1 சாமுவேல் 28 : 1 (RCTA)
அந்நாட்களில் நிகழ்ந்ததாவது: இஸ்ராயேலரை எதிர்த்துப் போரிடப் பிலிஸ்தியர் படை திரட்டினர். ஆக்கீசு தாவீதை நோக்கி, "நீயும் உன் மனிதர்களும் என்னோடு போர்க்களம் வர வேண்டும் என்று அறியக்கடவாய்" என்றான்.
1 சாமுவேல் 28 : 2 (RCTA)
அதற்குத் தாவீது, "அப்படியானால் உம் ஊழியன் செய்யப்போகிறதை விரைவில் அறிந்து கொள்வீர்" என்று சொன்னான். அப்பொழுது ஆக்கீசு தாவீதை நோக்கி, "இதற்காக நான் உன்னை எந்நாளும் என் மெய்க்காவலனாக ஏற்படுத்துவேன்" என்று சொன்னான்.
1 சாமுவேல் 28 : 3 (RCTA)
சாமுவேல் இறந்தார். மக்கள் எல்லாம் அவருக்காகத் துக்கம் கொண்டாடி அவர் நகராகிய ராமாத்தாவில் அவரை அடக்கம் செய்தனர். சவுல் சூனியக்காரரையும் குறி சொல்பவர்களையும் நாட்டில் இராதபடித் துரத்தியிருந்தார்.
1 சாமுவேல் 28 : 4 (RCTA)
பிலிஸ்தியர் ஒன்று திரண்டு சூனாமில் பாசறை அமைத்தனர். சவுலும் இஸ்ராயேலர் அனைவரையும் சேர்த்துக் கொண்டு கெல்போயேயில் பாசறை அமைத்தார்.
1 சாமுவேல் 28 : 5 (RCTA)
சவுல் பிலிஸ்தியரின் பாசறையைப் பார்த்து அஞ்சினர். அவர் உள்ளம் மிகவும் திகிலடைந்தது.
1 சாமுவேல் 28 : 6 (RCTA)
அவர் ஆண்டவரைக் கலந்து பேசினார். ஆனால் ஆண்டவர் கனவு வழியாகவோ குருக்கள் மூலமாகவோ இறைவாக்கினர் வழியாகவோ அவருக்கு மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை.
1 சாமுவேல் 28 : 7 (RCTA)
அப்பொழுது சவுல் தம் ஊழியர்களை நோக்கி, "நீங்கள் பித்தோனீசு என்னும் குறிகாரிகளில் ஒருத்தியைத் தேடிப்பாருங்கள். நான் அவளிடம் போய் ஆலோசனை கேட்பேன்" என்றார். அவர் ஊழியர்கள் அவரை நோக்கி, "எந்தோரில் அவ்விதக் குறிகாரி ஒருத்தி இருக்கிறாள்" என்று சொன்னார்கள்.
1 சாமுவேல் 28 : 8 (RCTA)
அப்பொழுது அவர் மாறுவேடம் பூண்டு கொண்டு இரு மனிதர்களுடன் சென்றார். அவர்கள் இரவிலே அப்பெண்ணிடம் வந்தார்கள். சவுல் அவளை நோக்கி, "நீ பித்தோனைக் கேட்டு எனக்குக் குறி சொல்லி, நான் எவனைச் சொல்வேனோ அவனை எழுந்து வரச் செய்" என்றார்.
1 சாமுவேல் 28 : 9 (RCTA)
அப்பெண் அவரை நோக்கி, "சவுல் குறி சொல்லுகிறவர்களையும், சூனியக்காரர்களையும் நாட்டில் இராதபடி செய்ததெல்லாம் உமக்குத் தெரியும். அவர்களை அழித்தார் என்றும் உமக்குத் தெரியும். என்னைக் கொல்லத் தானே என் உயிருக்குக் கண்ணி வைக்கிறீர்?" என்றாள்.
1 சாமுவேல் 28 : 10 (RCTA)
அப்பொழுது சவுல், "ஆண்டவர் மேல் ஆணை! இக்காரியத்தைப்பற்றி உனக்கு யாதொரு தீங்கும் நேரிடாது" என்றார்.
1 சாமுவேல் 28 : 11 (RCTA)
அதைக் கேட்ட அப்பெண், "உமக்கு நான் யாரை எழுப்ப வேண்டும்?" என்றதற்கு, அவர், சாமுவேலை எழுப்பு" என்று சொன்னார்.
1 சாமுவேல் 28 : 12 (RCTA)
அப்பெண் சாமுவேலைக் கண்டவுடன், உரத்த சத்தமாய்க் கூவி, சவுலை நோக்கி, "நீர் தானே சவுல்; ஏன் என்னை ஏமாற்றினீர்?" என்றாள்.
1 சாமுவேல் 28 : 13 (RCTA)
அரசர் அவளைப் பார்த்து, "அஞ்சாதே! நீ கண்டது என்ன?" என்று கேட்டார். அதற்கு அப்பெண் சவுலை நோக்கி, "தேவர்கள் பூமியினின்று எழுந்து வரக் கண்டேன்" என்றாள்.
1 சாமுவேல் 28 : 14 (RCTA)
அவர்களுடைய உருவம் என்ன?" என்று அவளைக் கேட்டார். அதற்கு அவள், "வயது முதிர்ந்த ஒருவர் எழுந்து வந்தார். அவர் ஒரு போர்வையால் மூடப்பட்டிருக்கிறார்" என்றாள். அவர் சாமுவேல் என்று சவுல் கண்டு கொண்டு முகம் தரையில் படக் குனிந்து வணங்கினார்.
1 சாமுவேல் 28 : 15 (RCTA)
சாமுவேல் சவுலை நோக்கி, "நான் எழுந்து வரும்படி நீ என்னைத் தொந்தரை செய்தது ஏன்?" என்று கேட்டார். அதற்குச் சவுல், "நான் மிகவும் துன்புறுகிறேன். பிலிஸ்தியர் என்னோடு போருக்கு வந்துள்ளார்கள். கடவுளும் என்னை விட்டு அகன்று போய்விட்டார். இறைவாக்கினர் மூலமாவது, கனவுகள் வழியாவது அவர் எனக்குப் பதில் சொல்ல மனதில்லாது போனார். எனவே, நான் செய்ய வேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படி உம்மை அழைத்தேன்" என்றார்.
1 சாமுவேல் 28 : 16 (RCTA)
அதற்குச் சாமுவேல், "ஆண்டவர் உன்னை விட்டு விலகி உன் எதிரியின் பக்கம் இருப்பதால், நீ என்னைக் கேட்க வேண்டியது என்ன இருக்கிறது?
1 சாமுவேல் 28 : 17 (RCTA)
ஆண்டவர் என் மூலம் உனக்குச் சொன்னபடியே செய்வார்; உன் அரசை உன் கையினின்று பறித்து உன் அயலான் தாவீதுக்குக் கொடுப்பார்.
1 சாமுவேல் 28 : 18 (RCTA)
நீ ஆண்டவருடைய சொல்லைக் கேளாமலும், அமலெக்கின் மேல் அவருக்கு இருந்த கோபத்தின் கொடுமையைத் தீர்க்காமலும் போனபடியால், நீ படும் துன்பங்களை எல்லாம் ஆண்டவரே இன்று உனக்கு அனுப்பியுள்ளார்.
1 சாமுவேல் 28 : 19 (RCTA)
மேலும், ஆண்டவர் உன்னோடு இஸ்ராயேலரையும் பிலிஸ்தியர் கையில் ஒப்படைப்பார். நாளை நீயும் உன் புதல்வர்களும் என்னுடன் இருப்பீர்கள். இஸ்ராயேலரின் பாசறையையும் ஆண்டவர் பிலிஸ்தியர் கையில் ஒப்படைப்பார்" என்றார்.
1 சாமுவேல் 28 : 20 (RCTA)
அதைக் கேட்டவுடன் சவுல் நெடுங்கிடையாய்த் தரையில் விழுந்தார். ஏனெனில் சாமுவேலின் வார்த்தைகளைப் பற்றி அஞ்சியிருந்தார். மேலும், அவர் அன்று முழுவதும் சாப்பிடாது இருந்தபடியால், அவர் வலிமை குன்றி இருந்தார்.
1 சாமுவேல் 28 : 21 (RCTA)
சவுல் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு அப்பெண் அவர் அருகில் வந்து அவரை நோக்கி, "இதோ உம் அடியாள் உமது சொல்லைக் கேட்டு என் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நீர் எனக்குச் சொன்னவற்றைக் கேட்டேன்.
1 சாமுவேல் 28 : 22 (RCTA)
இப்போது நீரும் உம் அடியாளுடைய வார்த்தைகளைக் கேளும்; நான் உமக்கு முன் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன். நீர் பயணம் செய்வதற்கு வலிமை பெறும்படி அதை உண்ணும்" என்றாள்.
1 சாமுவேல் 28 : 23 (RCTA)
அவர் தடுத்து, "சாப்பிட மாட்டேன்" என்றார். ஆனால் அவர் ஊழியர்களும் அப்பெண்ணும் அவரை மிகவும் வருந்திக் கேட்டுக் கொண்டதனால் கடைசியாய் அவர் அவர்கள் வார்த்தையைக் கேட்டுத் தரையிலிருந்து எழுந்து கட்டிலின் மேல் அமர்ந்தார்.
1 சாமுவேல் 28 : 24 (RCTA)
அப்பெண் ஒரு கொழுத்த கன்றுக் குட்டியைத் தன் வீட்டிலே வைத்திருந்தாள். விரைவில் சென்று அதை அடித்து, மாவை எடுத்துப் பிசைந்து, புளியாத அப்பங்களைச் சுட்டு,
1 சாமுவேல் 28 : 25 (RCTA)
சவுலுக்கும் அவர் ஊழியர்களுக்கும் முன்பாக வைத்தாள். சாப்பிட்ட பின் அவர்கள் எழுந்து அன்று இரவு முழுவதும் நடந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25

BG:

Opacity:

Color:


Size:


Font: