ரோமர் 12 : 1 (ECTA)
சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்; கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு.
ரோமர் 12 : 2 (ECTA)
இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
ரோமர் 12 : 3 (ECTA)
இறையருள் பெற்றவன் என்னும் முறையில் உங்களுள் ஒவ்வொருவருக்கும் நான் கூறுவது; உங்களுள் எவரும் தம்மைக் குறித்து மட்டுமீறி மதிப்புக் கொள்ளலாகாது; அவரவருக்குக் கடவுள் வரையறுத்துக் கொடுத்த நம்பிக்கையின் அளவுக்கேற்ப ஒவ்வொருவரும் தம்மை மதித்துக் கொள்ளட்டும்.
ரோமர் 12 : 4 (ECTA)
ஒரே உடலில் நமக்கு உறுப்புகள் பல உள; அந்த உறுப்புகளெல்லாம் ஒரே செயலைச் செய்வதில்லை.
ரோமர் 12 : 5 (ECTA)
அது போலவே, நாம் பலராயிருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கிறோம்; ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம்.
ரோமர் 12 : 6 (ECTA)
ஆயினும், நமக்கு அளிக்கப்பட்டுள்ள அருளுக்கேற்ப வெவ்வேறு அருள்கொடைகளைப் பெற்றுள்ளோம். இறைவாக்குரைக்கும் கொடையை நாம் பெற்றிருந்தால் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு ஏற்றவாறு அதைப் பயன்படுத்த வேண்டும்.
ரோமர் 12 : 7 (ECTA)
தொண்டாற்றும் கொடையை நாம் பெற்றிருந்தால் அதைத் தொண்டு புரிவதற்குப் பயன்படுத்த வேண்டும்.
ரோமர் 12 : 8 (ECTA)
கற்றுக் கொடுப்போர் கற்றுக் கொடுப்பதிலும், ஊக்கமூட்டுவோர் ஊக்கம் தருவதிலும், தமக்குள்ளதை வழங்குவோர் தாராளமாய்க் கொடுப்பதிலும், தலைமை தாங்குவோர் முழு ஆர்வத்தோடு செயல்படுவதிலும், இரக்கச் செயல்களில் ஈடுபடுவோர் முகமலர்ச்சியோடு அவற்றைச் செய்வதிலும் தாம் பெற்ற அருள்கொடைகளைப் பயன்படுத்த வேண்டும்.
ரோமர் 12 : 9 (ECTA)
உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள்.
ரோமர் 12 : 10 (ECTA)
உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள்.
ரோமர் 12 : 11 (ECTA)
விடா முயற்சியோடும் ஆர்வம் மிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள்.
ரோமர் 12 : 12 (ECTA)
எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; இறைவேண்டலில் நிலைத்திருங்கள்.
ரோமர் 12 : 13 (ECTA)
வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்.
ரோமர் 12 : 14 (ECTA)
உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்; ஆம், ஆசி கூறுங்கள்; சபிக்க வேண்டாம்.
ரோமர் 12 : 15 (ECTA)
மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள்.
ரோமர் 12 : 16 (ECTA)
நீங்கள் ஒருமனத்தவராய் இருங்கள்; உயர்வுமனப்பான்மை கொள்ளாமல் தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகுங்கள். நீங்கள் உங்களையே அறிவாளிகளெனக் கருதிப் பெருமிதம் கொள்ள வேண்டாம்.
ரோமர் 12 : 17 (ECTA)
தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்; எல்லா மனிதரும் நலமெனக் கருதுபவை பற்றியே எண்ணுங்கள்.
ரோமர் 12 : 18 (ECTA)
இயலுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் அமைதியுடன் வாழுங்கள்.
ரோமர் 12 : 19 (ECTA)
அன்பார்ந்தவர்களே! பழிவாங்காதீர்கள்; அதைக் கடவுளின் சினத்திற்கு விட்டுவிடுங்கள். ஏனெனில், மறைநூலில் எழுதியுள்ளவாறு, "பழிவாங்குவதும் கைம்மாறு அளிப்பதும் எனக்கு உரியன" என்கிறார் ஆண்டவர்.
ரோமர் 12 : 20 (ECTA)
நீயோ, "உன் எதிரி பசியாய் இருந்தால், அவனுக்கு உணவு கொடு; அவன் தாகத்தோடு இருந்தால், அவன் குடிக்கக் கொடு. இவ்வாறு செய்வதால், அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய்."
ரோமர் 12 : 21 (ECTA)
தீமை உங்களை வெல்லவிடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள்!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21

BG:

Opacity:

Color:


Size:


Font: