2 சாமுவேல் 18 : 1 (RCTA)
அப்போது தாவீது தம்மோடு இருந்த மக்களைக் கணக்கிட்டு, அவர்களுக்குப் படைத் தலைவர்களையும் நூற்றுவர்த் தலைவர்களையும் ஏற்படுத்தினார்.
2 சாமுவேல் 18 : 2 (RCTA)
மக்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, ஒன்றை யோவாபின் கையிலும், மற்றொன்றைச் சார்வியாவின் மகனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயியின் கையிலும், மூன்றாவதைக் கேத்தையனான எத்தாயியின் கையிலும் ஒப்படைத்தார். பிறகு தாவீது மக்களை நோக்கி, "இதோ நானும் உங்களோடு புறப்பட்டு வருகிறேன்" என்றார்.
2 சாமுவேல் 18 : 3 (RCTA)
அதற்கு மக்கள், "நீர் வர வேண்டாம். நாங்கள் புறமுதுகு காட்டி ஓடினாலும் அவர்கள் அதைப்பற்றி அதிகம் கவலைப்பட மாட்டார்கள். எங்களில் பாதிப்பேர் மடிந்தாலும் அதை ஒரு பொருட்டாக எண்ணமாட்டார்கள்; நீர் ஒருவரே பதினாயிரம் பேருக்கு இணையாக மதிக்கப்படுகிறீர். ஆதலால் நீர் எங்களுக்கு உதவியாக நகரில் இருப்பதே சிறந்தது" என்று சொன்னார்கள்.
2 சாமுவேல் 18 : 4 (RCTA)
அரசர் அவர்களை நோக்கி, "உங்களுக்கு நல்லதெனத் தோன்றுகிறதைச் செய்வேன்" என்றார். அதன்படி அரசர் வாயில் அருகே நின்று கொண்டிருக்க, மக்கள் நூறு நூறாகவும் ஆயிரமாயிரமாகவும் புறப்பட்டுப் போனார்கள்.
2 சாமுவேல் 18 : 5 (RCTA)
அப்பொழுது அரசர் யோவாப், அபிசாயி, எத்தாயி ஆகியோரை நோக்கி, "என் மகன் அப்சலேமை என் பொருட்டு உயிரோடு காப்பாற்ற வேண்டும்" என்று கட்டளையிட்டார். அரசர் அப்சலோமைக் குறித்து இவ்வாறு கட்டளையிட்டதை மக்கள் எல்லாரும் கேட்டனர்.
2 சாமுவேல் 18 : 6 (RCTA)
பின்பு மக்கள் இஸ்ராயேலருக்கு எதிராகப் புறப்பட்டார்கள். எபிராயிமின் காட்டில் போர் நடந்தது.
2 சாமுவேல் 18 : 7 (RCTA)
அங்கே இஸ்ராயேல் மக்கள் தாவீதின் சேனையால் தோற்கடிக்கப்பட்டனர். அன்று பெரிய படுகொலை உண்டாயிற்று.
2 சாமுவேல் 18 : 8 (RCTA)
இருபதினாயிரம் பேர் கொலையுண்டனர். அந்தப் போர் நாடு எங்கும் பரவியது. அன்று வாளால் மடிந்தவர்களை விடக் காட்டால் அழிக்கப்பட்டவர்களே அதிகம்.
2 சாமுவேல் 18 : 9 (RCTA)
அப்போது நிகழ்ந்ததாவது: அப்சலோம் கோவேறு கழுதை மேல் ஏறி வரும் போது, தாவீதின் வீரர்களைக் கண்டான். அந்நேரத்தில் அக்கோவேறு கழுதை பெரிய, அடர்ந்ததொரு கருவாலி மரத்தின் அடியில் சென்று கொண்டிருக்கும் போது, அப்சலோமுடைய தலை அம்மரத்தில் சிக்கிக் கொண்டது. அவன் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தொங்கிக் கொண்டிருக்க, அவன் ஏறி வந்த கோவேறு கழுதை அப்பால் ஓடிப் போயிற்று.
2 சாமுவேல் 18 : 10 (RCTA)
இதை ஒருவன் கண்டு, யோவாபிடம் சென்று, "கருவாலி மரத்தில் அப்சலோம் தொங்கக் கண்டேன்" என்று அறிவித்தான்.
2 சாமுவேல் 18 : 11 (RCTA)
யோவாப் தனக்குச் செய்தி கொண்டுவந்த அம் மனிதனை நோக்கி, "நீ அவனைக் கண்டாயே; பின் ஏன் அவனை வெட்டி வீழ்த்தவில்லை? நான் உனக்குப் பத்து வெள்ளிச் சீக்கல்களையும், ஓர் அரைக்கச்சையையும் கொடுத்திருப்பேனே" என்றான்.
2 சாமுவேல் 18 : 12 (RCTA)
அதற்கு அவன் யோவாபை நோக்கி, "நீர் ஆயிரம் வெள்ளிக் காசுகளை எனக்குக் கொடுத்தாலும், நான் அரசரின் மகன் மேல் கை வைக்க மாட்டேன்: 'என் பொருட்டு அப்சலோமை உயிரோடு காப்பாற்ற வேண்டும்' என்று அரசர் உமக்கும் அபிசாயியிக்கும் எத்தாயியிக்கும் கட்டளையிட்டதை நாங்கள் காதால் கேட்டோமே.
2 சாமுவேல் 18 : 13 (RCTA)
அன்றியும் நான் துணிந்து என் உயிருக்குக் கேடாக நடந்திருப்பேனாகில், அது பிறகு அரசருக்கு அறிவிக்கப்படுமன்றோ? நீரும் அதை மீறி நடக்கலாமோ?" என்றான்.
2 சாமுவேல் 18 : 14 (RCTA)
அதற்கு யோவாப், "உன் விருப்பப்படி நன் நடக்க போவதில்லை. உன் கண் முன்னேயே நான் சென்று அவனைக் கொன்று போடுகிறேன், பார்" என்று சொல்லி, தன் கையில் மூன்று ஈட்டிகளை எடுத்து வந்து அவற்றை அப்சலோமின் இதயத்தில் பாய்ச்சினான். குத்திய பின்னும் கருவாலி மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அப்சலோம் உயிரோடிருக்கக் கண்டு,
2 சாமுவேல் 18 : 15 (RCTA)
யோவாபின் பரிசையரான பத்து இளைஞர்கள் ஓடிவந்து அப்சலோமை வெட்டிக் கொன்றார்கள்.
2 சாமுவேல் 18 : 16 (RCTA)
பிறகு சாதாரண மக்களைக் கொல்லாமல் விடும் படி விரும்பி யோவாப் எக்காளம் ஊதி தப்பி ஓடின இஸ்ராயேலரை மக்கள் தொடாரதபடி செய்தான்.
2 சாமுவேல் 18 : 17 (RCTA)
பிறகு அவர்கள் அப்சலோமைத் தூக்கிச் சென்று காட்டிலுள்ள மிகவும் ஆழமான ஒரு பள்ளத்தில் எறிந்தனர். பின் அவன் மேல் கற்களைப் பெருமளவில் குவித்தனர். இஸ்ராயேலர் அனைவரும் தத்தம் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
2 சாமுவேல் 18 : 18 (RCTA)
சாகுமுன் அப்சலோம், "எனக்கு மகன் இல்லை. எனவே இது என் பெயரின் நினைவுச் சின்னமாய் இருக்கும்" என்று கூறி அரசரின் பள்ளத்தாக்கில் ஒரு தூணை நிறுத்தி அதற்குத் தன் பெயரை இட்டிருந்தான். அது இன்று வரை 'அப்சலோமின் கை' என்று அழைக்கப்பெற்று வருகிறது.
2 சாமுவேல் 18 : 19 (RCTA)
அப்பொழுது சாதோக்கின் மகன் அக்கிமாசு, "நான் அரசரிடம் சென்று ஆண்டவர் அவரை எதிரிகளிடமிருந்து காப்பாற்றினார் என்று விரைவாய் அறிவிக்கப் போகிறேன்" என்றான்.
2 சாமுவேல் 18 : 20 (RCTA)
யோவாப் அவனை நோக்கி, "இன்று நீ ஒன்றும் அறிவிக்க வேண்டாம். வேறொரு நாள் அறிவிக்கலாம். அரசரின் மகன் இறந்ததால், இன்று நீ அதை அறிவிக்க நான் அனுமதியேன்" என்றான்.
2 சாமுவேல் 18 : 21 (RCTA)
பின்பு யோவாப் கூசாயியை நோக்கி, "நீ போய், கண்டவற்றை அரசருக்கு அறிவி" என்றான். கூசாயி யோவாபை வணங்கி, பின் விரைந்தான்.
2 சாமுவேல் 18 : 22 (RCTA)
அப்பொழுது சாதோக்கின் மகன் அக்கிமாசு மேலும் யோவாபை நோக்கி, "கூசாயிக்குப் பிறகே நானும் செல்லத் தடை என்ன?" என்றான். அதற்கு யோவாப், "மகனே, இது நல்ல செய்தியன்று. ஆதலால் நீ ஏன் அவசரப்பட வேண்டும்?" என்றான்.
2 சாமுவேல் 18 : 23 (RCTA)
அக்கிமாசு, "நான் போனால் என்ன?" என்க, யோவாப், "சரி, போ" என்றான். அதன் படியே அக்கிமாசு குறுக்கு வழியாய்ச் சென்று, கூசாயிக்கு முந்திப் போனான்.
2 சாமுவேல் 18 : 24 (RCTA)
தாவீது இரண்டு வாயில்களுக்கு இடையே உட்கார்ந்திருந்தார். ஆனால் நகர மதிலின் வாயிலுக்கு மேல் இருந்த காவலன் தன் கண்களை உயர்த்தி தனிமையாய் ஓடிவந்த ஒரு மனிதனைக் கண்டதும்,
2 சாமுவேல் 18 : 25 (RCTA)
அரசரைக் கூவி அழைத்து அவருக்கு அதை அறிவித்தான். அப்பொழுது அரசர், "அவன் தனியாய் வந்தால் அவன் கூறவிருப்பது நல்ல செய்தியாகத் தானே இருக்கும்" என்றார். பிறகு அவன் ஓடி வந்து கிட்ட நெருங்கும் போது,
2 சாமுவேல் 18 : 26 (RCTA)
காவலன் வேறெருவன் ஓடிவருவதைக் கண்டு, "அதோ இன்னும் ஒருவன் தனியே ஓடி வருகிறான்" என்று மேலிருந்து சப்தமிட்டுச் சொன்னான். அதற்கு அரசர், "அவன் கொண்டு வருவதும் நற்செய்தியே" என்றார்.
2 சாமுவேல் 18 : 27 (RCTA)
அன்றியும் காவலன், "முந்தினவனின் ஓட்டத்தைக் கவனித்துப் பார்த்தால் அவன் சாதோக்கின் மகன் அக்கிமாசு போல் தோன்றுகிறது" என்றான். அதற்கு அரசர் "அவன் நல்லவன்; நற்செய்தி சொல்ல வருகிறான்" என்றார்.
2 சாமுவேல் 18 : 28 (RCTA)
அக்கிமாசோ அரசரை நோக்கி, "அரசே வாழி!" என்ற கூவித் தரையில் முகம் குப்புற விழுந்து அரசரை வணங்கினான். "அரசராகிய என் தலைவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த மனிதரை முறியடித்த உம்முடைய கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக!" என்றான்.
2 சாமுவேல் 18 : 29 (RCTA)
அப்பொழுது அரசர், "என் மகன் கேட்டதற்கு, அக்கிமாசு, "பேரரசே! தங்கள் ஊழியன் யோவாப் அடியேனை அனுப்பின போது, ஒரு பெரும் குழப்பம் இருந்தது; அது தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது" என்றான்.
2 சாமுவேல் 18 : 30 (RCTA)
அப்போது அரசர், "நீ அங்கே போய் நில்" என்றார். அவன் அப்படியே போய் நின்று கொண்டிருக்கையில் கூசாயி அவர் கண்ணில் பட்டான்.
2 சாமுவேல் 18 : 31 (RCTA)
அவன் நெருங்கி வந்து, "என் தலைவராகிய அரசே, நான் நற்செய்தி கொண்டு வருகிறேன். அதாவது, ஆண்டவர் உமது பக்கத்திலிருந்து உமக்கு எதிராய் எழுந்த அனைவருடைய கைகளினின்றும் இன்று உம்மைக் காப்பாற்றினார்" என்றான்.
2 சாமுவேல் 18 : 32 (RCTA)
அப்பொழுது அரசர் கூசாயியை நோக்கி, "என் மகன் அப்சலோம் நலந்தானா?" என்று கேட்டார். கூசாயி, "அவனுக்கு நேரிட்டது போல் என் தலைவராகிய அரசரின் எதிரிகளுக்கும், தீங்கு செய்ய உமக்கு எதிராய் எழும்பின யாவருக்கும் நிகழ்வதாக!" என்று மறுமொழி சொன்னான்.
2 சாமுவேல் 18 : 33 (RCTA)
அதைக் கேட்டு அரசர் மிகவும் துயருற்று, மேல் மாடியில் இருந்த தம் அறைக்குச் சென்று அழுதார். அவர் ஏறிப்போகையில், "என் மகன் அப்சலோம்! அப்சலோம், என் மகனே! உனக்குப் பதிலாக நான் சாவேன். என் மகனே, அப்சலோம்!" என்று புலம்பி அழுதார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

BG:

Opacity:

Color:


Size:


Font: