நீதிமொழிகள் 10 : 1 (OCVTA)
சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தன் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறான்; ஆனால் மூடத்தனமுள்ள மகனோ தன் தாய்க்கு துக்கத்தைக் கொடுக்கிறான்.
நீதிமொழிகள் 10 : 2 (OCVTA)
நீதியற்ற வழியில் சம்பாதித்த செல்வம் பயனற்றது, ஆனால் நீதியோ ஒருவனை மரணத்திலிருந்து விடுவிக்கிறது.
நீதிமொழிகள் 10 : 3 (OCVTA)
யெகோவா நீதிமான்களைப் பசியாயிருக்க விடுவதில்லை, ஆனால் கொடியவர்களின் பேராசையை அவர் நிறைவேற்றமாட்டார்.
நீதிமொழிகள் 10 : 4 (OCVTA)
சோம்பேறிகளின் கைகள் வறுமையை உண்டாக்கும், ஆனால் உழைக்கும் கைகளோ செல்வத்தைக் கொண்டுவரும்.
நீதிமொழிகள் 10 : 5 (OCVTA)
கோடைகாலத்தில் பயிர்களை சேர்க்கிறவன் விவேகமுள்ள மகன்; ஆனால் அறுவடைக்காலத்தில் தூங்குகிறவனோ, அவமானத்தைக் கொண்டுவரும் மகன்.
நீதிமொழிகள் 10 : 6 (OCVTA)
நீதிமான்களின் தலையை ஆசீர்வாதங்கள் முடிசூட்டும்; ஆனால் கொடியவர்களின் பேச்சோ வன்முறை நிறைந்திருக்கும்.
நீதிமொழிகள் 10 : 7 (OCVTA)
நீதிமான்களைப் பற்றிய நினைவு ஆசீர்வாதமாயிருக்கும்; ஆனால் கொடியவர்களின் பெயரோ அழிந்துபோகும்.
நீதிமொழிகள் 10 : 8 (OCVTA)
இருதயத்தில் ஞானமுள்ளவர்கள் கட்டளைகளை ஏற்றுக்கொள்கிறார்கள்; ஆனால் அலட்டுகிற மூடன் அழிந்துபோகிறான்.
நீதிமொழிகள் 10 : 9 (OCVTA)
நேர்மையாய் நடக்கிறவர்கள் பாதுகாப்பாக நடக்கிறார்கள், ஆனால் நேர்மையற்ற வழிகளில் நடக்கிறவர்கள் வீழ்ந்து போவார்கள்.
நீதிமொழிகள் 10 : 10 (OCVTA)
தீயநோக்கத்தோடு கண் சிமிட்டுகிறவன் துயரத்தை உண்டாக்குகிறான்; அலட்டுகிற மூடன் அழிந்துபோகிறான்.
நீதிமொழிகள் 10 : 11 (OCVTA)
நீதிமான்களின் வாய் வாழ்வின் நீரூற்று, ஆனால் கொடியவர்களின் பேச்சோ வன்முறை நிறைந்திருக்கும்.
நீதிமொழிகள் 10 : 12 (OCVTA)
பகைமை பிரிவினையைத் தூண்டிவிடுகிறது; அன்போ பிழைகளையெல்லாம் மன்னித்து மறக்கிறது.
நீதிமொழிகள் 10 : 13 (OCVTA)
பகுத்தறிகிறவர்களின் உதடுகளில் ஞானம் காணப்படுகிறது, ஆனால் மூடரின் முதுகுக்கு ஏற்றது பிரம்பே.
நீதிமொழிகள் 10 : 14 (OCVTA)
ஞானமுள்ளவர்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; ஆனால் மூடரின் வாயோ அழிவை அழைக்கிறது.
நீதிமொழிகள் 10 : 15 (OCVTA)
பணக்காரர்களின் செல்வம் அவர்களுடைய அரணான பட்டணம்; ஆனால் ஏழையின் வறுமை அவர்களின் அழிவு.
நீதிமொழிகள் 10 : 16 (OCVTA)
நீதிமான்களின் கூலி, அவர்களுக்கு வாழ்வு, ஆனால் கொடியவர்கள் தங்கள் பாவத்திற்கேற்ற தண்டனையை அடைவார்கள்.
நீதிமொழிகள் 10 : 17 (OCVTA)
நற்கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ளுகிறவன் வாழ்வின் வழியைக் காட்டுகிறான்; ஆனால் கண்டித்துத் திருத்துவதை அலட்சியம் செய்கிறவனோ, மற்றவர்களையும் வழிதவறப்பண்ணுகிறான்.
நீதிமொழிகள் 10 : 18 (OCVTA)
பகையை மறைப்பவன் பொய்யன்; அவதூறு பரப்புகிறவன் மூடன்.
நீதிமொழிகள் 10 : 19 (OCVTA)
அதிக வார்த்தைகள் பேசும் இடத்தில் பாவமில்லாமற்போகாது; ஆனால் தன் நாவைக் கட்டுப்படுத்துகிறவனோ விவேகமுள்ளவன்.
நீதிமொழிகள் 10 : 20 (OCVTA)
நீதிமான்களின் நாவு தரமான வெள்ளி, ஆனால் கொடியவர்களின் இருதயமோ சொற்பவிலையும் பெறாது.
நீதிமொழிகள் 10 : 21 (OCVTA)
நீதிமான்களின் வார்த்தைகள் அநேகருக்கு ஊட்டம்; ஆனால் மூடர்கள் மதிகேட்டினால் சாகிறார்கள்.
நீதிமொழிகள் 10 : 22 (OCVTA)
யெகோவாவின் ஆசீர்வாதம் செல்வத்தைக் கொண்டுவருகிறது; அதனுடன் அவர் துன்பத்தைச் சேர்க்கமாட்டார்.
நீதிமொழிகள் 10 : 23 (OCVTA)
தீங்கு செய்வது மூடர்களுக்கு வேடிக்கையானது; ஆனால் ஞானம் புரிந்துகொள்ளுதல் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியானது.
நீதிமொழிகள் 10 : 24 (OCVTA)
கொடியவர்கள் எதற்குப் பயப்படுகிறார்களோ, அது அவர்களுக்கு நேரிடும்; நீதிமான்கள் விரும்புவது கொடுக்கப்படும்.
நீதிமொழிகள் 10 : 25 (OCVTA)
சுழல் காற்று அடித்துச் செல்லும்போது, கொடியவர்கள் இல்லாமற்போவார்கள்; ஆனால் நீதிமான்கள் என்றென்றைக்கும் உறுதியாய் நிலைத்து நிற்பார்கள்.
நீதிமொழிகள் 10 : 26 (OCVTA)
பற்களுக்குப் புளிப்பும், கண்களுக்கு புகையும் எப்படியோ, சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு அப்படி இருக்கிறான்.
நீதிமொழிகள் 10 : 27 (OCVTA)
யெகோவாவுக்குப் பயந்து நடப்பது வாழ்நாட்களை நீடிக்கும், ஆனால் கொடியவர்களின் வருடங்களோ குறைக்கப்படும்.
நீதிமொழிகள் 10 : 28 (OCVTA)
நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாயிருக்கும், ஆனால் கொடியவர்களின் எதிர்பார்ப்போ ஒன்றுமில்லாமற்போம்.
நீதிமொழிகள் 10 : 29 (OCVTA)
யெகோவாவின் வழி நீதிமான்களுக்கு புகலிடம், ஆனால் தீமை செய்பவர்களுக்கு அது அழிவு.
நீதிமொழிகள் 10 : 30 (OCVTA)
நீதிமான்கள் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை; ஆனால் கொடியவர்கள் நாட்டில் நிலைத்திருக்கமாட்டார்கள்.
நீதிமொழிகள் 10 : 31 (OCVTA)
நீதிமான்களின் பேச்சு ஞானத்தைக் கொடுக்கும், ஆனால் வஞ்சகநாவு அழிக்கப்படும்.
நீதிமொழிகள் 10 : 32 (OCVTA)
நீதிமான்களின் உதடுகள் தகுதியானவற்றைப் பேசும்; ஆனால் கொடியவர்களின் வாயோ வஞ்சகமான வார்த்தைகளைப் பேசும்.
❮
❯