ஆதியாகமம் 33 : 1 (RCTA)
யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்க, எசாயூ நானூறு ஆடவரோடு வருவதைக் கண்டான். உடனே லீயானுடைய பிள்ளைகளையும், இராக்கேலுடைய பிள்ளைகளையும், இரண்டு வேலைக்காரிகளுடைய பிள்ளைகளையும் வெவ்வேறாகப் பிரித்து வைத்து,
ஆதியாகமம் 33 : 2 (RCTA)
முதல் வரிசையில் வேலைக்காரிகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும், இரண்டாம் வரிசையில் லீயாளையும் அவளுடைய பிள்ளைகளையும், இறுதியில் இராக்கேலையும் சூசையையும் நிறுத்தி,
ஆதியாகமம் 33 : 3 (RCTA)
தான் அவர்களுக்கு முன் நடந்து சென்று தமையனை நெருங்கிச் செல்கையில் ஏழு முறை தரை மட்டும் குனிந்து அவனை வணங்கினான்.
ஆதியாகமம் 33 : 4 (RCTA)
அதைக் கண்டு எசாயூ தம்பிக்கு எதிர் கொண்டு ஓடி, அவனை அரவணைத்து, அவன் கழுத்தைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டு அழுதான்.
ஆதியாகமம் 33 : 5 (RCTA)
பின் கண்களை ஏறெடுத்து, பெண்களையும் அவர்களின் பிள்ளைகளையும் கண்டு: இவர்கள் யார், உன்னுடையவர்களா என்று கேட்க, அவன்: கடவுள் அடியேனுக்குத் தந்தருளின பிள்ளைகள் என்று பதில் சொன்னான்.
ஆதியாகமம் 33 : 6 (RCTA)
அந்நேரத்தில் வேலைக்காரிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் அணுகி வந்து வணங்கினர்.
ஆதியாகமம் 33 : 7 (RCTA)
லீயாளும் அவளுடைய பிள்ளைகளும் அணுகி, அப்படியே தெண்டனிட்டு வணங்கினர். பின் கடைசியாக சூசையும் இராக்கேலும் கிட்ட வந்து வணங்கினர்.
ஆதியாகமம் 33 : 8 (RCTA)
அப்போது எசாயூ யாக்கோபை நோக்கி: எனக்கு எதிர்கொண்டு வந்த அந்த மந்தைகள் என்ன என, யாக்கோபு: என் தலைவன் உம் கண்களில் அடியேனுக்குத் தயவு கிடைப்பதற்காகத் தான் என்று பதில் சொன்னான்.
ஆதியாகமம் 33 : 9 (RCTA)
அவன்: தம்பி, எனக்கு வேண்டிய பொருள் உண்டு. உன்னுடையது உனக்கிருக்கட்டும் என, யாக்கோபு:
ஆதியாகமம் 33 : 10 (RCTA)
அப்படிச் (சொல்ல) வேண்டாமென்று (உம்மை) மன்றாடுகிறேன். ஆனால், உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததாயின், இச் சொற்பமான காணிக்கையை என் கையினின்று ஏற்றுக் கொள்வீர். ஏனென்றால், நான் உம்மைக் கண்டது கடவுளைக் கண்டது போலாயிற்று.
ஆதியாகமம் 33 : 11 (RCTA)
நீர் எனக்குத் தயவு செய்து, எல்லா நன்மைகளுக்கும் காரணராகிய கடவுள் எனக்கு அருளி உமக்கு நான் கொண்டு வந்த ஆசீரை நீர் ஏற்றுக் கொள்வீர் (என்றான்). அவன், தன் தம்பி இவ்வாறு வற்புறுத்திக் கேட்டமையால், (அவற்றைக்) கட்டாயமாய் ஏற்றுக் கொண்டு: நாம் சேர்ந்து போகலாம், வா;
ஆதியாகமம் 33 : 12 (RCTA)
நானும் உனக்கு வழித்துணையாய் இருப்பேன் என்றான். அதற்கு யாக்கோபு:
ஆதியாகமம் 33 : 13 (RCTA)
தலைவ, சிறு குழந்தைகளும், சினை ஆடுகளும் பசுக்களும் என்னுடன் இருப்பதை நீர் அறிவீர். அவற்றை நான் அதிகமாய் வருத்தி ஓட்டுவேனாயின், மந்தையெல்லாம் ஒரே நாளில் மாய்ந்துபோமன்றோ?
ஆதியாகமம் 33 : 14 (RCTA)
நீர் அடியேனுக்கு முன்னே செல்வீர். நானோ, பிள்ளைகளின் நடைக்குத் தக்காற் போல், செயீருக்கு நீர் (வந்து) சேருமளவும் மெல்ல மெல்ல உம் காலடிகளைப் பார்த்து நடந்து வருகிறேன் என்றான்.
ஆதியாகமம் 33 : 15 (RCTA)
அதற்கு எசாயூ: என்னுடனிருக்கிற ஆடவர்களில் சிலரேனும் உனக்கு வழித்துணையாக இருக்கட்டும் என்று மன்றாட அவன்: தேவையில்லை; உமது முன்னிலையில் எனக்குத் தயவு கிடைத்தாலே போதும் என்றான்.
ஆதியாகமம் 33 : 16 (RCTA)
ஆகையால், எசாயூ அன்று தானே புறப்பட்டு, தான் வந்த வழியே செயீருக்குத் திரும்பினான்.
ஆதியாகமம் 33 : 17 (RCTA)
யாக்கோபும் சொக்கோட்டுக்கு வந்து சேர்ந்தான். அங்கே தனக்கென்று ஒரு வீடு கட்டினான்; தன் மந்தைகளுக்காகக் கூடாரங்களையும் அடித்தான். இதனால் அந்த இடத்திற்குச் சொக்கோட் அதாவது கூடாரம் என்று பெயரிட்டான்.
ஆதியாகமம் 33 : 18 (RCTA)
அவன் சீரிய மெசொப்பொத்தாமியாவிலிருந்து திரும்பின பின், கானான் நாட்டைச் சேர்ந்த சிக்கிமரின் நகரமாகிய சாலேமை அடைந்து அதன் அருகில் வாழ்ந்தான்.
ஆதியாகமம் 33 : 19 (RCTA)
அப்பொழுது, தான் கூடாரங்களை அடித்திருந்த நிலத்தின் ஒரு பாகத்தைச் சிக்கேமின் தந்தையாகிய ஏமோர் புதல்வர் கையிலே நூறு ஆட்டுக் குட்டிகளை விலைக்குக் கொடுத்து (வாங்கிக்) கொண்டான்.
ஆதியாகமம் 33 : 20 (RCTA)
பின் அங்கே அவன் ஒரு பீடத்தைக் கட்டி, அதன் மேல் இஸ்ராயேலின் எல்லாம் வல்ல கடவுளைத் தொழுதான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

BG:

Opacity:

Color:


Size:


Font: