ஆதியாகமம் 38 : 1 (RCTA)
அக்காலத்தில் யூதா தன் சகோதரர்களை விட்டுப் புறப்பட்டு, ஓதொல்லாம் ஊரானாகிய கீராஸ் என்னும் ஒரு மனிதனிடம் போய்க் குடியிருந்தான்.
ஆதியாகமம் 38 : 2 (RCTA)
அங்கே சூயே என்னும் கானானிய மனிதனுடைய புதல்வியைக் கண்டு அவளை மணமுடித்து அவளோடு வாழ்ந்து கொண்டிருக்கையில்,
ஆதியாகமம் 38 : 3 (RCTA)
அவள் கருவுற்று ஒரு மகனைப் பெற்று, அவனுக்குக் கேர் என்று பெயரிட்டாள்.
ஆதியாகமம் 38 : 4 (RCTA)
அவள் மீண்டும் கருவுற்று, பிறந்த மகனை ஓனான் என்று அழைத்தாள்.
ஆதியாகமம் 38 : 5 (RCTA)
பின் மூன்றாம் புதல்வனையும் பெற்று, அவனைச் சேலா என்று அழைத்தாள். இவனுக்குப் பின் அவளுக்கு வேறு பிள்ளை இல்லை.
ஆதியாகமம் 38 : 6 (RCTA)
யூதா தன் மூத்த மகனாகிய கேர் என்பவனுக்குத் தாமார் என்னும் ஒரு பெண்ணை மணமுடித்தான்.
ஆதியாகமம் 38 : 7 (RCTA)
யூதாவின் மூத்த மகனாகிய கேர் ஆண்டவர் முன்னிலையில் பெரும் பாவியானதால், ஆண்டவர் அவனை அழித்து விட்டார்.
ஆதியாகமம் 38 : 8 (RCTA)
அப்போது யூதா தன் மகன் ஓனானை நோக்கி: நீ உன் அண்ணன் மனைவியை உன் மனைவியாக ஏற்று, அவளோடு உன் தமையனுக்கு மகப்பேறு உண்டு பண்ணு என்றான்.
ஆதியாகமம் 38 : 9 (RCTA)
அந்தச் சந்ததி தன் சந்ததியாய் இராதென்று அறிந்து, அவன் தன் தமையன் மனைவியோடு படுக்கையில், தன் தமையனுக்கு மகப்பேறு உண்டாகாதபடிக்குத் தன் விதையைத் தரையிலே விழவிட்டு வந்தான்.
ஆதியாகமம் 38 : 10 (RCTA)
அவன் செய்தது பெரிய அக்கிரமமென்று ஆண்டவர் அவனையும் அழித்துவிட்டார்.
ஆதியாகமம் 38 : 11 (RCTA)
ஆதலால், யூதா தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் மகன் சேலா பெரியவனாகு மட்டும் நீ உன் தந்தை வீட்டிலே விதைவையாய்த் தங்கியிரு என்றான். அவன் அவ்வாறு சொன்னதற்குக் காரணம் ஏதென்றால், சேலாவும் தன் சகோதரரைப் போல் சாவானோ என்று பயந்திருந்தது தான். அவள் அப்படியே தன் தந்தை வீட்டில் வாழ்ந்து வந்தாள்.
ஆதியாகமம் 38 : 12 (RCTA)
நெடுநாட்களுக்குப் பின், சூயேயின் புதல்வியான யூதாவின் மனைவி இறந்தாள். அவன், துக்கம் தீர்ந்து ஆறுதலான பின்னர், தன் மந்தைகளின் மேய்ப்பனான ஓதொல்லாம் ஊரானாகிய கீராஸ் என்பவரோடு தம்னாஸிலே ஆடுகளுக்கு மயிர் கத்தரிப்பவர்கள் இடத்திற்குப் போனான்.
ஆதியாகமம் 38 : 13 (RCTA)
அப்போது: உன் மாமனார் தம் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கத் தம்னாஸீக்குப் போகிறார் என்று தாமாருக்குச் செய்தி அறிவிக்கப்பட்டது.
ஆதியாகமம் 38 : 14 (RCTA)
அவள், சேலா பெரியவனாகியும் தனக்குக் கணவனாகக் கொடுக்கப்படவில்லை என்று மனவருத்தம் கொண்டு, தன் கைம்பெண்மைக்குப் பொருந்திய உடைகளைக் கழற்றி விட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக் கொண்டு, புதிய ஆடைகளை அணிந்தவளாய் தம்னாஸீக்குப் போகும் வழியில் ஒரு சந்திப்பில் உட்கார்ந்தாள்.
ஆதியாகமம் 38 : 15 (RCTA)
அவள், யாரும் தன்னை அறியா வண்ணம் முக்காடிட்டுக் கொண்டதனால், யூதா அவளைக் கண்டு, அவள் ஒரு வேசி என்று கருதி, அவள் கிட்டப் போனான்;
ஆதியாகமம் 38 : 16 (RCTA)
அவள் தன் மருமகளென்று அறியாமல்: நான் உன்னோடு படுக்க விரும்புகிறேன்; இசைகிறாயா என்றான். அதற்கு அவள்: நீர் என்னோடு படுப்பதற்கு எனக்கு என்ன தருவீர் என்றாள். அவன்:
ஆதியாகமம் 38 : 17 (RCTA)
என் மந்தையிலிருந்து உனக்கு ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமட்டும் எனக்கு ஓர் அடைமானம் கொடுத்தால், நான் உம் ஆசைக்கு உட்படுவேன் என, யூதா:
ஆதியாகமம் 38 : 18 (RCTA)
அடைமானமாக எதைத் தரக் கேட்கிறாய் என்று வினவினான். அவள்: உம்முடைய மோதிரமும், கைக்காப்பும், கைக்கோலும் தர வேண்டும் என்றாள். இந்த ஒரே சேர்க்கையால் அவள் கருவுற்றாள்.
ஆதியாகமம் 38 : 19 (RCTA)
பின் அவள் எழுந்து போய், தன் உடையைக் களைந்து விதவைக்குரிய ஆடைகளை அணிந்து கொண்டாள்.
ஆதியாகமம் 38 : 20 (RCTA)
பெண்ணிடம் தான் கொடுத்திருந்த அடைமானத்தை வாங்கிக் கொண்டு வருமாறு, யூதா ஓதொல்லாம் ஊரானாகிய மேய்ப்பன் கையிலே ஒரு வெள்ளாட்டுக் குட்டியைக் கொடுத்தனுப்பினான். அவன் (போய்) அவளைக் காணாமல், அங்கிருந்த ஆடவர்களை நோக்கி:
ஆதியாகமம் 38 : 21 (RCTA)
வழிச் சந்திப்பிலே அமர்ந்திருந்த வேசி எங்கே என்று கேட்க, அவர்கள்: ஏது! இவ்விடத்தில் வேசி இல்லையே என்றனர்.
ஆதியாகமம் 38 : 22 (RCTA)
அவன் யூதாவிடம் திரும்பி வந்து: நான் அவளைக் கண்டதுமில்லை, அவ்விடத்து மனிதரும், அவ்விடத்தில் யாதொரு வேசியும் எப்போதாகிலும் அமர்ந்ததுமில்லை என்று சொன்னார்கள் என்று சொல்ல, யூதா:
ஆதியாகமம் 38 : 23 (RCTA)
போனால் போகட்டும். எப்படியும் அவள் நம் மீது குற்றம் சாட்ட நிச்சயம் இயலாது. நான் ஆட்டுக் குட்டியை அனுப்பவுதாகச் சொல்லியிருந்தேன்; அப்படியே அனப்பினேன், நீயோ, அவளைக் காணவில்லை என்றான்.
ஆதியாகமம் 38 : 24 (RCTA)
மூன்று மாதம் சென்ற பின்னர்: உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம் பண்ணினாள். அதனால் அவள் கருவுற்றிருக்கிறாள் போலும் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அவன்: அவளை வெளியே கொண்டு வாருங்கள்; அவள் சுட்டெரிக்கப்பட வேண்டும் என்றான்.
ஆதியாகமம் 38 : 25 (RCTA)
மரணத் தண்டனை (நிறைவேற்றும்) இடத்திற்கு அவளைக் கூட்டிக் கொண்டு போகையில், அவள் அந்த அடைமானத்தைத் தன் மாமனாரிடம் அனுப்பி: இந்தப் பொருட்களுக்கு உடையவன் எவனோ, அவனாலே நான் கருவுற்றேன். இந்த மோதிரமும், இந்தக் கைக்காப்பும், இந்தக் கைக்கோலும் யாருடையவை என்று பாரும் என்று சொல்லி அனுப்பினாள்.
ஆதியாகமம் 38 : 26 (RCTA)
யூதா அவற்றைப் பார்த்தறிந்து: அவள் என்னைக் காட்டிலும் நீதியுள்ளவள். அவளை நான் என் மகன் சேலாவுக்குக் கொடுக்காமல் போனேனே என்றான். ஆயினும், அதன் பின் அவன் அவளோடு படுக்கவேயில்லை.
ஆதியாகமம் 38 : 27 (RCTA)
அவளுக்குப் பேறு காலம் நெருங்கிய போது, அவள் வயிற்றில் இரட்டைப் பிள்ளைகள் காணப்பட்டன.
ஆதியாகமம் 38 : 28 (RCTA)
அவள் பெறுகிற வேளையிலே ஒரு பிள்ளை கையை நீட்டிக் காண்பித்தது. மருத்துவச்சி அதிலே கருஞ்சிவப்பு நூலைக் கட்டி: இது முதலில் வெளிப்படும் என்றாள்.
ஆதியாகமம் 38 : 29 (RCTA)
ஆனால், அது தன் கையைத் திரும்ப உள்ளே இழுத்துக் கொண்ட பின்பு, மற்ற பிள்ளை வெளிப்பட்டது. அப்பொழுது மருத்துவச்சி: நீ எவ்வளவு சமர்த்தாய்ச் சவ்வைக் கிழித்துக் கொண்டு வந்தாய் என்றாள். அதன் பொருட்டு அந்தப் பிள்ளைக்குப் பாரேஸ் என்னும் பெயரிட்டாள்.
ஆதியாகமம் 38 : 30 (RCTA)
பின் கருஞ் சிவப்பு நூல் கையிலே கட்டப்பட்டிருந்த அவன் சகோதரன் வெளிப்பட்டான். இவனை ஜாரா என்று அழைத்தாள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30

BG:

Opacity:

Color:


Size:


Font: