2 சாமுவேல் 16 : 1 (RCTA)
தாவீது மலையின் உச்சியைக் கடந்து சற்று தூரம் சென்ற போது, மிபிபோசேத்தின் ஊழியன் சீபா இரண்டு கழுதைகளுடன் அவரைச் சந்தித்தான். கழுதைகள் இருநூறு அப்பங்களையும், வற்றலான நூறு அத்திப்பழக் குலைகளையும் ஒரு துருத்தி திராட்சை இரசத்தையும் சுமந்து நின்றன.
2 சாமுவேல் 16 : 2 (RCTA)
அப்போது அரசர் சீபாவை நோக்கி, "இவை யாருக்கு?" என, சீபா, "கழுதைகள் அரசரின் வீட்டார் ஏறுவதற்கும், அப்பங்களும் அத்திப்பழங்களும் உம் ஊழியர்கள் சாப்பிடுவதற்கும், திராட்சை இரசம் பாலைவனத்தில் களைத்துப் போய் இருப்போர் குடிப்பதற்கும் தான்" என்று மறுமொழி சொன்னான்.
2 சாமுவேல் 16 : 3 (RCTA)
அதைக் கேட்டு அரசர், "உன் தலைவனின் மகன் எங்கே?" என்று கேட்க, சீபா, "யெருசலேமில் இருக்கிறார். 'இன்று இஸ்ராயேல் வீட்டார் என் தந்தையின் அரசை எனக்குக் கொடுப்பர்' என்று கூறுகிறார்" என்றான்.
2 சாமுவேல் 16 : 4 (RCTA)
அப்போது அரசர் சீபாவை நோக்கி, "மிபிபோசேத்தின் உடைமைகள் எல்லாம் உன் உடைமைகள் ஆயிற்று" என சீபா, "என் தலைவரான அரசே, உம் முன்னிலையில் நான் தயவு பெற வேண்டுகிறேன்" என்றான்.
2 சாமுவேல் 16 : 5 (RCTA)
பிறகு தாவீது பாகூரிம் வரை வந்தார். அந்நேரத்தில் சவுலின் குடும்பத்தைச் சேர்ந்த கேராவின் மகனான செமேயி என்ற பெயருடைய ஒரு மனிதன் அங்கிருந்து புறப்பட்டு வசைமொழி கூறியவண்ணமாய் நடந்து வந்தான்.
2 சாமுவேல் 16 : 6 (RCTA)
எல்லா மக்களும் வீரர்களும் தாவீதின் வலப்புறமும் இடப்புறமுமாக நடந்து போகையில், அவன் தாவீதையும், அவருடைய எல்லா ஊழியர்களையும் கல்லால் எறியத் தொடங்கினான்.
2 சாமுவேல் 16 : 7 (RCTA)
செமேயி அரசரைப் பழித்துப் பேசி, "இரத்த வெறியனே, அப்பாலே போ! பெலியாலின் மனிதா, தொலைந்து போ!
2 சாமுவேல் 16 : 8 (RCTA)
சவுலின் அரியணையை நீ அபகரித்துக் கொண்டதினால் அன்றோ, ஆண்டவர் சவுலின் வீட்டாருடைய இரத்தப் பழியை உன் மேல் வரச் செய்து, உன் அரசை உன் மகன் அப்சலோமுக்குக் கொடுத்திருக்கிறார்? இதோ, உன் தீச் செயல்களின் பாரம் உன்னை அழுத்துவது முறையே. ஏனெனில், நீ ஓர் இரத்த வெறியன்" என்று அரசரைத் திட்டினான்.
2 சாமுவேல் 16 : 9 (RCTA)
அப்போது சார்வியாவின் மகன் அபிசாயி அரசரைப் பார்த்து, "இந்தச் செத்த நாய் என் தலைவரான அரசரைப் பழிப்பது ஏன்? நான் போய் அவன் தலையைக் கொய்து வருகிறேன்" என்றான்.
2 சாமுவேல் 16 : 10 (RCTA)
அதற்கு அரசர், "சார்வியாவின் புதல்வர்களே, உங்களுக்கும் எனக்கும் என்ன? அவன் என்னைப் பழிக்கட்டும். தாவீதைப் பழிக்க வேண்டும் என்று ஆண்டவர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்க, 'அவன் இவ்வாறு செய்வானேன்?' என்று சொல்லத் துணிகிறவன் யார்?" என்றார்.
2 சாமுவேல் 16 : 11 (RCTA)
மீண்டும் அரசர் அபிசாயியையும் தம் ஊழியர்கள் அனைவரையும் நோக்கி, "இதோ, எனக்குப் பிறந்த என் மகனே என் உயிரைப் பறிக்கத் தேடும் போது, இந்த ஜெமினியின் மகன் அதிகமாய்ச் செய்தாலும் வியப்புற வேண்டாம். ஆண்டவருடைய கட்டளையின்படி அவன் என்னைப் பழிக்கட்டும்; தடை செய்யாதீர்கள்.
2 சாமுவேல் 16 : 12 (RCTA)
ஒருவேளை ஆண்டவர் நான் படும் இன்னல்களைக் கண்ணோக்கி இன்றைய இச் சாபத்துக்குப் பதிலாக எனக்கு நன்மை செய்வார்", என்றார்.
2 சாமுவேல் 16 : 13 (RCTA)
அதன்படியே தாவீதும் அவரோடு இருந்த அவர் தோழர்களும் தம் வழியே நடந்து போனார்கள். செமேயியோ மலையுச்சியிலிருந்து அரசரைப் பின்தொடர்ந்து அவரைப் பழித்துக் கொண்டும், அவர் மேல் கற்களை எறிந்து கொண்டும், மண்ணை வாரித் தூற்றிக் கொண்டும் நடந்து வருவான்.
2 சாமுவேல் 16 : 14 (RCTA)
அரசரும் அவரோடு இருந்த எல்லா மக்களும் களைப்புற்றவர்களாய் அவ்விடத்தில் தங்கி இளைப்பாறினார்கள்.
2 சாமுவேல் 16 : 15 (RCTA)
அப்சலோமும் அவனோடு இருந்த எல்லா மக்களும் யெருசலேமில் நுழைந்தார்கள். அக்கித்தோபேலும் அவனுடன் நுழைந்தான்.
2 சாமுவேல் 16 : 16 (RCTA)
தாவீதின் நண்பனும் அரக்கித்தனுமான கூசாயி அப்சலோமிடம் வந்து அவனை நோக்கி, "அரசே வாழ்க! அரசே வாழ்க!" என்று அவனை வணங்கினான்.
2 சாமுவேல் 16 : 17 (RCTA)
அப்சலோம் அவனைப் பார்த்து, "உன் நண்பன் மேல் உனக்கு இருக்கும் பரிவு இவ்வளவு தானோ? உன் நண்பனோடு நீயும் ஏன் போகவில்லை? " என்று கேட்டான்.
2 சாமுவேல் 16 : 18 (RCTA)
கூசாயி அப்சலோமை நோக்கி, "அப்படியன்று; ஆண்டவரும் இஸ்ராயேல் மக்கள் அனைவரும் எவரைத் தேர்ந்து கொண்டார்களோ, அவரோடு நான் இருக்க வேண்டும்; அவரோடு தான் இருப்பேன்.
2 சாமுவேல் 16 : 19 (RCTA)
இன்னும் ஒரு வார்த்தை: இப்போது நான் யாரிடம் பணிபுரிய வந்தேன்? அரசரின் மகனிடம் தானே! ஆம், உம் தந்தைக்கு எப்படிப் பணிபுரிந்து வந்தேனோ, அப்படியே உமக்கும் பணிபுரிவேன்" என்று மறுமொழி சொன்னான்.
2 சாமுவேல் 16 : 20 (RCTA)
அப்போது அப்சலோம் அக்கித்தோபேலை நோக்கி, "நாம் செய்ய வேண்டியதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்" என்றான்.
2 சாமுவேல் 16 : 21 (RCTA)
அதற்கு அக்கித்தோபேல் அப்சலோமிடம், "வீட்டைக் காக்க உம் தந்தை விட்டுச் சென்ற வைப்பாட்டிகளோடு நீர் படுக்கவேண்டும். நீர் உம் தந்தைதையை இழிவுபடுத்தின செய்தியை இஸ்ராயேலர் எல்லாரும் கேள்விப்படும் போது உம்முடன் இருக்க மனந்துணிவார்கள்" என்றான்.
2 சாமுவேல் 16 : 22 (RCTA)
அப்படியே அப்சலோமுக்கு மாடியின் மேல் ஒரு கூடாரத்தை அமைத்தார்கள். அங்கே அப்சலோம் இஸ்ராயேலர் யாவரும் பார்க்கத் தன் தந்தையின் வைப்பாட்டிகளோடு படுத்தான்.
2 சாமுவேல் 16 : 23 (RCTA)
அந்நாட்களில் அக்கித்தோபேல் கூறின அறிவுரை எல்லாம் கடவுளிடமிருந்து பெற்ற அறிவுரை போல் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அக்கித்தோபேல் கூறிய அறிவுரை அனைத்தையும் தாவீதும் அப்சலோமும் இவ்வாறே மதித்து வந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

BG:

Opacity:

Color:


Size:


Font: