எசேக்கியேல் 16 : 1 (RCTA)
மீண்டும் ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 16 : 2 (RCTA)
மனிதா, யெருசலேமுக்கு அதன் அக்கிரமத்தை எடுத்துக்காட்டிப் பேசு.
எசேக்கியேல் 16 : 3 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் யெருசலேமுக்குக் கூறுகிறார்: நீ தோன்றியதும் பிறந்ததும் கானான் நாட்டிலே; உன் தந்தை ஒர் அமோரியன்; உன் தாய் ஒரு கெத்தியாள்.
எசேக்கியேல் 16 : 4 (RCTA)
நீ பிறந்த விவரம் இதுவே: நீ பிறந்த அன்று இன்னும் உன் தொப்புள்கொடி அறுக்கப்படவில்லை; நீ தண்ணீரால் சுத்தமாகக் கழுவப்படவில்லை; உப்பால் தேய்க்கப்படவில்லை; துணிகளால் சுற்றப்படவுமில்லை.
எசேக்கியேல் 16 : 5 (RCTA)
உன்மீது இரக்கப்பட்டு இக்காரியங்களில் எதையும் உனக்குச் செய்வாரில்லை; ஆனால் நீ வெளியிலே எறியப்பட்டாய்; பிறந்த நாளிலேயே நீ வெறுத்து ஒதுக்கப்பட்டாய்.
எசேக்கியேல் 16 : 6 (RCTA)
அவ்வழியாய்க் கடந்து போன நாமோ நீ உன் இரத்தத்தில் மிதிபடுவதைக் கண்டு, இரத்தத்தில் கிடந்த உன்னிடம், 'பிழைத்திரு, வயல் வெளியில் வளரும் செடிபோல வளர்க' என்று சொன்னோம்.
எசேக்கியேல் 16 : 7 (RCTA)
நீயும் தேறி வளர்ந்தாய்; பெரியவளாகி ஆபரணங்களை அணிந்தாய். உன் கொங்கைகள் பருத்து வந்தன; கூந்தல் அடர்ந்து வளர்ந்தது; ஆனால் நீ அப்போது ஆடையின்றி நாணி நின்றாய்.
எசேக்கியேல் 16 : 8 (RCTA)
அவ்வழியாய்க் கடந்துபோன நாமோ உன்னருகில் வந்து, நீ பருவ மங்கையாய் இருப்பதைக் கண்டு, நமது ஆடையை உன்மேல் விரித்து, உன் நிருவாணத்தை மூடினோம்; பிறகு உனக்கு நாம் ஆணையிட்டு உன்னுடன் உடன்படிக்கை செய்தோம்; நீயோ நம்முடையவள் ஆனாய், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
எசேக்கியேல் 16 : 9 (RCTA)
நாம் உன்னைத் தண்ணீரால் கழுவி, இரத்தக் கறையை உன்னிடமிருந்து போக்கி, உனக்கு எண்ணெய் பூசினோம்.
எசேக்கியேல் 16 : 10 (RCTA)
சித்திரத் தையலாடையால் உன்னை உடுத்தி, சிவந்த செருப்புகளை அணிவித்து, மெல்லிய ஆடைகளால் மூடி, பட்டாடைகளையும் உனக்கு அளித்தோம்.
எசேக்கியேல் 16 : 11 (RCTA)
விலையுயர்ந்த அணிகலன்களால் உன்னை அழகு செய்து, கைக்குக் காப்புகளும், கழுத்துக்குப் பொற் சங்கிலியும் பூட்டினோம் .
எசேக்கியேல் 16 : 12 (RCTA)
மூக்குக்கு மூக்குத்தியும், காதுகளுக்குத் தோடுகளும், தலையில் அழகான மணிமுடியும் அணிவித்தோம்.
எசேக்கியேல் 16 : 13 (RCTA)
இவ்வாறு பொன்னாலும் வெள்ளியாலும் அலங்கரிக்கப்பட்டு, மெல்லிய சித்திரத் தையலாடையையும், பலநிறமுள்ள புடவைகளையும் அணிந்து, தேனும் எண்ணெய்யும் மாவும் உண்டு, மிக்க அழகு வாய்ந்தவளாய், ஒர் அரசியாய் விளங்கினாய்.
எசேக்கியேல் 16 : 14 (RCTA)
உன் அழகின் காரணமாய் உன் பெயர் புறவினத்தார் நடுவில் மகிமை பெற்றது; ஏனெனில் நாம் உனக்குக் கொடுத்த மகிமையிலும் அழகிலும் நீ முற்றிலும் நிறைவு பெற்றவளாய் இருந்தாய், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
எசேக்கியேல் 16 : 15 (RCTA)
நீயோ உன் அழகை நம்பி, உன் மகிமையைப் பாராட்டிக் கொண்டு, விபசாரத்தில் ஈடுபட்டுப் போவார் வருவார்க்கெல்லாம் உன்னைக் கையளித்தாய்.
எசேக்கியேல் 16 : 16 (RCTA)
உன் ஆடைகளில் சிலவற்றை எடுத்து, இருபுறமும் தைக்கப்பட்ட மெத்தையைச் செய்து கொண்டு அதன் மேல் நீ வேசித்தனம் செய்தாய்; இதைப் போல் இதுவரையில் நடந்ததுமில்லை; இனி நடக்கப் போவதுமில்லை .
எசேக்கியேல் 16 : 17 (RCTA)
நாம் உனக்கு கொடுத்திருந்த பொன், வெள்ளி ஆபரணங்களைக் கொண்டே, நீ ஆண் உருவங்களைச் செய்து அவற்றோடு வேசித்தனம் செய்தாய்.
எசேக்கியேல் 16 : 18 (RCTA)
உன் சித்திரத் தையலாடையை எடுத்து, அதைக் கொண்டு அச்சிலைகளை மூடி அவற்றின் முன் நாம் தந்த எண்ணெய், நறுமணப் பொருட்களைப் படைத்தாய்.
எசேக்கியேல் 16 : 19 (RCTA)
நாம் உன் சாப்பாட்டுக்கெனக் கொடுத்த அப்பம், மாவு, எண்ணெய், தேன் இவற்றை நீ அவற்றின் முன் உயர்ந்த நறுமணம் வீசும்படி வைத்துப் படைத்தாய், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
எசேக்கியேல் 16 : 20 (RCTA)
நீ நமக்குப் பெற்ற புதல்வர், புதல்வியரை அவற்றுக்கு இரையாகப் பலியிட்டாயே, இது அற்பமான விபசாரமோ?
எசேக்கியேல் 16 : 21 (RCTA)
நீ நம் பிள்ளைகளைப் பலியிட்டு, அவற்றுக்கு அர்ப்பணம் செய்து கொடுத்தாய்.
எசேக்கியேல் 16 : 22 (RCTA)
இத்துணை அருவருப்பான அக்கிரமங்களையும், விபசாரங்களையும் செய்கையில், உன் இளம் வயதில் நீ நிருவாணமாயும், நாணம் நிறைந்தவளாயும், இரத்தத்தில் மிதிபட்டவளாயும் இருந்த நாட்களை நீ நினைக்கவே இல்லையே!
எசேக்கியேல் 16 : 23 (RCTA)
நீ இவ்வளவு அக்கிரமங்களையும் செய்த பிறகு (உனக்கு ஐயோ கேடு! ஐயோ கேடு, என்கிறார் ஆண்டவராகிய இறைவன்),
எசேக்கியேல் 16 : 24 (RCTA)
வேசிக் குடிலைக் கட்டிக் கொண்டு பொதுவிடங்களில் உன் விபசாரத் தொழிலுக்கு இடம் தயாரித்தாய்.
எசேக்கியேல் 16 : 25 (RCTA)
எல்லாத் தெருக்கோடிகளிலும் உன் விபசாரக் கூடங்களைக் கட்டி, உன் மகிமையையும் அழகையும் கெடுத்து, வருவார் போவார்க்கெல்லாம் உன்னைக் கையளித்து, நமக்கு ஆத்திரம் உண்டாகும்படி நீ விபசாரத்தில் மேன் மேலும் உழன்று வந்தாய்.
எசேக்கியேல் 16 : 26 (RCTA)
உன் அண்டை நாட்டவரான சதை பெருத்த எகிப்தியரோடு வேசித்தனம் செய்து, நமக்குக் கோபமூட்டும்படி உன் விபசாரத்தை மிகுதியாக்கினாய்.
எசேக்கியேல் 16 : 27 (RCTA)
ஆகையால் இதோ நமது கரத்தை உனக்கு விரோதமாய் நீட்டி, உனக்குரிய பங்கைக் குறைத்து, உன்னுடைய முறைகேடான நடத்தையைப் பார்த்து வெட்கப்படும் உன் பகைவார்களான பிலிஸ்தியரின் குமாரத்திகளுக்கு உன்னைக் கையளிப்போம்.
எசேக்கியேல் 16 : 28 (RCTA)
அசீரியர்களோடும் நீ வேசித்தனம் செய்தாய்; ஏனெனில் நீ இன்னும் திருப்தி அடையவில்லை; ஆம், நீ அவர்களோடு வேசித்தனம் செய்தும் உனக்குத் திருப்தி உண்டாகவில்லை.
எசேக்கியேல் 16 : 29 (RCTA)
ஆகையால் வாணிக நாடாகிய கல்தேயாவோடும் வேசித்தனம் பண்ணினாய்; அப்பொழுதும் நீ திருப்தி அடையவில்லை.
எசேக்கியேல் 16 : 30 (RCTA)
நாணமற்ற வேசியின் செயல்களையெல்லாம் செய்த உன் இதயத்தின் காமநோய் தான் என்னே, என்கிறார் ஆண்டவர்.
எசேக்கியேல் 16 : 31 (RCTA)
உண்மையாகவே எல்லா வழி முனைகளிலும் உன் வேசிக்குடிலைக் கட்டினாய்; எல்லாப் பொதுவிடங்களிலும் உன் விபசாரக் கூடங்களை ஏற்படுத்தினாய்; மற்ற வேசிகளைப் போலப் பணம் சம்பாதிக்கவும் நீ வேசித்தனம் செய்யவில்லை.
எசேக்கியேல் 16 : 32 (RCTA)
வேசியாகிய மனைவியே, சொந்தக் கணவனை விட்டு அந்நியரைச் சேர்க்கிறாயே!
எசேக்கியேல் 16 : 33 (RCTA)
மற்ற வேசிகளுக்குப் பணம் கொடுப்பார்கள்; ஆனால் உன் காரியத்தில் அப்படியில்லையே! நாற்றிசையிலு மிருந்து வந்து உன்னுடன் விபசாரஞ் செய்யும்படி உன் காதலர்களுக்கு நீயல்லவோ காணிக்கை கொடுத்து அழைக்கின்றாய்!
எசேக்கியேல் 16 : 34 (RCTA)
ஆகவே வேசித்தனத்திலும் நீ மற்ற வேசிகளிலிருந்து வேறுபட்டிருக்கிறாய்; வேசித்தனம் செய்ய உன்னைத் தூண்டியவர் யாருமில்லை; நீ பிறர்க்குக் கையூட்டுக் கொடுத்தாய்; பிறர் உனக்குப் பணமேதும் தரவில்லை; இது பெரிய வேறுபாடன்றோ!
எசேக்கியேல் 16 : 35 (RCTA)
ஆகையால் வேசியே, ஆண்டவருடைய வார்த்தையைக் கேள்:
எசேக்கியேல் 16 : 36 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீ உன் காதலரோடு செய்த வேசித்தனத்தால் உன் வெட்கம் வெளியாகி, உன் நிருவாணம் காணப்பட்டதாலும், நீ சிலைகளை வழிபட்டதாலும், அவற்றுக்கு உன் பிள்ளைகளைப் பலியிட்டு இரத்தம் சிந்தியதாலும்,
எசேக்கியேல் 16 : 37 (RCTA)
இதோ, நீ இன்பம் அனுபவித்த உன் காதலர் அனைவரையும், நீ விரும்பியவர்கள், வெறுத்தவர்கள் எல்லாரையும் ஒன்றுகூட்டுவோம்; அவர்கள் எல்லாரையும் நாற்றிசையிலிருந்தும் கூட்டிச்சேர்த்து உன்னிடம் கொண்டு வந்து அவர்களுக்கு உன் வெட்கத்தைக் காட்டுவோம்; அவர்கள் யாவரும் உன் நிருவாணத்தைக் காண்பார்கள்.
எசேக்கியேல் 16 : 38 (RCTA)
விபசாரிகளையும், இரத்தம் சிந்தியவர்களையும் நியாயந் தீர்ப்பது போல் உன்னையும் தீர்ப்பிட்டு, உன் மீது இரத்தப் பழியையும் ஆத்திரத்தையும் சுமத்துவோம்.
எசேக்கியேல் 16 : 39 (RCTA)
உன்னை அவர்கள் கையில் ஒப்படைப்போம்; அவர்கள் உன் குடிலை இடித்து விபசாரக் கூடங்களைத் தரைமட்டமாக்குவார்கள்; பின், உன் ஆடைகளை உரிந்து, உன் ஆபரணங்களை அபகரித்து, உன்னை நிருவாணியாக்கி, வெட்கக் கேடான நிலையில் உன்னை விட்டுப் போவார்கள்.
எசேக்கியேல் 16 : 40 (RCTA)
பிறகு உனக்கு விரோதமாக மக்களை எழுப்புவோம்; அவர்கள் உன்னைக் கல்லாலெறிந்து, வாளால் வெட்டுவார்கள்.
எசேக்கியேல் 16 : 41 (RCTA)
கடைசியில் அவர்கள் உன் வீடுகளை நெருப்பால் சுட்டெரித்து, பெண்கள் பலர் முன்னால் உன்னைக் கொடுமையாய்த் தண்டிப்பார்கள்; அதன் பின் உன் வேசித்தனத்திற்கு ஒரு முடிவு கட்டுவோம்; யாருக்கும் இனி நன்கொடை கொடுக்கமாட்டாய்.
எசேக்கியேல் 16 : 42 (RCTA)
அப்போது உன் மீது நாம் கொண்ட கோபமும் ஆத்திரமும் தணியும்; இனி உன் மேல் கோபம் கொள்ளாமல் அமைதியாய் இருப்போம்.
எசேக்கியேல் 16 : 43 (RCTA)
நீ உன் இளமையின் நாட்களை நினையாமல் இவற்றையெல்லாம் செய்து நமக்குச் சினம் உண்டாக்கின படியால், உன் தீய நடத்தையின் பலனை உன் தலை மேல் சுமத்தினோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன். இந்த அருவருப்பான காரியங்கள் தவிர இன்னும் முறைகேடாகவும் நீ நடந்து கொள்ளவில்லையா?
எசேக்கியேல் 16 : 44 (RCTA)
இதோ, பழமொழி கூறும் யாவரும் 'தாயைப்போலப் பிள்ளை' என்னும் பழமொழியை உன்னைக் குறித்துச் சொல்வார்கள்.
எசேக்கியேல் 16 : 45 (RCTA)
தன் கணவனையும் பிள்ளைகளையும் வெறுத்துத் தள்ளிய தாயின் மகளல்லவா நீ? தங்கள் கணவன்மார்களையும், பிள்ளைகளையும் வெறுத்துத் தள்ளிய மங்கையரின் சகோதரியல்லவா நீ? உன் தாய் ஒரு கெத்தியாள்தானே? உன் தந்தை ஒர் அமோரியன் அல்லவா?
எசேக்கியேல் 16 : 46 (RCTA)
உன் வீட்டுக்கு இடப்பக்கத்தில், தானும், தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சமாரியா உன் அக்காள் அன்றோ? உன் வலப்பக்கத்தில், தானும், தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சோதோம் உன் தங்கை அல்லவா?
எசேக்கியேல் 16 : 47 (RCTA)
ஆயினும் அவர்கள் நடந்துகொண்டவாறு நடப்பதில் உனக்குத் திருப்தி ஏற்படவில்லை போலும்! ஏனெனில் சிறிது காலத்தில் அவர்கள் செய்த அக்கிரமங்கள் அவ்வளவு பெரிதல்ல என்னும் படி, நீ உன் செயல்களிலெல்லாம் அவர்களை விடப் பெரிய பாதகியானாய்.
எசேக்கியேல் 16 : 48 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் உயிர்மேல் ஆணை! நீயும், உன் குமாரத்திகளும் செய்ததை உன் சகோதரியாகிய சோதோமும், அவள் குமாரத்திகளும் செய்யத் துணியவில்லையே.
எசேக்கியேல் 16 : 49 (RCTA)
உன் சகோதரியாகிய சோதோம் செய்த அக்கிரமம் என்ன? அகங்காரம், போசனப்பிரியம், சோம்பல் இவ்வளவு தானே! அவர்கள் ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் உதவி செய்யவில்லை.
எசேக்கியேல் 16 : 50 (RCTA)
அவர்கள் தங்களையே உயர்த்திக் கொண்டு, நமது முன்னிலையில் அருவருப்பான அக்கிரமங்களைச் செய்தார்கள்; அவற்றைக் கண்டு நாம் அவர்களைத் தொலைத்தோம்.
எசேக்கியேல் 16 : 51 (RCTA)
சமாரியாவும் உன் பாவங்களில் பாதியளவு கூடச் செய்யவில்லையே. நீ அவர்களை விட அதிக அருவருப்பான பாவங்களைச் செய்தபடியால், உன்னைக் காட்டிலும் உன் சகோதரிகள் குற்றமற்றவர்கள் என்று சொல்லலாம் அன்றோ?
எசேக்கியேல் 16 : 52 (RCTA)
அப்படியிருக்க, உன் சகோதரிகளை விட நீ தான் பெரிய குற்றவாளி; அதிக அக்கிரமங்களைச் செய்திருக்கிறாய்; உங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று சொல்லும்படி இருக்கிறது; ஆகவே இப்போது உன் நாணத்தையும் வெட்கத்தையும் நீயே தாங்கு; அவர்கள் குற்றமற்றவர்களாய் இருக்கும்படி நீ நடந்ததால் அவமானத்தைத் தாங்கிக்கொள்.
எசேக்கியேல் 16 : 53 (RCTA)
சோதோமையும், அதன் குமாரத்திகளையும், சமாரியாவையும், அதன் குமாரத்திகளையும் சிறையினின்று மீட்டு நிலைநிறுத்துவோம்; அப்போது உன்னையும் சிறைமீட்டு (அவர்கள் நடுவில்) நிலைநாட்டுவோம்.
எசேக்கியேல் 16 : 54 (RCTA)
ஆனால் நீ அவர்களுக்கு ஆறுதலாய் இருக்கும்படி நீ செய்தவற்றுக்கெல்லாம் வெட்கப்பட்டு, உன் அவமானத்தைச் சுமக்க வேண்டும்.
எசேக்கியேல் 16 : 55 (RCTA)
உன் சகோதரிகளாகிய சோதோமும், அதன் குமாரத்திகளும், சமாரியாவும், அதன் குமாரத்திகளும் தங்கள் முந்திய நிலையில் திரும்ப வைக்கப்படுவார்கள்; அப்போது நீயும், உன் குமாரத்திகளுடன் முந்திய சீருக்குத் திரும்பி வருவாய்.
எசேக்கியேல் 16 : 56 (RCTA)
நீ அகந்தையுடன் வாழ்ந்த நாளில் உன் அக்கிரமம் வெளியாக்கப்படு முன் உன் சகோதரியாகிய சோதோமின் பெயரை நீ பழிக்கவில்லையா?
எசேக்கியேல் 16 : 57 (RCTA)
ஆனால் இப்பொழுது அவளைப் போலவே நீயும் ஆகிவிட்டாய்; ஏதோமின் குமாரத்திகள், அவர்களுடைய அண்டை வீட்டார், பிலிஸ்தியரின் குமாரத்திகள், உன்னை அலட்சியம் செய்யும் சுற்றுப்புறத்தார் எல்லார்க்கும் நீ கண்டனத்தின் இலக்கு ஆனாய்;
எசேக்கியேல் 16 : 58 (RCTA)
ஆகவே உன் முறைகேட்டுக்கும் அக்கிரமங்களுக்கும் உரிய தண்டனையை இப்பொழுது நீ சுமந்து கொள், என்கிறார் ஆண்டவர்.
எசேக்கியேல் 16 : 59 (RCTA)
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: கொடுத்த வாக்கை மீறி உடன்படிக்கையை நீ முறித்தது போலவே, நாமும் உனக்குச் செய்வோம்;
எசேக்கியேல் 16 : 60 (RCTA)
ஆயினும், உன் இளமையின் நாட்களில் நாம் உன்னுடன் செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்து, உன்னுடன் நித்திய உடன்படிக்கை செய்வோம்.
எசேக்கியேல் 16 : 61 (RCTA)
உன் தமக்கையரையும் தங்கையரையும் உனக்குக் குமாரத்திகளாக நாம் கொடுக்கும் போது, உன் நடத்தையை நினைத்து அதற்காக நாணி நிற்பாய்; நாம் அவர்களை உனக்குக் கொடுப்பது உன்னுடன் செய்த உடன்படிக்கையின் காரணமாகவன்று.
எசேக்கியேல் 16 : 62 (RCTA)
நாம் உன்னோடு உடன்படிக்கை செய்து கொள்வோம்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவாய்;
எசேக்கியேல் 16 : 63 (RCTA)
நீ செய்ததையெல்லாம் நாம் பொறுத்துக் கொள்ளும் காலத்தில், உன் அக்கிரமங்களை நினைத்து வெட்கத்தினால் வாய் பேசாமல் நிற்பாய், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63

BG:

Opacity:

Color:


Size:


Font: