எஸ்தர் 1 : 1 (RCTA)
இந்தியா முதல் எத்தியோப்பியா வரையிருந்த நூற்றிருபத்தேழு மாநிலங்களையும் அசுவேருஸ் மன்னன் ஆண்டுவந்தான்.
எஸ்தர் 1 : 2 (RCTA)
அவன் அரியணை ஏறிய போது சூசா அவன் தலைநகராயிருந்தது.
எஸ்தர் 1 : 3 (RCTA)
அவன் தன் நாட்டின் செல்வச் செழிப்பையும் பேராற்றலையும், தன் மகிமை பெருமையையும் மற்றவர்களுக்குக் காட்ட எண்ணினான்.
எஸ்தர் 1 : 4 (RCTA)
எனவே, தன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டிலே எல்லாச் சிற்றரசர்களுக்கும் தன் ஊழியர் அனைவருக்கும் பாரசீகப் பெரியோருக்கும் மேதியரில் உயர்குடி பிறந்தோருக்கும் ஆளுநர்களுக்கும் பல நாட்கள்- நூற்றெண்பது நாட்கள்- தன் அரண்மனையில் பெரியதொரு விருந்து செய்தான்.
எஸ்தர் 1 : 5 (RCTA)
விருந்து முடிந்த பின் அரசன் சூசாவில் வாழ்ந்து வந்த பெரியோர் சிறியோர் அனைவரையும் அழைத்து, அரசனின் அரண்மனையைச் சேர்ந்த நந்தவன மண்டபத்திலே அவர்களுக்கு ஏழு நாட்கள் விருந்து அளித்தான்.
எஸ்தர் 1 : 6 (RCTA)
அங்கே சலவைக் கல்லாலாகிய தூண்கள் இருந்தன. தந்தத்தாலாகிய வளையங்களில் பொருத்தப்பட்டு, கருஞ்சிவப்பு நிறமான மெல்லிய சணற் கயிறுகளைக் கொண்டு கட்டப்பட்ட நீலம், பச்சை, ஊதா நிறமுள்ள மெல்லிய சணல் திரைகள் அத்தூண்களின் நான்கு பக்கங்களிலும் தொங்கிக் கொண்டிருந்தன. மேலும் வெள்ளை, சிவப்புப் பளிங்குக் கற்களால் செய்யப்பட்டுச் சித்திர வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்ட தளத்தின் மீது பொன்னாலும் வெள்ளியாலுமாகிய மஞ்சங்கள் வரிசை வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.
எஸ்தர் 1 : 7 (RCTA)
விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் பருகுவதற்குத் தங்கக் கிண்ணங்கள் கொடுக்கப்பட்டன. பலவிதமான தட்டுகளில் உணவு வகைகள் பரிமாறப்பட்டன. அரச மகத்துவத்திற்கு ஏற்ற முதல் தரமான திராட்சை இரசம் ஏராளமாகப் பரிமாறப்பட்டது.
எஸ்தர் 1 : 8 (RCTA)
அரசன் தன் அரண்மனை அலுவலர் அனைவரையும் பந்திக்கு ஒருவராகப் பரிமாறும்படி பணித்தான். விருந்தினர் தத்தம் விருப்பம் போல் குடித்தனர்; விரும்பாதவர்களைக் குடிக்க வேண்டும் என்று யாரும் வற்புறுத்தவில்லை.
எஸ்தர் 1 : 9 (RCTA)
அரசி வஸ்தியும் அசுவேருஸ் அரண்மனையில் பெண்களுக்கென தனியொரு விருந்து அளித்தாள்.
எஸ்தர் 1 : 10 (RCTA)
ஏழாம் நாளன்று மது அருந்தி மகிழ்வுற்றிருந்த அரசன் தன் ஏவலர்களாகிய மௌமான், பாசத்தா, ஆர்போனா, பாகத்தா, அப்கத்தா, செதார், காற்காஸ் என்னும் ஏழு அண்ணகர்களை அழைத்தான்.
எஸ்தர் 1 : 11 (RCTA)
அரச முடி தரித்தவளாய் அரசி வஸ்தியைத் தன் முன் அழைத்து வரக் கட்டளையிட்டான். பேரழகியான அவளை மக்கள் அனைவருக்கும் சிற்றரசர்களுக்கும் காட்டவேண்டும் என்பதே அவன் எண்ணம்.
எஸ்தர் 1 : 12 (RCTA)
அவளோ அண்ணகர் கூறிய அரச கட்டளையை அலட்சியம் செய்து வர மறுத்து விட்டாள். அதனால் அரசன் கடும் கோபமுற்றான்.
எஸ்தர் 1 : 13 (RCTA)
எனவே, அரசு மரபுப்படித் தன் அருகிலேயே இருந்து வந்த அமைச்சர்களிடம் ஆலோசனை கேட்டான். அவர்கள் முன்னோர்களின் சட்ட திட்டங்களை அறிந்த அறிஞர்களாதலால், அவர்களைக் கேட்காமல் அரசன் ஒன்றும் செய்வதில்லை.
எஸ்தர் 1 : 14 (RCTA)
அவ்வமைச்சர்களில் கார்சேனா, சேத்தார், அத்மத்தா, தார்சிஸ், மாரேஸ், மார்சனா, மமூக்கன் ஆகியோரே முக்கியமானவர்கள். அரசனோடு நெருங்கிப் பழகி அவருக்கு அடுத்த நிலையில் விளங்கி வந்தவர்கள். இவர்கள் ஏழு பேரும் பாரசீகம், மேதியா நாடுகளில் சிற்றரசராய் இருந்தவர்கள்.
எஸ்தர் 1 : 15 (RCTA)
அசுவேருஸ் அரசன் அவர்களை நோக்கி, "நான் இந்த அண்ணகர் மூலம் சொல்லி அனுப்பிய கட்டளையை மதிக்காத வஸ்தி அரசியை எப்படித் தண்டிக்க வேண்டும்?" என்று கேட்டான்.
எஸ்தர் 1 : 16 (RCTA)
அரசனும் சிற்றரசர்களும் கேட்கும்படி மமூக்கன் பின்வருமாறு மறுமொழி கூறினான்: "வஸ்தி அரசி அரசரை மட்டும் அல்ல, அசுவேருஸ் அரசரின் எல்லாக் குடிகளையும் சிற்றரசர்களையுமே அவமதித்திருக்கிறாள்.
எஸ்தர் 1 : 17 (RCTA)
எப்படியென்றால், அரசி நடந்து கொண்ட முறை எல்லாப் பெண்களுடைய செவிக்கும் எட்டினால், அவர்கள், 'ஒகோ! அசுவேருஸ் அரசர் வஸ்தி அரசியைத் தம்மிடம் வரவேண்டுமென்று கட்டளை யிட்டிருக்க, அவள் போக மறுத்துவிட்டாளல்லவா?' என்று சொல்லித் தாங்களும் தங்கள் கணவரை அலட்சியம் செய்யத் துணிய மாட்டார்களா?
எஸ்தர் 1 : 18 (RCTA)
இதைப் பின்பற்றிப் பாரசீகர், மேதியர்களின் சிற்றரசர்களுடையை மனைவியர் யாவரும் தங்கள் கணவர் கட்டளையை அலட்சியம் செய்யக் கூடும். ஆதலால் அரசர் கோபம் கொண்டது முறையே.
எஸ்தர் 1 : 19 (RCTA)
எனவே உமக்கு விருப்பமாயின், பின்வருமாறு ஒர் ஆணை பிறப்பிக்கலாம்: அதாவது, வஸ்தி அரசி இனி அரசருக்குமுன் வரக்கூடாது; அவனுடைய அரசிப் பட்டம் அவளை விடச் சிறந்த மற்றொருத்தியைச் சேரும் என்று கட்டளையிட வேண்டும். இது மாற்றப்படாதிருக்கும் பொருட்டு, பாரசீகர், மேதியர் நாட்டுச் சட்டநூலில் அது எழுதப்பட வேண்டும்.
எஸ்தர் 1 : 20 (RCTA)
மேலும் இக்கட்டளையைப் பரந்த உமது நாடெங்கும் பறைசாற்ற வேண்டும். இதனால் பெரியோர் சிறியோர் ஆகிய அனைவரின் மனைவியரும் இனித் தம் கணவரை மதித்து நடப்பர்."
எஸ்தர் 1 : 21 (RCTA)
மமூக்கன் கூறியது அரசனுக்கும் சிற்றரசர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது. எனவே அரசன் அவன் கூறியபடியே செய்தான்.
எஸ்தர் 1 : 22 (RCTA)
வீட்டிற்குத் தலைவனும் முழு அதிகாரியும் கணவனே என்பதை, பல மொழி பேசும் தன் நாட்டினர் அனைவரும் படித்துப் புரிந்து கொள்ளும் பொருட்டு, அவரவர் மொழிகளில் அதை எழுதி, தன் நாடெங்கும் பறைசாற்றினான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

BG:

Opacity:

Color:


Size:


Font: