2 நாளாகமம் 5 : 1 (RCTA)
சாலமோன் தம் தந்தை தாவீது கடவுளுக்கு நேர்ந்து கொண்டிருந்தவற்றை எல்லாம் கொண்டு வந்தார். பொன், வெள்ளியையும் எல்லாவிதத் தட்டு முட்டுகளையும் ஆலயத்தின் கருவூலங்களிலே வைத்தார்.
2 நாளாகமம் 5 : 2 (RCTA)
பின்பு ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சீயோன் என்ற தாவீதின் நகரிலிருந்து கொண்டு வருவதற்காக இஸ்ராயேலின் மூப்பர்களையும், குலத்தலைவர்கள் எல்லாரையும், இஸ்ராயேல் மக்களின் குடும்பத்தலைவர்களையும் யெருசலேமில் கூடிவரக் கட்டளையிட்டார்.
2 நாளாகமம் 5 : 3 (RCTA)
அவ்வாறே இஸ்ராயேலின் எல்லா மனிதரும் ஏழாம் மாதத்தின் திருவிழாவின் போது அரசரிடம் கூடி வந்தனர்.
2 நாளாகமம் 5 : 4 (RCTA)
இஸ்ராயேலின் மூப்பர் அனைவரும் வந்த பின்பு லேவியர்கள் திருப்பேழையை எடுத்து,
2 நாளாகமம் 5 : 5 (RCTA)
அதையும் அத்திருப் பேழையிலிருந்த தட்டு முட்டுகளையும் கொண்டு வந்தனர். திருவிடத்துத் தட்டு முட்டுகளையோ குருக்களும் லேவியர்களும் கொண்டு வந்தனர்.
2 நாளாகமம் 5 : 6 (RCTA)
அரசர் சாலமோனும் இஸ்ராயேல் மக்களும் திருப்பேழைக்கு முன்பாகக் கூடியிருந்த அனைவரும் எண்ணற்ற கடாக்களையும் மாடுகளையும் பலியிட்டனர்.
2 நாளாகமம் 5 : 7 (RCTA)
அவ்வாறே குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை ஆலயத்தின் உள்தூயகத்திற்குக் கொண்டு வந்து அதற்குத் குறிக்கப்பட்ட இடமாகிய கெருபீம்களின் இறக்கைகளுக்குக் கீழே வைத்தனர்.
2 நாளாகமம் 5 : 8 (RCTA)
அதாவது கெருபீம்கள் திருப்பேழை வைக்கப்பட்ட இடத்தின் மேல் தங்கள் இறக்கைகளை விரித்து, அதையும் அதன் தண்டுகளையும் மூடிக்கொண்டிருக்கும்படி அவற்றை வைத்தனர்.
2 நாளாகமம் 5 : 9 (RCTA)
திருப்பேழையைத் தூக்குவதற்கு உதவும் தண்டுகள் சற்று நீளமாய் இருந்ததால் அவற்றின் முனைகள் திருப்பேழைக்கு வெளியே சிறிது தெரிந்தன. ஆனால் கொஞ்சம் வெளியே இருந்தவர்களுக்கு அவை புலப்படா. திருப்பேழை இன்றுவரை அவ்விடத்திலேயே இருக்கிறது.
2 நாளாகமம் 5 : 10 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட பின்பு, ஆண்டவர் ஓரேபிலே அவர்களுக்குத் தமது திருச்சட்டத்தைக் கொடுத்த போது, மோயீசன் அப் பேழையில் வைத்திருந்த இரண்டு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் அத் திருப்பேழைக்குள் இல்லை.
2 நாளாகமம் 5 : 11 (RCTA)
குருக்கள் திருவிடத்திலிருந்து வெளியே வந்த போது அவர்கள் அத்தனை பேரும் புனிதப் படுத்தப் பட்டிருந்தனர். இறைவழிபாட்டு முறைமைகளும், பிரிவின் முறைகளும் இன்னும் குறிக்கப்படவில்லை.
2 நாளாகமம் 5 : 12 (RCTA)
லேவியர்களும், பாடகர்களும், அதாவது ஆசாப், கேமன், இதித்தூன் என்போரின் குழுவினரும், அவர்களின் புதல்வர்களும் சகோதரர்களும் மெல்லிய ஆடைகளை அணிந்து கொண்டு கைத்தாளங்களையும் தம்புருகளையும் ஒலித்துப் பாட்டுப் பாடி ஆர்ப்பரித்துப் பலிபீடத்தின் கீழ்த் திசையில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களோடு நூற்றிருபது குருக்கள் எக்காளங்களை ஊதிக்கொண்டிருந்தனர்.
2 நாளாகமம் 5 : 13 (RCTA)
அவர்கள் ஒரே குரலாய் எக்காளம் ஊதி, கைத்தாளம் கொட்டி, கிண்ணாரம் முதலிய பலவித இசைக் கருவிகளை இசைத்துப் பாட்டுப்பாடி ஆர்ப்பரித்த ஓசை வெகுதூரம் கேட்டது. அப்பொழுது, "ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர் நல்லவர். அவர்தம் இரக்கம் என்றென்றும் உள்ளது" என்று பாடகர் ஆண்டவருக்குப் புகழ்பாடினர். அவ்வேளையில் மேகம் ஆண்டவரின் ஆலயத்தை நிரப்பிற்று.
2 நாளாகமம் 5 : 14 (RCTA)
அதன் பொருட்டு குருக்கள் அங்கு நின்று, திருப்பணி புரிய முடியவில்லை. ஏனெனில் ஆண்டவரின் மகிமை அவரது ஆலயத்தை நிரப்பிற்று.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

BG:

Opacity:

Color:


Size:


Font: