அப்போஸ்தலர்கள் 14 : 1 (RCTA)
இக்கோனியாவிலும் அவ்வாறே நிகழ்ந்தது. அந்நகரில் யூதர்களின் செபக்கூடத்துக்குச்சென்று பேசியபோது யூதர், கிரேக்கர் பலரும் விசுவாசங்கொண்டனர்.
அப்போஸ்தலர்கள் 14 : 2 (RCTA)
விசுவசியாத யூதர்கள் புறவினத்தாரைத் தூண்டி, சகோதரர்களுக்கு எதிராக அவர்கள் மனத்தைக் கெடுத்தனர்.
அப்போஸ்தலர்கள் 14 : 3 (RCTA)
அப்போஸ்தலர்கள் இருவரும் அங்கே பல நாள் தங்கி, ஆண்டவரை நம்பி, துணிவுடன் பேசினர். ஆண்டவரும் தம் கருணையை வெளிப்படுத்தும் இப்போதனையை உறுதிப்படுத்த அவர்கள் கையால் அருங்குறிகளும் அற்புதங்களும் நிகழச் செய்தார்.
அப்போஸ்தலர்கள் 14 : 4 (RCTA)
நகரமக்களோ இரண்டுபட்டனர். ஒரு சாரார் யூதரோடும், மற்றொரு சாரார் அப்போஸ்தலரோடும் சேர்ந்து கொண்டனர்.
அப்போஸ்தலர்கள் 14 : 5 (RCTA)
புறவினத்தாரும் யூதரும் தம் தலைவர்களுடன் சேர்ந்து அப்போஸ்தலர்களை இழிவுபடுத்தி, கல்லாலெறியத் திட்டமிட்டனர்.
அப்போஸ்தலர்கள் 14 : 6 (RCTA)
அப்போஸ்தலர்களோ அதை அறிந்து லிக்கவோனியா நாட்டு லீஸ்திரா, தெர்பை என்னும் ஊர்களுக்கும் சுற்றுப் புறங்களுக்கும் ஓடினர்.
அப்போஸ்தலர்கள் 14 : 7 (RCTA)
அங்கெல்லாம் நற்செய்தி அறிவித்தனர்.
அப்போஸ்தலர்கள் 14 : 8 (RCTA)
கால் வழங்காத ஒருவன் லீஸ்திராவில் இருந்தான்.
அப்போஸ்தலர்கள் 14 : 9 (RCTA)
அவன் பிறவி முடவன், என்றுமே நடந்ததில்லை. சின்னப்பர் பேசுவதை அவன் கேட்டான். அவர் அவனை உற்று நோக்கி, குணம் பெறுவதற்கான விசுவாசம் அவனிடம் உள்ளதை உணர்ந்து,
அப்போஸ்தலர்கள் 14 : 10 (RCTA)
உரத்த குரலில், "எழுந்திரு, கால் ஊன்றி நேராக நில்" என்றார். அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான்.
அப்போஸ்தலர்கள் 14 : 11 (RCTA)
மக்கட் கூட்டம் சின்னப்பர் செய்ததைக் கண்டு லிக்கவோனிய மொழியில், "தெய்வங்களே மனித உருவில் நம்மிடையே இறங்கிவந்துள்ளன" என்று கூச்சலிட்டனர்.
அப்போஸ்தலர்கள் 14 : 12 (RCTA)
சின்னப்பர் முக்கிய பேச்சாளராயிருந்ததால், அவரை மெர்க்குரி என்றும், பர்னபாவை ஜூப்பிட்டர் என்றும் அழைத்தனர்:
அப்போஸ்தலர்கள் 14 : 13 (RCTA)
அப்போது, நகருக்கு எதிரிலுள்ள ஜூப்பிட்டர் கோயில் அர்ச்சகன், எருதுகளையும் மாலைகளையும் வாயிலுக்குக் கொண்டுவந்து, மக்களுடன் சேர்ந்து பலியிட முற்பட்டான்.
அப்போஸ்தலர்கள் 14 : 14 (RCTA)
ஆனால், இதைக் கேள்வியுற்ற அப்போஸ்தலர் பர்னபாவும் சின்னப்பரும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள் ஓடி உரத்த குரலில்,
அப்போஸ்தலர்கள் 14 : 15 (RCTA)
"நண்பர்களே, என்ன செய்கிறீர்கள்? நாங்களும், உங்களைப்போல எளிய நிலைக்குட்பட்ட மனிதர்கள்தானே. இப்பயனற்ற சிலைகளை விட்டுவிட்டு உயிருள்ள கடவுள் பக்கம் திரும்ப வேண்டுமென்று நற்செய்தியை அறிவிக்கிறோம். விண், மண், கடல் யாவற்றையும் அவற்றிலடங்கிய அனைத்தையும் ஆக்கியவர் அவரே.
அப்போஸ்தலர்கள் 14 : 16 (RCTA)
கடந்த காலங்களில் அவர் எல்லா இனத்தாரும் தங்கள் மனம் போனபோக்கில் நடக்கவிட்டுவிட்டார்.
அப்போஸ்தலர்கள் 14 : 17 (RCTA)
ஆயினும், தம்மை அறிந்துகொள்ள எத்தகைய சான்றும் இல்லாதபடி விட்டுவிடவில்லை. எவ்வாறெனில், வானினின்று உங்களுக்கு மழையைப் பொழிந்து, செழிப்புமிக்கப் பருவங்களை அளித்து, உங்கள் உள்ளம் மகிழ்ச்சி பொங்க, நிறைய உணவு கொடுத்து உங்களுக்கு நன்மை புரிந்துவந்தார்" என்றனர்.
அப்போஸ்தலர்கள் 14 : 18 (RCTA)
இவ்வாறு பேசியதால் தங்களுக்கு மக்கட் கூட்டம் பலியிடுவதை ஒருவாறு தடுக்கமுடிந்தது.
அப்போஸ்தலர்கள் 14 : 19 (RCTA)
அப்போது அந்தியோகியாவிலிருந்தும் இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களை ஏவி, சின்னப்பரைக் கல்லாலெறிந்தார்கள். அவர் இறந்துவிட்டதாக எண்ணி நகருக்கு வெளியே இழுத்துப் போட்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 14 : 20 (RCTA)
சீடர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். பிறகு அவர் எழுந்து நகருக்குள் சென்றார். மறுநாள் பர்னபாவுடன் தெர்பைக்குப் புறப்பட்டார்.
அப்போஸ்தலர்கள் 14 : 21 (RCTA)
அந்நகர மக்களுக்கு நற்செய்தியை அறிவித்து, பலரைச் சீடராக்கிய பின் லீஸ்திரா, இக்கோனியா, அந்தியோகியா ஆகிய ஊர்களுக்குத் திரும்பினர்.
அப்போஸ்தலர்கள் 14 : 22 (RCTA)
சீடர்களின் மனத்தை உறுதிப்படுத்தி விசுவாசத்தில் நிலைத்துநிற்க வேண்டுமென்றும், ' பல துன்பங்களின் வழியாகவே நாம் கடவுளின் அரசிற்குள் நுழைய வேண்டுமென்றும் ' அறிவுறுத்தினர்.
அப்போஸ்தலர்கள் 14 : 23 (RCTA)
ஒவ்வொரு சபைக்கும் மூப்பர்களை ஏற்படுத்தினர். நோன்பிருந்து செபம் செய்த பின்னர், அவர்கள் விசுவசித்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
அப்போஸ்தலர்கள் 14 : 24 (RCTA)
பிசீதியாவைக் கடந்து பம்பிலியாவிற்கு வந்தனர்.
அப்போஸ்தலர்கள் 14 : 25 (RCTA)
பெர்கேயில் தேவ வார்த்தையைப் போதித்து அத்தாலியாவிற்குச் சென்றனர்.
அப்போஸ்தலர்கள் 14 : 26 (RCTA)
அவர்கள் இப்போது செய்து முடித்த பணிக்காக, கடவுளின் அருளுக்கு ஒப்படைக்கப்பட்டுச் சென்றது அந்தியோகியாவிலிருந்துதான்.
அப்போஸ்தலர்கள் 14 : 27 (RCTA)
அங்கே வந்து சேர்ந்ததும், சபையைக் கூட்டிக் கடவுள் தங்களுக்காக அரிய பெரிய செயல்களைப் புரிந்ததையும், புறவினத்தாருக்கு விசுவாச வாயிலைத் திறந்துவிட்டதையும் எடுத்துரைத்தனர்.
அப்போஸ்தலர்கள் 14 : 28 (RCTA)
அங்கே சீடர்களுடன் பலநாள் தங்கியிருந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

BG:

Opacity:

Color:


Size:


Font: