1 கொரிந்தியர் 6 : 1 (RCTA)
நீங்கள் ஒருவனுக்கு எதிராக வழக்குத் தொடுக்கும்போது, தீர்ப்புப் பெற இறை மக்களிடம் போகாமல், அவிசுவாசிகளிடம் போகத் துணிவானேன்?
1 கொரிந்தியர் 6 : 2 (RCTA)
இறை மக்கள் இவ்வுலகத்துக்குத் தீர்ப்பிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகமே உங்கள் முன் தீர்ப்புக்காக நிற்க வேண்டியிருக்க, சின்னஞ்சிறிய வழக்குகளைத் தீர்க்க உங்களுக்குத் தகுதியில்லாமல் போய்விட்டதா?
1 கொரிந்தியர் 6 : 3 (RCTA)
வானதூதர்களுக்கும் நாம் தீர்ப்பிடுவோம் என்பதை அறியீர்களோ? அப்படியிருக்க அன்றாட வாழ்க்கைக்குரியவற்றைத் தீர்க்கமுடியாதா?
1 கொரிந்தியர் 6 : 4 (RCTA)
அத்தகைய வழக்குகள் இருந்தால் திருச்சபையின் மதிப்பைப் பெறாதவர்களை நடுவர்களாக ஏற்படுத்துவதெப்படி?
1 கொரிந்தியர் 6 : 5 (RCTA)
உங்களுக்கு வெட்கம் உண்டாகவே இதைச் சொல்லுகிறேன். சகோதரர்களுடைய வழக்கில் நடுவனாயிருக்கத்தக்க சான்றோன் உங்களிடையே ஒருவன் கூட இல்லையா?
1 கொரிந்தியர் 6 : 6 (RCTA)
சகோதரன் சகோதரனுக்கு எதிராக வழக்காடுவதா? அதுவும் அவிசுவாசிகள் முன்னிலையிலா?
1 கொரிந்தியர் 6 : 7 (RCTA)
ஒருவன் மீது ஒருவன் வழக்குத் தொடர்வதே உங்களுக்கு ஒரு தோல்வி. அநியாயத்தை நீங்கள் ஏன் தாங்கிக்கொள்ளக் கூடாது? பிறர் உங்கள் பொருளை வஞ்சித்துக் கவர ஏன் விட்டுவிடக் கூடாது? மாறாக நீங்களே அநியாயம் செய்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 6 : 8 (RCTA)
பிறர் பொருளை வஞ்சித்துக் கவர்கிறீர்கள். அதுவும் சகோதரர்களுக்கே இப்படிச் செய்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 6 : 9 (RCTA)
அநியாயம் செய்பவர்களுக்குக் கடவுளின் அரசு உரிமையாகாது என்பது உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்துபோக வேண்டாம். காமுகர், சிலைவழிபாட்டினர், விபசாரர்,
1 கொரிந்தியர் 6 : 10 (RCTA)
இயற்கைக்கு மாறான பாவம் செய்வோர், அதற்கு உடன்படுவோர், திருடர், பொருளாசை பிடித்தவர், குடிகாரர், பழி பேசுவோர், கொள்ளைக்காரர் இவர்களுக்குக் கடவுளின் அரசு உரிமையாகாது.
1 கொரிந்தியர் 6 : 11 (RCTA)
இத்தகையோர் உங்களிடையிலும் சிலர் இருந்தனர். ஆயினும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயராலும், நம் கடவுளின் ஆவியாலும் உங்கள் பாவக் கறைகளைக் கழுவிப் போக்கிக் கொண்டீர்கள், பரிசுத்தரானீர்கள், இறைவனுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்பட்டீர்கள்.
1 கொரிந்தியர் 6 : 12 (RCTA)
' எதையும் செய்ய எனக்கு உரிமையுண்டு' என்கிறார்கள். - ஆனால் எல்லாமே பயன்தராது. எதையும் செய்ய எனக்கு உரிமையுண்டு என்பது உண்மைதான். ஆனால் எதற்கும் நான் அடிமையாக மாட்டேன்.
1 கொரிந்தியர் 6 : 13 (RCTA)
" உணவு வயிற்றுக்கென்றே உள்ளது; வயிறு உணவுக்கென்று உள்ளது" என்கிறீர்கள். ஆம், கடவுள் இரண்டையும் அழித்துவிடுவார். ஆனால், உடல் காமத்திற்கென்று இல்லை. ஆண்டவருக்கென்று இருக்கிறது. ஆண்டவரும் உடலுக்கே.
1 கொரிந்தியர் 6 : 14 (RCTA)
ஆண்டவரை உயிர்ப்பித்த கடவுள் நம்மையும் தம் வல்லமையால் உயிர்ப்பிப்பார்.
1 கொரிந்தியர் 6 : 15 (RCTA)
உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்பது உங்களுக்குத் தெரியாதா? அப்படியிருக்க நான் ஆண்டவரின் உறுப்புகளை எடுத்து வேசியின் உறுப்புகளாகச் செய்யலாமா?
1 கொரிந்தியர் 6 : 16 (RCTA)
ஒருகாலும் செய்யலாகாது. வேசியோடு சேருகிறவன் அவளோடு ஓருடலாகிறான் என நீங்கள் அறியீர்களோ? ஏனெனில், ' இருவரும் ஒரே உடலாய் இருப்பார்கள் '. என்றுள்ளது.
1 கொரிந்தியர் 6 : 17 (RCTA)
ஆனால் ஆண்டவரோடு சேர்ந்திருப்பவன் அவரோடு ஒரே ஆவி ஆகிறான்.
1 கொரிந்தியர் 6 : 18 (RCTA)
கெட்ட நடத்தையை விட்டு விலகுங்கள். மனிதன் செய்யும் பாவமெல்லாம் உடலுக்குப் புறம்பானாது; ஆனால் கெட்ட நடத்தை சொந்த உடலுக்கே எதிரான பாவம்.
1 கொரிந்தியர் 6 : 19 (RCTA)
உங்களுடைய உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்குள் குடிகொண்டிருக்கும் அந்த ஆவியைக் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்டீர்கள். ஆகவே, நீங்கள் உங்களுக்குச் சொந்தமல்ல,
1 கொரிந்தியர் 6 : 20 (RCTA)
ஏனெனில், நீங்கள் விலைகொடுத்து வாங்கப்பெற்றீர்கள். ஆகவே, உங்கள் உடலில் கடவுளை மகிமைப்படுத்துங்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

BG:

Opacity:

Color:


Size:


Font: