அப்போஸ்தலர்கள் 8 : 1 (RCTA)
முடியப்பர் கொலைக்குச் சவுல் உடன்பட்டிருந்தார். அந்நாளில் யெருசலேமில் திருச்சபையை எதிர்த்துப் பெருங் கலாபனை எழுந்தது. அப்போஸ்தலர்களைத் தவிர மற்ற அனைவரும் யூதேயா, சமாரியாவின் நாட்டுப் புறமெங்கும் சிதறுண்டு போனார்கள்.
அப்போஸ்தலர்கள் 8 : 2 (RCTA)
இறைப்பற்றுடையோர் சிலர் முடியப்பரை அடக்கம் செய்து அவருக்காகப் பெரிதும் துக்கம் கொண்டாடினர்.
அப்போஸ்தலர்கள் 8 : 3 (RCTA)
சவுலோவென்றால் திருச்சபையை ஒழிக்க முயன்றார். வீடு வீடாய் நுழைந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டு போய்ச் சிறையில் தள்ளினார்.
அப்போஸ்தலர்கள் 8 : 4 (RCTA)
சிதறுண்டுபோனவர்கள் தாங்கள் சென்ற இடங்களில் நற்செய்தியை அறிவித்தனர்.
அப்போஸ்தலர்கள் 8 : 5 (RCTA)
பிலிப்பு சமாரியா நகருக்குச் சென்று அங்கு உள்ளவர்களுக்கு மெசியாவை அறிவித்தார்.
அப்போஸ்தலர்கள் 8 : 6 (RCTA)
பிலிப்பு செய்த அருங்குறிகளை மக்கள் கண்டபோது அல்லது அவற்றைக் குறித்துக் கேள்வியுற்றபோது, ஒருமனதாய்த் திரண்டு வந்து, அவர் சொல்வதைக் கருத்தாய்க் கேட்டனர்.
அப்போஸ்தலர்கள் 8 : 7 (RCTA)
பேய் பிடித்திருந்த பலரிடமிருந்து அசுத்த ஆவிகள் கூச்சலிட்டுக்கொண்டு வெளியேறின. திமிர்வாதக்காரர், முடவர் பலர் குணமடைந்தனர்.
அப்போஸ்தலர்கள் 8 : 8 (RCTA)
இதனால் அந்நகரில் பெருமகிழ்ச்சி உண்டாயிற்று.
அப்போஸ்தலர்கள் 8 : 9 (RCTA)
அந்நகரில் சீமோன் என்னும் ஒருவன் இருந்தான். அவன் மந்திரங்கள் செய்து சமாரியா மக்களை மயக்கித் தான் ஒரு பெரிய மனிதனெனக் காட்டிக்கொண்டு வந்தான்.
அப்போஸ்தலர்கள் 8 : 10 (RCTA)
மாபெரும் சக்தி எனும் கடவுளின் வல்லமை இவனே என்று சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும், அவன் சொல்வதை விரும்பிக் கேட்டனர்.
அப்போஸ்தலர்கள் 8 : 11 (RCTA)
இப்படிக் கேட்டு வந்தது, அவன் தன் மாய வித்தைகளால் நெடுநாளாக அவர்களை மயக்கி வந்ததால்தான்.
அப்போஸ்தலர்கள் 8 : 12 (RCTA)
ஆனால், பிலிப்பு கடவுளின் அரசைக் குறித்தும், இயேசு கிறிஸ்துவின் பெயரைக் குறித்தும் நற்செய்தி அறிவித்தபோது, ஆண்களும் பெண்களும் அவர் கூறியதை விசுவசித்து ஞானஸ்நானம் பெற்றனர்.
அப்போஸ்தலர்கள் 8 : 13 (RCTA)
அப்பொழுது சீமோனும் விசுவசித்து ஞானஸ்நானம் பெற்றான். பெற்றபின் பிலிப்புவோடு கூடவே இருந்து அவர் செய்த அருங்குறிகளையும் அரிய புதுமைகளையும் கண்டு திகைத்து நின்றான்.
அப்போஸ்தலர்கள் 8 : 14 (RCTA)
கடவுளின் வார்த்தையைச் சமாரியர் ஏற்றுக்கொண்டதை யெருசலேமிலிருந்த அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, இராயப்பரையும் அருளப்பரையும் அவர்களிடம் அனுப்பினர்.
அப்போஸ்தலர்கள் 8 : 15 (RCTA)
அவர்கள் போய், சமாரியர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர்களுக்காக வேண்டினர்.
அப்போஸ்தலர்கள் 8 : 16 (RCTA)
ஏனெனில், அதுவரையில் அவர்களில் ஒருவர்மீதும் பரிசுத்த ஆவி இறங்கவில்லை. ஆண்டவராகிய கிறிஸ்துவின் பெயரால் ஞானஸ்நானம் மட்டுமே பெற்றிருந்தனர்.
அப்போஸ்தலர்கள் 8 : 17 (RCTA)
ஆதலின், அப்போஸ்தலர்கள் அவர்கள்மீது கைகளை விரிக்கவே, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 8 : 18 (RCTA)
அப்போஸ்தலர்கள் கைகளை விரிப்பதால் பரிசுத்த ஆவி அளிக்கப் பெறுவதைக்கண்ட சீமோன்,
அப்போஸ்தலர்கள் 8 : 19 (RCTA)
"எவன்மீது கைகளை விரிப்பேனோ, அவன் பரிசுத்த ஆவியை அடைந்துகொள்ளுமாறு எனக்கும் அந்த வல்லமையைக் கொடுங்கள்" என்று சொல்லிப் பணத்தைக் கொடுக்கப்போனான்.
அப்போஸ்தலர்கள் 8 : 20 (RCTA)
இராயப்பரோ அவனை நோக்கி, "உன் பணத்தோடு நீயும் நாசமாய்ப் போ; பணத்தைக் கொடுத்துக் கடவுளின் கொடையையா வாங்க நினைத்தாய்?
அப்போஸ்தலர்கள் 8 : 21 (RCTA)
இதில் உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை. ஏனெனில், கடவுள்முன் உன் உள்ளம் நேர்மையற்றது.
அப்போஸ்தலர்கள் 8 : 22 (RCTA)
உனது தீயபோக்கை விட்டு, மனம் திரும்பி, ஆண்டவரை மன்றாடு; உன் உள்ளத்தில் எழுந்த இந்த எண்ணம் ஒரு வேளை மன்னிக்கப்படலாம்.
அப்போஸ்தலர்கள் 8 : 23 (RCTA)
ஏனெனில், பிச்சுப் போன்ற கசப்பால் உன் உள்ளம் நிறைந்து, பாவத்திற்கு நீ அடிமையாய் இருக்கக் காண்கிறேன்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 8 : 24 (RCTA)
அதற்குச் சீமோன், "நீங்கள் சொன்ன கேடு எதுவும் எனக்கு நேராதபடி ஆண்டவரிடம் எனக்காக மன்றாடுங்கள்" என்று கேட்டுக்கொண்டான்.
அப்போஸ்தலர்கள் 8 : 25 (RCTA)
இவ்வாறு ஆண்டவரின் வார்த்தையை அறிவித்து, அதற்குச் சான்று பகன்ற பின், அப்போஸ்தலர் யெருசலேமிற்குத் திரும்பினர். வழியில் சமாரியா நாட்டின் பல ஊர்களில் நற்செய்தி அறிவித்தனர்.
அப்போஸ்தலர்கள் 8 : 26 (RCTA)
ஒருநாள், ஆண்டவரின் தூதர் பிலிப்புவிடம், "யெருசலேமிலிருந்து காசா ஊருக்குப்போகும் சாலை வழியாய்த் தெற்கு நோக்கிப் புறப்பட்டுச் செல்" என்றார். இச்சாலை இன்று ஆள் நடமாட்டமற்றது. பிலிப்பு புறப்பட்டுச் சென்றார்.
அப்போஸ்தலர்கள் 8 : 27 (RCTA)
எத்தியோப்பிய அரசியான காந்தாக்கே என்பவளின் மேலலுவலன் ஒருவன் இறைவனை வழிபட யெருசலேமிற்குச் சென்றிருந்தான்.
அப்போஸ்தலர்கள் 8 : 28 (RCTA)
அவன் ஓர் அண்ணகன். அவ்வரசியின் பொருளமைச்சன். அவன் தனது ஊர் திரும்புகையில் தேரில் உட்கார்ந்து, இசையாஸ் எழுதிய இறைவாக்குகளைப் படித்துக்கொண்டிருந்தான்.
அப்போஸ்தலர்கள் 8 : 29 (RCTA)
"தேரை அணுகி அதன் கூடவே போ" என்று ஆவியானவர் பிலிப்புவிடம் சொன்னார்.
அப்போஸ்தலர்கள் 8 : 30 (RCTA)
பிலிப்பு விரைந்து ஓடி, அதை நெருங்கியபோது, அவன் இசையாஸ் எழுதிய இறைவாக்குகளைப் படிப்பதைக் கேட்டு, "படிப்பதன் பொருள் உமக்கு விளங்குகிறதா?" என்று வினவினார்.
அப்போஸ்தலர்கள் 8 : 31 (RCTA)
அதற்கு அவன், "யாராவது எடுத்துச் சொன்னாலொழிய எப்படி விளங்கும்?" என்று சொல்லி, தேரில் ஏறி தன்னுடன் உட்காரும்படி பிலிப்புவை அழைத்தான்.
அப்போஸ்தலர்கள் 8 : 32 (RCTA)
அப்போது அவன் படித்துக்கொண்டிருந்த மறைநூலின் பகுதி பின்வருமாறு: ' செம்மறிபோலக் கொல்லப்படுவதற்கு இழுத்துச் செல்லப்பட்டார். உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத ஆட்டுக்குட்டி போல், அவர் வாய் திறக்கவில்லை.
அப்போஸ்தலர்கள் 8 : 33 (RCTA)
தாழ்வுற்ற நிலையில் அவருக்கு நீதி வழங்கப்படவில்லை. அவரது சந்ததியைப் பற்றிச் சொல்லுபவன் யார் ? ஏனெனில், அவரது வாழ்வு இவ்வுலகினின்று எடுபடும். '
அப்போஸ்தலர்கள் 8 : 34 (RCTA)
அண்ணகன் பிலிப்புவிடம், "இறைவாக்கினர் யாரைக் குறித்து இதைக் கூறினார்? தன்னைக் குறித்தா? இன்னொருவரைக் குறித்தா? தயவு செய்து சொல்லும்" என்று கேட்டான்.
அப்போஸ்தலர்கள் 8 : 35 (RCTA)
அதற்கு மறுமொழியாக, பிலிப்பு, மேற்சொன்ன மறைநூல் வாக்குகளை வைத்துக் கொண்டு, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவனுக்கு அறிவித்தார்.
அப்போஸ்தலர்கள் 8 : 36 (RCTA)
இப்படி அவர்கள் போகும்போது, வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடத்துக்கு வந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 8 : 37 (RCTA)
"இதோ, தண்ணீர் இருக்கிறது. நான் ஞானஸ்நானம் பெறத் தடை என்ன?" என்று கேட்டான் அண்ணகன்.
அப்போஸ்தலர்கள் 8 : 38 (RCTA)
உடனே தேரை நிறுத்தச் சொன்னான். பிலிப்பு, அண்ணகன் இருவருமே தண்ணீரில் இறங்கினர். அவர் அவனுக்கு ஞானஸ்நானம் அளித்தார்.
அப்போஸ்தலர்கள் 8 : 39 (RCTA)
இருவருமே தண்ணீரை விட்டு வெளியேறினபோது, ஆண்டவரின் ஆவியானவர் பிலிப்புவை அங்கிருந்து கொண்டுபோய்விட்டார். பின்னர் அண்ணகன் அவரைக் காணவில்லை. மகிழ்ச்சியோடு தன் வழியே சென்றான்.
அப்போஸ்தலர்கள் 8 : 40 (RCTA)
பிலிப்புவோ, தாம் அசோத் என்னும் ஊரில் இருப்பதை உணர்ந்தார். பிறகு, சென்ற ஊர்களிலெல்லாம் நற்செய்தி அறிவித்துக் கடைசியாகச் செசரியாவை அடைந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40

BG:

Opacity:

Color:


Size:


Font: