2 சாமுவேல் 8 : 1 (RCTA)
இதன் பின் நிகழ்ந்ததாவது: தாவீது பிலிஸ்தியரை முறியடித்து அவர்களை அடிமைப் படுத்தினதால் இஸ்ராயேல் அவர்களுக்குக் கப்பம் கட்டும் கடமை ஒழிந்தது.
2 சாமுவேல் 8 : 2 (RCTA)
அவர் மோவாபியரையும் தோற்கடித்து, அவர்களைத் தரையில் ஒரே நிரையாய்ப் படுக்க வைத்து அவர்கள்மேல் நூல்போட்டு அளந்தார்; அளக்கப்பட்டவர்களில் ஒரு பகுதி மக்களைக் கொன்றார்; மறுபகுதி மனிதரை உயிரோடு விட்டு வைத்தார். மோவாபியர் தாவீதுக்கு அடிமைகளாகி அவருக்குக் கப்பம் கட்டி வந்தார்கள்.
2 சாமுவேல் 8 : 3 (RCTA)
மறுபடியும் தாவீது யூப்ரட்டீஸ் நதிக்கரையிலுள்ள நாட்டைக் கைப்பற்றச் செல்கையில், ரொகோபின் மகன் ஆதரேஜர் என்ற சோபாவின் அரசனைத் தோற்கடித்தார்.
2 சாமுவேல் 8 : 4 (RCTA)
தாவீது அவனது சேனையில் ஆயிரத்து எழுநூறு குதிரை வீரரையும், இருபதினாயிரம் காலாட் படையினரையும் பிடித்து, நூறு தேர்களை இழுப்பதற்கு வேண்டிய குதிரைகளைத் தவிர மற்றக் குதிரைகளின் பின்னங்கால் நரம்புகளை அறுக்கச் செய்தார்.
2 சாமுவேல் 8 : 5 (RCTA)
அன்றியும் தமாஸ்கு நகரத்தாராகிய சீரியர் சோபாவின் அரசன் ஆதரேஜருக்கு உதவி செய்ய வந்தார்கள். அவர்களில் இருபத்திரண்டாயிரம் பேர் தாவீதால் கொல்லப்பட்டனர்.
2 சாமுவேல் 8 : 6 (RCTA)
அப்போது சீரியாவின் தமாஸ்கு நகரத்தில் தாவீது நிலைப்படைகளை வைத்தார். சீரியர் தாவீதுக்கு அடிமைகளாகி அவருக்குக் கப்பம் கட்ட நேரிட்டது. தாவீது சென்ற இடமெல்லாம் ஆண்டவர் அவரைக் காப்பாற்றினார்.
2 சாமுவேல் 8 : 7 (RCTA)
ஆதரேஜருடைய ஊழியர் வைத்திருந்த பொற்படைக்கலங்களைத் தாவீது எடுத்து யெருசலேமுக்குக் கொண்டு வந்தார்.
2 சாமுவேல் 8 : 8 (RCTA)
ஆதரேஜருடைய நகர்களாகிய பெத்தேயிலிருந்தும் பெரோத்திலிருந்தும் தாவீது அரசர் மிகத்திரளான வெண்கலத்தையும் எடுத்துக் கொண்டு வந்தார்.
2 சாமுவேல் 8 : 9 (RCTA)
அப்பொழுது எமாத் அரசனான தோவு என்பவன் ஆதரேஜருடைய சேனைகளை எல்லாம் தாவீது முறியடித்தார் என்று கேள்விப்பட்டான்.
2 சாமுவேல் 8 : 10 (RCTA)
தோவுவின் பகைவனான ஆதரேஜருடன் தாவீது போரிட்டு அவனைத் தோற்கடித்ததால் அவன் அவருக்கு மரியாதை செலுத்தவும், வாழ்த்துச் சொல்லவும், நன்றி கூறவும் தன் மகன் யோராமைத் தாவீது அரசரிடம் அனுப்பினான். யோராம் தன் கையில் பொன், வெள்ளி, வெண்கலப் பாத்திரங்களை எடுத்துச் சென்றான்.
2 சாமுவேல் 8 : 11 (RCTA)
தாவீது இவற்றை வாங்கிக் கொண்டார். முன்பு தாம் முறியடித்த சீரியர், மோவாபியர் அம்மோனியர், பிலிஸ்தியர், அமலேக்கியர் முதலியோரிடமிருந்தும்
2 சாமுவேல் 8 : 12 (RCTA)
இராகோப் மகன் ஆதரேஜர் என்ற சோபாவின் அரசனிடத்தினின்றும் பெற்றிருந்த வெள்ளியையும் பொன்னையும் ஆண்டவருக்குக் காணிக்கை செய்தது போல், இவற்றையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கினார்.
2 சாமுவேல் 8 : 13 (RCTA)
இவ்வாறு தாவீது தமக்கே புகழ் தேடிக் கொண்டார். அவர் சீரியாவைப் பிடித்த பின் திரும்பி வரும் வழியில் உப்புப் பள்ளத்தாக்கில் பதினெட்டாயிரம் பேரை வெட்டி வீழ்த்தினார்.
2 சாமுவேல் 8 : 14 (RCTA)
அன்றியும் தாவீது இதுமேயா நாடெங்கும் காவலர்களையும் பாசறைகளையும் வைத்தபடியால் இதுமேயர் அனைவரும் தாவீதின் அடிமைகள் ஆயினர். தாவீது சென்ற இடமெல்லாம் ஆண்டவர் அவரைக் காப்பாற்றினார்.
2 சாமுவேல் 8 : 15 (RCTA)
அவ்வாறே தாவீது இஸ்ராயேல் அனைத்தின் மேலும் ஆட்சி புரிந்து எல்லா மக்களுக்கும் நீதி வழங்கி வந்தார்.
2 சாமுவேல் 8 : 16 (RCTA)
சார்வியாவின் மகன் யோவாப் படைத்தலைவனாய் இருந்தான். அகிலூத் மகனான யோசபாத் ஆவணங்களைப் பாதுகாக்கும் பதவியில் இருந்தான்.
2 சாமுவேல் 8 : 17 (RCTA)
அக்கிதோபின் மகன் சாதோக்கும், அபியாத்தாருடைய மகன் அக்கிமெலேக்கும் குருக்களாகவும், சராயீயாசு எழுத்தனாகவும் இருந்தனர்.
2 சாமுவேல் 8 : 18 (RCTA)
யோயியதாவின் மகன் பனாயாசோ கெரேத்தியருக்கும் பெலேத்தியருக்கும் தலைவனாய் இருந்தான். தாவீதின் புதல்வரோ குருக்களாய் இருந்தார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

BG:

Opacity:

Color:


Size:


Font: