நீதிமொழிகள் 7 : 1 (ECTA)
என் பிள்ளையே, என் வார்த்தைகளை மனத்தில் இருத்து; என் கட்டளைகளைச் செல்வமெனப் போற்று;
நீதிமொழிகள் 7 : 2 (ECTA)
என் கட்டளைகளைக் கடைப்பிடி, நீ வாழ்வடைவாய்; என் அறிவுரையை உன் கண்மனிப்போல் காத்துக்கொள்வாய்.
நீதிமொழிகள் 7 : 3 (ECTA)
அவற்றை உன் விரல்களில் அணியாகப் பூண்டு கொள்; உன் இதயப் பலகையில் பொறித்துவை.
நீதிமொழிகள் 7 : 4 (ECTA)
ஞானத்தை உன் சகோதரி என்று சொல்; உணர்வை உன் தோழியாகக் கொள்.
நீதிமொழிகள் 7 : 5 (ECTA)
அப்பொழுது நீ விலைமகளிடமிருந்து தப்புவாய்; தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்து காப்பாற்றப்படுவாய்.
நீதிமொழிகள் 7 : 6 (ECTA)
ஒரு நாள் நான் என் வீட்டின் பலகணியருகில் நின்றுகொண்டு, பின்னல் தட்டி வழியாகப் பார்த்தபோது,
நீதிமொழிகள் 7 : 7 (ECTA)
பேதைகளிடையே ஓர் இளைஞனைக் கண்டேன்; மதிகோடான அவனை இளைஞரிடையே பார்த்தேன்.
நீதிமொழிகள் 7 : 8 (ECTA)
அவன் தெரு வழியாக நடந்துபோய், அதன் கோடியில் அவள் வீட்டை நோக்கிச் சென்றான்.
நீதிமொழிகள் 7 : 9 (ECTA)
அது மாலை நேரம், பொழுது மயங்கும் வேளை; அந்த இரவிலே, இருட்டும் நேரத்திலே,
நீதிமொழிகள் 7 : 10 (ECTA)
அங்கே ஒரு பெண் அவனைக் காண வந்தாள். அவள் விலைமகளைப் போல உடுத்தி, வஞ்சக நெஞ்சினளாய் வந்தாள்.
நீதிமொழிகள் 7 : 11 (ECTA)
அவள் வெளிப் பகட்டு மிகுந்தவள்; வெட்கத்தை ஒழித்தவள்; வீட்டில் அவளது கால் தங்காது.
நீதிமொழிகள் 7 : 12 (ECTA)
அவள் நடுத்தெருவிலும் நிற்பாள்; முச்சந்தியிலும் நிற்பாள்; மூலைமுடுக்குகளிலும் பதுங்கியிருப்பாள்.
நீதிமொழிகள் 7 : 13 (ECTA)
அவள் அவனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு, நாணமிலாத் துணிவுடன் அவனைப் பார்த்து,
நீதிமொழிகள் 7 : 14 (ECTA)
"நான் பலிகளைப் படைக்க வேண்டியிருந்தது; இன்று நான் என் பொருத்தனைகளை நிறைவேற்றிவிட்டேன்;
நீதிமொழிகள் 7 : 15 (ECTA)
அதனாலேதான் உன்னைக் காணவந்தேன்; உன்னை ஆவலோடு தேடினேன்; கண்டுகொண்டேன்.
நீதிமொழிகள் 7 : 16 (ECTA)
என் மஞ்சத்தை மெத்தையிட்டு அழகுசெய்திருக்கின்றேன்; எகிப்து நாட்டு வண்ணக் கம்பளம் விரித்திருக்கின்றேன்.
நீதிமொழிகள் 7 : 17 (ECTA)
வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கக் கலவையிட்டு, என் படுக்கையை மணம் கமழச் செய்திருக்கின்றேன்.
நீதிமொழிகள் 7 : 18 (ECTA)
நீ வா; விடியற்காலம் வரையில் இன்பத்தில் மூழ்கியிருப்போம்; இரவு முழுவதும் காதலாட்டத்தில் களித்திருப்போம்.
நீதிமொழிகள் 7 : 19 (ECTA)
என் கணவன் வீட்டில் இல்லை. நெடுந்தொலைப் பயணம் செய்யப் புறப்பட்டுப் போய் விட்டான்.
நீதிமொழிகள் 7 : 20 (ECTA)
அவன் பை நிறையப் பணம் கொண்டுபோயிருக்கின்றான்; முழுநிலா நாள்வரையில் திரும்பிவர மாட்டான்" என்று சொன்னாள்.
நீதிமொழிகள் 7 : 21 (ECTA)
இவ்வாறு பல இனிய சொற்களால் அவனை அவள் இணங்கச் செய்தாள்; நயமாகப் பேசி அவனை மயக்கிவிட்டாள்.
நீதிமொழிகள் 7 : 22 (ECTA)
உடனே அவனும் உணர்வு மழுங்கினவனாய் அவள் பின்னே சென்றான்; வெட்டுவதற்காக இழுத்துச் செல்லப்படும் காளைமாட்டைப் போலவும், வலையில் சிக்கிக் கொள்ளப் போகும் கலைமானைப் போலவும்,
நீதிமொழிகள் 7 : 23 (ECTA)
கண்ணியில் விழப்போகும் பறவையைப் போலவும் சென்றான். ஓர் அம்பு அவன் நெஞ்சில் ஊடுருவிப் பாயும் வரையில் தன் உயிர் அழிக்கப்படும் என்பதை அறியாமலே சென்றான்.
நீதிமொழிகள் 7 : 24 (ECTA)
ஆகையால் பிள்ளைகளே! எனக்குச் செவிகொடுங்கள்; நான் சொல்வதைக் கவனியுங்கள்.
நீதிமொழிகள் 7 : 25 (ECTA)
உங்கள் மனத்தை அவள் வழிகளில் செல்லவிடாதீர்கள்; மயக்கங்கொண்டு அவள் பாதைகளில் நடவாதீர்கள்.
நீதிமொழிகள் 7 : 26 (ECTA)
அவள் பலரை குத்தி வீழ்த்தியிருக்கின்றாள்; வலிமை வாய்ந்தோரையும் அவள் கொன்றிருக்கின்றாள்.
நீதிமொழிகள் 7 : 27 (ECTA)
அவள் வீடு பாதாளத்திற்குச் செல்லும் வழி; சாவுக்கு இட்டுச் செல்லும் பாதை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27

BG:

Opacity:

Color:


Size:


Font: