ஆதியாகமம் 24 : 1 (RCTA)
ஆபிரகாம் எல்லாக் காரியங்களிலும் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டு, வயதில் முதிர்ந்தவராய் இருந்தார்.
ஆதியாகமம் 24 : 2 (RCTA)
ஒரு நாள் அவர் தம் வீட்டிலுள்ள ஊழியர்களில் வயதில் மூத்தவனும், தனக்குள்ள எல்லாவற்றிற்கும் மேற்பார்வையாளனுமானவனை நோக்கி: உன் கையை என் தொடையின் கீழ் வைத்து,
ஆதியாகமம் 24 : 3 (RCTA)
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவராகிய கடவுள் மேல் ஆணையிட்டு, நான் வாழும் இக்கானான் நாட்டுப் பெண்களிடையே நீ என் மகனுக்குப் பெண் கொள்ளாமல்,
ஆதியாகமம் 24 : 4 (RCTA)
என் சொந்த நட்டிற்குப் போய், என் உற்றாரிடம் என் மகன் ஈசாக்கிற்குப் பெண் கொள்வாய் என்று உண்மையாகச் சொல் என்றார்.
ஆதியாகமம் 24 : 5 (RCTA)
அதற்கு ஊழியன்: சிலவேளை பெண் என்னோடு இந்நாட்டிற்கு வர மனமில்லாதவளானால், தாங்கள் விட்டு வந்த அந்நாட்டிற்குத் தங்கள் மகனைக் கூட்டிக் கொண்டு போகலாமா? என்று கேட்க, ஆபிரகாம்:
ஆதியாகமம் 24 : 6 (RCTA)
அவ்விடத்திற்கு என் மகனை ஒருகாலும் கூட்டிக் கொண்டு போகாதே.
ஆதியாகமம் 24 : 7 (RCTA)
என் தந்தை வீட்டினின்றும் நான் பிறந்த நாட்டினின்றும் என்னை அழைத்து வந்து என்னோடு பேசி: இந்த நாட்டை உன் இனத்தாருக்குத் தருவோம், என்று ஆணையிடடுத் திருவாக்கருளிய அந்த விண்ணக ஆண்டவராகிய கடவுளே உனக்குமுன் தம் தூதனை அனுப்பி வைப்பார். நீ போய், அவ்விடத்தில் என் மகனுக்கு ஒரு பெண் பார்ப்பாயாக.
ஆதியாகமம் 24 : 8 (RCTA)
உன்னைப் பின் தொடர்ந்து வர அப்பெண்ணிற்கு மனமில்லாதிருந்தால் ஆணையைப் பற்றி உனக்கு யாதொரு கடமையுமில்லை. என் மகனை மட்டும் அவ்விடத்திற்குக் கூட்டிக் கொண்டு போகாதே என்று மறுமொழி சொன்னார்.
ஆதியாகமம் 24 : 9 (RCTA)
இதையெல்லாம் கேட்ட ஊழியன் தன் தலைவன் ஆபிரகாமின் காலின் கீழே கையை வைத்து அக்காரியத்தைக் குறித்து ஆணையிட்டான்.
ஆதியாகமம் 24 : 10 (RCTA)
பின் தன் தலைவனுடைய மந்தையினின்று பத்து ஒட்டகங்களைக் கொண்டு போய், அவனுடைய எல்லாப் பொருட்களிலும் சிலவற்றை எடுத்துக் கொண்டு பயணமாகி, மெசொபொத்தாமியாவிலுள்ள நாக்கோர் நகரை நோக்கிச் சென்றான்.
ஆதியாகமம் 24 : 11 (RCTA)
மாலையில் பெண்கள் நீர் மொள்ள வரும் நேரத்தில் அவன் நகருக்கு வெளியே ஒரு கிணற்றுக்குப் பக்கமாய் ஒட்டகங்களை இளைப்பாற விட்டுத் தனக்குள் சொல்லிக் கொண்டதாவது:
ஆதியாகமம் 24 : 12 (RCTA)
என் தலைவன் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் இன்று எனக்குத் துணையாயிருந்து, என் தலைவன் ஆபிரகாமுக்குக் கருணை புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன்.
ஆதியாகமம் 24 : 13 (RCTA)
இந்நகர் மக்களின் புதல்வியர் நீர் மொள்ளும் படி வெளியே வருவார்கள்.
ஆதியாகமம் 24 : 14 (RCTA)
அப்படியிருக்க, நான் எந்தப் பெண்ணை நோக்கி: நான் குடிக்கும்படி குடத்தைச் சாய்த்துக் கொடு என்று கேட்கையில்: நீரும் குடியும்; பின் உம் ஒட்டகங்களுக்கும் குடிக்கத் தண்ணீர் காட்டுவேன், என்று எவள் மறுமொழி சொல்வாளோ அவளே உம் ஊழியனாகிய ஈசாக்கிற்கு உம்மால் நியமிக்கப்பட்டவள் ஆகக்கடவாள். நீர் என் தலைவனுக்குக் கருணை புரிந்தருளினீர் என்று நான் அதனால் அறிந்து கொள்வேன் என்றான்.
ஆதியாகமம் 24 : 15 (RCTA)
அவன் இவ்வார்த்தைகளைத் தனக்குள்ளே சொல்லி முடிக்கு முன்பே, ஆபிரகாமின் சகோதரனான நாக்கோருக்கும் அவன் மனைவி மெல்காளுக்கும் பிறந்த மகனான பத்துவேலின் புதல்வி இரெபேக்காள் தன் தோள் மீது ஒரு குடத்தை வைத்துக் கொண்டு வந்தாள்.
ஆதியாகமம் 24 : 16 (RCTA)
மிகுந்த அழகியும், ஆண் தொடர்பு அறியாத அதிக எழிலுள்ள கன்னியுமாகிய அவள், கிணற்றில் இறங்கிக் குடத்தை நிரப்பித் திரும்பி வீட்டிற்குப் போகையில்,
ஆதியாகமம் 24 : 17 (RCTA)
(ஆபிரகாமின்) ஊழியன் அவளுக்கு எதிராகச் சென்று: நான் குடிக்கும்படி உன் குடத்தினின்று கொஞ்சம் தண்ணீர் தருவாயா என்றான்.
ஆதியாகமம் 24 : 18 (RCTA)
அதற்கு அவள்: குடியும், ஐயா! என்று தன் குடத்தை உடனே இறக்கி அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
ஆதியாகமம் 24 : 19 (RCTA)
அவன் குடித்து முடித்ததும், அவள் மீண்டும் அவளை நோக்கி: உம் ஒட்டகங்களலெல்லாம், குடித்துத் தீருமட்டும் தண்ணீர் மொண்டு காட்டுவேன் என்று கூறி,
ஆதியாகமம் 24 : 20 (RCTA)
குடத்து நீரைத் தொட்டியில் ஊற்றி விட்டு, மீண்டும் மொள்ளக் கிணற்றண்டை விரைந்து போய் மொண்டு கொண்டு வந்து, ஒட்டகங்கள் யாவற்றிற்கும் தண்ணீர் காட்டினாள்.
ஆதியாகமம் 24 : 21 (RCTA)
அப்பொழுது ஊழியன் ஆண்டவர் தனது பயணம் வெற்றியடையச் செய்தாரோ இல்லையோவென்று ஆராய்ந்தபடி அவளை மௌனமாய்ப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஆதியாகமம் 24 : 22 (RCTA)
ஒட்டகங்கள் நீர் குடித்த பின் இரண்டு சீக்கல் நிறையுள்ள பொற்காதணிகளையும், பத்து சீக்கல் நிறையுள்ள காப்புக்களையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தான்.
ஆதியாகமம் 24 : 23 (RCTA)
பின்னர் அவளை நோக்கி: நீ யாருடைய மகள்? எனக்குச் சொல்ல வேண்டும். உன் தந்தையின் வீட்டில் தங்குவதற்கு இடம் உண்டோ என்று வினவினான்.
ஆதியாகமம் 24 : 24 (RCTA)
அவளோ மறுமொழியாக: நான் மெல்காள், நாக்கோர் புதல்வரான பத்துவேலின் மகள் என்று கூறினாள்.
ஆதியாகமம் 24 : 25 (RCTA)
மீண்டும்: எங்கள் வீட்டிலே வைக்கோலும் காய்ந்த புல்லும் மிகுதியாக இருப்பதுமன்றி, தங்குவதற்குப் போதுமான இடமும் இருக்கிறது என்றாள்.
ஆதியாகமம் 24 : 26 (RCTA)
அம்மனிதன் தலைகுனிந்து ஆண்டவரை வணங்கி:
ஆதியாகமம் 24 : 27 (RCTA)
என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவருக்கு மாட்சி உண்டாகக்கடவது. ஏனென்றால், அவர் என் தலைவரிடம் முன் கொண்டிருந்த கருணையும் விசுவாசமும் விலகவொட்டாமல், என் தலைவரின் சகோதரன் வீட்டிற்கு நேர்வழியாய் அடியேனை அழைத்துக் கொண்டு வந்தார் என்று கடவுளைத் துதித்தான்.
ஆதியாகமம் 24 : 28 (RCTA)
அப்போது அவ்விளம் பெண் ஓடிப்போய் தன் தாயின் அறைக்குள் சென்று, தான் கேட்டயாவற்றையும் அவளுக்குச் சொன்னான்.
ஆதியாகமம் 24 : 29 (RCTA)
மேலும், இரெபேக்காளுக்கு லாபான் என்னும் தமையன் ஒருவன் இருந்தான். அவன் கிணற்றண்டை இருந்த அம்மனிதனைக் காண விரைந்து போனான்.
ஆதியாகமம் 24 : 30 (RCTA)
அவன் தங்கையின் கையிலே காதணிகளையும் காப்புக்களையும் கண்டு, அம்மனிதன் என்னிடத்தில் இன்னின்னவைகளைச் சொன்னானென்று அவள் சொல்லியதையும் கேட்டவுடனே, கிணற்றண்டை ஒட்டகங்களின் அருகே நின்று கொண்டிருந்த அம்மனிதனிடம் வந்து, அவனை நோக்கி:
ஆதியாகமம் 24 : 31 (RCTA)
ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டவனே, உள்ளே வா. ஏன் வெளியே நிற்கிறாய்? நான் வீட்டையும், ஒட்டகங்களுக்கு இடத்தையும் தயார் செய்கிறேன் என்று சொல்லி,
ஆதியாகமம் 24 : 32 (RCTA)
அவனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து, ஒட்டகங்களுக்குப் பாரம் இறக்கி வைக்கோலும் புல்லும் போட்டு, அவனுக்கும் அவனோடு வந்த ஆட்களுக்கும் கை கால் கழுவத் தண்ணீரும் கொடுத்தான்.
ஆதியாகமம் 24 : 33 (RCTA)
பின் அவனுக்கு உணவு பரிமாறப்பட்டது. அவனோ: நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன் சாப்பிட மாட்டேன் என, லாபான்: சொல், என்று கூறினான்.
ஆதியாகமம் 24 : 34 (RCTA)
அவன்: நான் ஆபிரகாமின் ஊழியன்.
ஆதியாகமம் 24 : 35 (RCTA)
என் தலைவரை ஆண்டவர் மிகவும் ஆசீர்வதித்து, அவர் செல்வந்தராகும்படி ஆடு மாடுகளையும், பொன் வெள்ளி உடைமைகளையும், ஊழியர்களையும் பணிப் பெண்களையும், ஒட்டகங்களையும் கழுதைகளையும் அவருக்குக் கொடுத்தருளினார்.
ஆதியாகமம் 24 : 36 (RCTA)
மேலும், என் தலைவரின் மனைவியாகிய சாறாள் வயது சென்ற என் தலைவருக்கு ஒரு புதல்வனையும் பெற்றிருக்கிறாள். அவரும் அப்புதல்வனுக்குத் தமக்குள்ள எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார்.
ஆதியாகமம் 24 : 37 (RCTA)
என் தலைவர் என்னை ஆணையிடச் செய்து: நான் வாழ்ந்து வருகிற இந்தக் கானான் நாட்டாரின் பெண்களுக்குள்ளே என் புதல்வனுக்குப் பெண் கொள்ளாதே.
ஆதியாகமம் 24 : 38 (RCTA)
ஆனால், என் தந்தையின் வீட்டுக்குச் சென்று, என் இனத்தாரிடமிருந்து என் புதல்வனுக்குப் பெண் கொள்வாயாக என்றார்.
ஆதியாகமம் 24 : 39 (RCTA)
அப்போது நான் என் தலைவரை நோக்கி: ஒரு வேளை பெண் என்னோடு வர இணங்காவிடில் நான் என்ன செய்ய வேண்டும் என்று வினவினேன்.
ஆதியாகமம் 24 : 40 (RCTA)
அதற்கு அவர்: நான் எவர் முன்னிலையில் நடந்து கொண்டிருக்கிறேனோ அந்தக் கடவுளே தமது தூதனை உன்னுடன் அனுப்பி, உன்னைச் செவ்வையான வழியிலே செலுத்துவார். நீ போய் என் இனத்தாரிடமிருந்து, என் தந்தை வீட்டினின்று என் புதல்வனுக்கு ஒரு பெண்ணைத் தெரிந்து கொண்டு வருவாய்.
ஆதியாகமம் 24 : 41 (RCTA)
என் இனத்தாரிடம் நீ போய்க் கேட்டும் அவர்கள் (பெண்ணைக்) கொடுக்க மாட்டோம் என்பார்களாயின், நீ என் சாபத்தக்கு உட்பட மாட்டாய் என்றார்.
ஆதியாகமம் 24 : 42 (RCTA)
ஆகையால், இன்று நான் அந்தக் கிணற்றண்டை வந்த போது: என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரே, நான் இப்போது செல்கிற வழியில் நீர் என்னைச் செவ்வையாக நடத்துவீராகில், இதோ, நான் இந்தக் கிணற்றண்டை இருக்கிறேன்.
ஆதியாகமம் 24 : 43 (RCTA)
தண்ணீர் மொள்ள வரும் பெண்களில் நான் எவளை நோக்கி, குடிக்கும்படி உன் குடத்தைச் சாய்த்து எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தர வேண்டும் என்று கேட்க, அவள்:
ஆதியாகமம் 24 : 44 (RCTA)
நீயும் குடி; உன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் காட்டுவேன் என்று சொல்வாளோ, அவளே என் தலைவரின் புதல்வனுக்கு ஆண்டவராகிய நீர் நியமித்த பெண் ஆகக்கடவாள் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
ஆதியாகமம் 24 : 45 (RCTA)
நான் அவற்றை என் இதயத்தில் மௌனமாக யோசித்துக் கொண்டிருந்த வேளையில், இரெபேக்காள் தோளின் மீது குடத்தை எடுத்துக் கொண்டு வரக் கண்டேன். அவள் கிணற்றிலிறங்கித் தண்ணீரை மொண்டு வரவே, நான் அவளை நோக்கி: எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தர வேண்டும் என்றேன்.
ஆதியாகமம் 24 : 46 (RCTA)
அவள் உடனே தோளிலிருந்து குடத்தை இறக்கி: நீரும் குடியும்; பிறகு உம் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் வார்ப்பேன் என்று கூற, நானும் குடித்தேன்; அவள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் காட்டினாள்.
ஆதியாகமம் 24 : 47 (RCTA)
பின் நான் அவளை நோக்கி: நீ யாருடைய மகள் என்று வினவ, நான் மெல்காள் வயிற்றில் நாக்கோருக்குப் பிறந்த பத்துவேலின் மகள் என்றாள் அவள். அப்போது நான் அவள் முகத்துக்கு ஆபரணமாகக் காதணிகளைப் பூட்டி, அவள் கையிலே காப்புகளையும் கொடுத்தேன்.
ஆதியாகமம் 24 : 48 (RCTA)
மேலும் தலை வணங்கி ஆண்டவரைத் தொழுதேன். நான் என் தலைவரின் சகோதரனுடைய புதல்வியை ஆபிரகாமின் புதல்வனுக்குக் கொள்ளும்படி அவர் நேர் வழியாய் என்னை நடத்தி வந்ததனால், என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரைத் தொழுது வாழ்த்திப் போற்றினேன்.
ஆதியாகமம் 24 : 49 (RCTA)
அப்படியிருக்க, நீங்கள் என் தலைவருக்குத் தயவு காட்டி அவர்மேல் விசுவாசமுள்ளவர்களாய் இருக்கிறீர்களோ? அதை எனக்குத் தெரிவியுங்கள். உங்களுக்கு வேறு எண்ணமிருந்தால், அதையும் சொல்லுங்கள். அப்பொழுதல்லவோ நான் திரும்பிச் செல்ல இயலும் என்றான்.
ஆதியாகமம் 24 : 50 (RCTA)
அதற்கு லாபானும் பத்துவேலும் அவனைப் பார்த்து: இந்த வாக்கு ஆண்டவராலே வந்தது. அவரது திருவுளத்துக்கு விரோதமாய் நாங்கள் உனக்கு வேறொன்றும் சொல்ல மாட்டோம்.
ஆதியாகமம் 24 : 51 (RCTA)
இதோ, இரெபேக்காள் உன் முன் இருக்கிறாள். அவளை அழைத்துக் கொண்டு போ. ஆண்டவர் சொன்னபடியே அவள் உன் தலைவருடைய புதல்வனுக்கு மனைவி ஆகக்கடவாள் என்று மறுமொழி சொன்னார்கள்.
ஆதியாகமம் 24 : 52 (RCTA)
ஆபிரகாமின் ஊழியன் இதைக் கேட்டதும் தெண்டனிட்டு விழுந்து ஆண்டவரைத் தொழுதான்.
ஆதியாகமம் 24 : 53 (RCTA)
பிறகு அவன் பொன், வெள்ளிப் பாத்திரங்களையும் ஆடைகளையும் எடுத்து இரெபேக்காளுக்குக் கொடுத்தான்; அவள் சகோதரர்களுக்கும் தாய்க்கும் விலையயுர்ந்த அன்பளிப்புகளையும் கொடுத்தான்.
ஆதியாகமம் 24 : 54 (RCTA)
பின் அவர்கள் (அனைவரும்) ஒன்றாக உணவருந்தி விருந்து கொண்டாடி அங்கே இரவைக் கழித்தார்கள். அவன் அதிகாலையில் துயில் விட்டெழுந்து, என் தலைவரிடம் போக எனக்கு உத்தரவு கொடுங்கள் என்று வேண்ட,
ஆதியாகமம் 24 : 55 (RCTA)
இரெபேக்காளுடைய சகோதரர்களும் தாயும் அவளை நோக்கி, பெண் பத்து நாட்களேனும் இருக்கட்டுமே; அதன் பின் புறப்பட்டுப் போகலாம் என்று மறுமொழி கூறினார்.
ஆதியாகமம் 24 : 56 (RCTA)
அவன்: ஆண்டவர் என் பிரயாணம் வெற்றியடையச் செய்தாரே; ஆதலால். நீங்கள் என்னைத் தாமதப்படுத்தாதீர்கள். என் தலைவரிடத்திற்கு நான் போகும்படி விடை கொடுங்கள் என்று கெஞ்சினான்.
ஆதியாகமம் 24 : 57 (RCTA)
அதற்கு அவர்கள்: பெண்ணை அழைத்து, அவள் விருப்பம் இன்னதென்று அறிந்து கொள்வோம் என்றனர்.
ஆதியாகமம் 24 : 58 (RCTA)
அப்படியே அவளைக் கூப்பிட்டனர். அவள் வந்தபோது: இம் மனிதனோடு கூடப் போகிறாயா என்று கேட்டனர். அவள்: நல்லது, போகிறேன் என்றாள்.
ஆதியாகமம் 24 : 59 (RCTA)
எனவே, அவர்கள் அவளையும், அவள் பணிப் பெண்ணையும், ஆபிரகாமின் ஊழியனையும், அவனைச் சேர்ந்தவர்களையும் அனுப்புகையில், தங்கள் சகோதரிக்கு நன்மைகள் பெருக வேண்டி:
ஆதியாகமம் 24 : 60 (RCTA)
எங்கள் சகோதரியாகிய நீ ஆயிரமாயிரம் மக்களுக்குத் தாயாகும் பேறு பெறுவாய். உன் சந்ததியாரும் தங்கள் பகைவரின் (நகர) வாயில்களை உடைமையாக்கிக் கொள்வார்களாக என்றனர்.
ஆதியாகமம் 24 : 61 (RCTA)
அப்போது இரெபேக்காளும் அவள் பணிவிடைக்காரிகளும் ஒட்டகங்கள் மீது ஏறி, அம் மனிதனைத் தொடர்ந்து செல்ல, அவன் தன் தலைவரின் ஊரை நோக்கி விரைந்து நடக்கத் தொடங்கினான்.
ஆதியாகமம் 24 : 62 (RCTA)
தென்னாட்டில் வாழ்ந்து வந்த ஈசாக் அந்நேரத்தில், வாழ்கிறவரும் காண்கிறவரும் என்று சொல்லப்படும் கிணற்றுக்குப் போகும் வழியில் உலாத்திக் கொண்டிருந்தான்.
ஆதியாகமம் 24 : 63 (RCTA)
பொழுது சாய்ந்த போது, அவன் தியானம் பண்ண வெளியே போயிருக்கையில், தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்க, தூரத்தில் ஒட்டகங்கள் வருவதைக் கண்டான்.
ஆதியாகமம் 24 : 64 (RCTA)
இரெபேக்காளும் ஈசாக்கைக் கண்டவுடனே ஒட்டகத்தை விட்டிறங்கி, ஊழியனை நோக்கி:
ஆதியாகமம் 24 : 65 (RCTA)
அதோ வெளியிலே நம்மை எதிர்கொண்டு வரும் அந்த மனிதர் யார் என்று வினவினாள். அதற்கு அவன்: அவரே என் தலைவர் என்றான். அவள் உடனே முக்காடிட்டுத் தன் முகத்தை மூடிக் கொண்டாள்.
ஆதியாகமம் 24 : 66 (RCTA)
ஊழியன் போய், தான் செய்தவற்றையெல்லாம் ஈசாக்கிற்கு விவரித்துச் சொன்னான்.
ஆதியாகமம் 24 : 67 (RCTA)
ஈசாக் இரெபேக்காளைத் தன் தாயாகிய சாறாளின் கூடாரத்துக்கு அழைத்துக் கொண்டுபோய், அவளைத் தன் மனைவியாக ஏற்றுக்கொண்டான். அவள் மீது அவன் கொண்டிருந்த அன்பு, எவ்வளவென்றால், தாயின் மரணத்தினாலே அவனுக்கு ஏற்பட்டிருந்த துயரமும் அதனால் பெரும்பாலும் தணிந்து போயிற்று.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67

BG:

Opacity:

Color:


Size:


Font: