப்படும். நீரோ இருந்தவாறே இருக்கிறீர். உம் வாழ்நாளுக்கு முடிவேயிராது" என்றார்.
எபிரேயர் 1 : 13 (RCTA)
வானதூதர்களுள் யாருக்காவது எப்போதாவது, "நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும் வரை நீர் என் வலப்புறம் அமரும்" என்று சொன்னதுண்டா?
எபிரேயர் 1 : 14 (RCTA)
அவர்களனைவரும் ஊழியம் செய்யும் ஆவிகளல்லவா? மீட்பை உரிமைப்பேறாகப் பெறுபவர்களுக்குப் பணிபுரிய அனுப்பப்பட்டவர்களல்லவா?

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

BG:

Opacity:

Color:


Size:


Font: