சகரியா 9 : 1 (ECTA)
ஓர் இறைவாக்கு; ஆண்டவரின் வாக்கு அதிராக்கு நாட்டிற்கு எதிராக எழும்புகிறது; அது தமஸ்கு நகர்மீது இறங்கித் தங்கும்; ஏனெனில் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களைப் போலவே சிரியா நாட்டின் நகர்களும் ஆண்டவருக்கே உரியன.
சகரியா 9 : 2 (ECTA)
அதன் எல்லைக்கு அடுத்துள்ள ஆமாத்தும் ஞானத்தில் சிறந்த தீரும் சீதோனும் அவருக்கே சொந்தம்.
சகரியா 9 : 3 (ECTA)
தீர் தன்னைச் சுற்றிலும் அரண் ஒன்றைக் கட்டியெழுப்பியது; தூசியைப் போல் வெள்ளியையும் தெருச் சேற்றைப்போல் பொன்னையும் சேமித்தது.
சகரியா 9 : 4 (ECTA)
இதோ என் தலைவர் அவற்றைப் பறிமுதல் செய்வார்; அதன் அரணைக் கடலுக்குள் தூக்கி எறிவார்; அந்நகரும் நெருப்புக்கு இரையாகும்.
சகரியா 9 : 5 (ECTA)
அஸ்கலோன் இதைக் கண்டு அஞ்சி நடுங்கும்; காசா நகர் வேதனையால் துடிதுடிக்கும்; அவ்வாறே எக்ரோனும் நம்பிக்கை இழந்துவிடும். காசா நகரிலிருந்து அரசன் அழித்தொழிவான்; அஸ்கலோன் குடியற்றுப்போகும்.
சகரியா 9 : 6 (ECTA)
அஸ்தோதில் கலப்பினத்தார் குடியிருப்பார்கள்; பெலிஸ்தியரின் ஆணவத்தை நான் ஒழித்திடுவேன்.
சகரியா 9 : 7 (ECTA)
இரத்தம் வடியும் அவர்கள் வாயினின்று அகற்றுவேன்; அருவருப்பான உணவை அதன் பற்களிடையிருந்து நீக்குவேன்; அவ்வினம் நம் கடவுளுக்கு எஞ்சியதாகும்; அது யூதாவின் குலங்களில் தலையாயது ஆகும். எக்ரோன் நகரத்தார் எபூசியரைப் போல் இருப்பார்கள்;
சகரியா 9 : 8 (ECTA)
அங்குமிங்கும் தாக்கும் படையினின்று எனது இல்லத்தைக் காப்பதற்கு நான் பாளையம் இறங்குவேன்; ஒடுக்குகிறவன் எவனும் இனி அவர்களின் நகர்களை ஊடுருவிச் செல்லான்; ஏனெனில் என் யாவற்றையும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
சகரியா 9 : 9 (ECTA)
மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர்.
சகரியா 9 : 10 (ECTA)
அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமற் போகச்செய்வார்; எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்; போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்; அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.
சகரியா 9 : 11 (ECTA)
உன்னைப் பொறுத்தமட்டில் உன்னோடு நான் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை முன்னிட்டு, சிறைப்பட்டிருக்கும் உன்னைச் சார்ந்தோரை நீரற்ற படுகுழியிலிருந்து விடுவிப்பேன்.
சகரியா 9 : 12 (ECTA)
நம்பிக்கையுடன் காத்திருக்கும் சிறைக் கைதிகளே, உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்; இருமடங்கு நன்மைகள் நான் உங்களுக்குத் தருவேன் என்று நான் இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.
சகரியா 9 : 13 (ECTA)
நான் யூதாவை என் வில்லாக்கிக் கொண்டேன்; எப்ராயிமை அம்பாக அமைத்துக்கொண்டேன்; சீயோனே! உன் மக்களை யவனருக்கு எதிராக ஏவிவிட்டு உன்னை வல்லவனின் வாள் போல் ஆக்குவேன்.
சகரியா 9 : 14 (ECTA)
அப்போது அவர்கள்மீது ஆண்டவர் தோன்றுவார். அவரது அம்பு மின்னலைப்போல் பாய்ந்து செல்லும்; தலைவராகிய ஆண்டவர் எக்காளம் ஊதி ஒலி எழுப்புவார்; அவர் தென்திசைச் சூறாவளிக்கு இடையே நடந்து வருவார்.
சகரியா 9 : 15 (ECTA)
படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு அடைக்கலமாய் இருப்பார்; அவர்கள் தங்கள் பகைவரை ஒழித்துக்கட்டி, அவர்களுடைய கவண் கற்களை மிதித்துப்போடுவார்கள்; திராட்சை இரசத்தைப்போல் அவர்களது குருதியைக் குடிப்பார்கள்; நிரம்பி வழிந்தும், பலிபீடத்தின் கொம்புகளைப் போல் நனைந்தும், இரத்தத்தால் நிறைந்திருப்பார்கள்.
சகரியா 9 : 16 (ECTA)
அந்நாளில் அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர், தம் மக்களாகிய அவர்களை ஆயர் தம் மந்தையை மீட்பது போல் மீட்டருள்வார்; அவர்களும் அவரது நாட்டில் மணிமுடியில் பதிக்கப்பட்டுள்ள கற்களைப்போல் ஒளிர்வார்கள்.
சகரியா 9 : 17 (ECTA)
ஆம், அக்காட்சி எத்துணை இனியது; எத்துணை அழகியது; கோதுமை இளங்காளையரையும் புதுத்திராட்சை இரசம் கன்னியரையும் செழிப்புறச் செய்யும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

BG:

Opacity:

Color:


Size:


Font: