உபாகமம் 13 : 1 (RCTA)
உங்களுக்குள்ளே தீர்க்கதரிசியேனும் தான் கனவு கண்டதாகச் சாதிக்கிறவனேனும் தோன்றி, உங்களுக்கு யாதொரு அடையாளத்தை அல்லது அற்புதமான சில காரியத்தை முன்னறிவிக்கலாம்.
உபாகமம் 13 : 2 (RCTA)
பிறகு அவன் சொல்லியபடி நடந்ததென்றால், அவன்: வா; நீ அறியாத வேறு தேவர்களைப் பின்பற்றி அவர்களுக்குப் பணி செய்வோம் என உனக்குச் சொல்லலாம்.
உபாகமம் 13 : 3 (RCTA)
நீ அப்படிப்பட்ட தீர்க்கதரிசியேனும் கனவுக்காரனேனும் சொல்லுகிற பேச்சுக்களைக் கேளாதே. ஏனென்றால், உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் முழு இதயத்தோடும் முழு ஆன்மாவோடும் நேசிக்கிறீர்களோ அல்லவோவென்று வெளிப்படையாய்த் தெரியும்படி அவர் உங்களைச் சோதிக்கிறார்.
உபாகமம் 13 : 4 (RCTA)
நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மட்டுமே பின்பற்றி, அவருக்கு அஞ்சுகிறவர்களுமாய் அவருடைய கட்டளைகளை அனுசரிக்கிறவர்களுமாய், அவருடைய வார்த்தைக்குச் செவி கொடுக்கிறவர்களுமாய், அவருக்கு மட்டுமே ஊழியம் செய்து, அவரோடு ஒன்றித்திருக்கக் கடவீர்கள்.
உபாகமம் 13 : 5 (RCTA)
அந்தத் தீர்க்கதரிசி அல்லது கனவுக்காரன் கொலை செய்யப்படக் கடவான். ஏனென்றால், உங்களை எகிப்து நாட்டிலிருந்து விடுதலை செய்தவரும், அடிமை வாழ்வினின்று மீட்டவருமாகிய உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து உன்னை நீக்கவும், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கற்பித்த நெறியினின்று உன்னை வழுவச் செய்யவும் கருதி அவன் பிதற்றினவனாகையால், நீங்கள் அப்படிப்பட்ட தீமையினின்று விலகக்கடவீர்கள்.
உபாகமம் 13 : 6 (RCTA)
உன் தாய்க்குப் பிறந்த உன் சகோதரனனேனும், உன் புதல்வன் புதல்வியேனும், உன் மார்புக்குரிய உன் மனைவியேனும், உன் ஆன்மாவைப்போல் நேசிக்கிற உன் நண்பனேனும் மறைவாய் வந்து: நீ வா; நீயும் உன் முன்னோரும் அறிந்திராத தேவர்களைத் தொழுவோம்.
உபாகமம் 13 : 7 (RCTA)
அந்தத் தேவர்களே கிட்டத்திலும் தூரத்திலும் எங்கே பார்த்தாலும் நாட்டின் ஒரு முனைதொடங்கி மறு முனைமட்டும் எல்லா மக்களுக்கும் தேவர்கள் என்று சொல்லி (உன்னை அழைத்தாலும்),
உபாகமம் 13 : 8 (RCTA)
நீ அவனுக்கு இணங்காதே; அவன் பேச்சுக்குச் செவிகொடுக்காதே; அவனைக் கருணைக் கண்ணாலே பார்த்து அவனைக் காக்க வேண்டுமென்று அவன்மேல் இரக்கம் வைக்காதே.
உபாகமம் 13 : 9 (RCTA)
உடனே அவனைக் கொன்றுவிடு. முதலில் உன்கையும், பின்பு மக்களனைவரின் கைகளும் அவன் மேல் படவேண்டும்.
உபாகமம் 13 : 10 (RCTA)
கல்லால் எறியப்பட்டு அவன் சாகக்கடவான். ஏனென்றால், அடிமை வாழ்வாகிய எகிப்து நாட்டிலிருந்து உன்னை விடுதலை செய்த உன் கடவுளாகிய ஆண்டவரை நீ விட்டு விலகும்படி அவன் உன்னை ஏவப்பார்த்தான்.
உபாகமம் 13 : 11 (RCTA)
அதனாலே இஸ்ராயேலர் யாவரும் அதைக் கேள்வியுற்று அஞ்சி இனிமேல் இப்படிப்பட்ட கொடுமையைச் செய்யாதிருப்பார்கள்.
உபாகமம் 13 : 12 (RCTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் நீ வாழும்படி உனக்குக் கொடுக்கவிருக்கும் நகரங்கள் யாதொன்றில்,
உபாகமம் 13 : 13 (RCTA)
பேலியாலின் மக்கள் புறப்பட்டுத் தங்கள் நகரத்தின் குடிகளை நோக்கி: நீங்கள் அறியாத வேறு தேவர்களுக்குப் பணிவிடை செய்யப்போகிறோம்; நீங்களும் வாருங்கள் என்று சொல்லி மேற்கூறிய நகரத்தாரை வஞ்சித்ததாக நீ கேள்விப்படுவாயேயாகில்,
உபாகமம் 13 : 14 (RCTA)
நீ கவனத்தோடும் சுறுசுறுப்போடும் அதை விசாரித்துக் கேட்டு ஆராய்ந்த பிற்பாடு, அந்தச் செய்தி உண்மைதானென்றும், வெறுக்கத்தக்க அந்தச் செயல் உன் நடுவே நடந்தது உண்மையும் நிச்சயமுமானதென்றும் நீ காண்பாயாயின்,
உபாகமம் 13 : 15 (RCTA)
உடனே நீ அந்த நகரத்துக் குடிகளைக் கருக்கு வாளினால் வெட்டி, அந்நகரத்தையும் அழித்து, அதிலுள்ள யாவற்றையும் அதில் இருக்கிற மிருகவுயிர்களையும் அழித்து,
உபாகமம் 13 : 16 (RCTA)
(அதில் கொள்ளையிடப்பட்ட) சாமான் தட்டுமுட்டு முதலியவற்றை நடு வீதியிலே கூட்டிக் குவித்து, அவற்ளையும் நகரத்தையும்கூட சுட்டெரித்து, உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் புகழ்ச்சியாக முழுவதும் நெருப்புக்கு இரையாகும்படியாகவும், அது இனி ஒருகாலும் கட்டப்படாமல் நித்திய கல்மேடாய் இருக்கும்படியாகவும் செய்யக்கடவாய்.
உபாகமம் 13 : 17 (RCTA)
சபிக்கப்பட்ட பொருட்களில் யாதொன்றையும் நீ கையில் எடுக்காதே. அப்போதுதான் ஆண்டவர் தமது கடுங்கோபத்தைவிட்டு, உன்மேல் இரங்கி, உன் மூதாதையருக்கு ஆணையிட்டுச் சொல்லியபடி உன்னை விருத்தியடையச் செய்வார்.
உபாகமம் 13 : 18 (RCTA)
(இந்த வார்த்தை நிறைவேறுவதற்கு) நீ உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலிக்குச் செவி கொடுத்து, அவருடைய கட்டளைகளையெல்லாம் நீ கைக்கொண்டு அனுசரிக்க வேண்டும். உன் கடவுளாகிய ஆண்டவருடைய பார்வைக்கு விருப்பமானதை நீ செய்யும்படியாகவே நான் இன்று மேற்கூறிய கட்டளைகளை உனக்கு விதித்திருக்கிறேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

BG:

Opacity:

Color:


Size:


Font: