நீதிமொழிகள் 27 : 1 (ECTA)
இன்று நடக்கப்போவதே தெரியாது; நாளை நடக்கப் போவதை அறிந்தவன்போலப் பெருமையாகப் பேசாதே.
நீதிமொழிகள் 27 : 2 (ECTA)
உன்னை உன்னுடைய வாயல்ல; மற்றவர்களுடைய வாய் புகழட்டும்; உன் நாவல்ல, வேறொருவர் நா போற்றட்டும்.
நீதிமொழிகள் 27 : 3 (ECTA)
கல்லும் மணலும் பளுவானவை; மூடர் தரும் தொல்லையோ இவ்விரண்டையும்விடப் பளுவானது.
நீதிமொழிகள் 27 : 4 (ECTA)
சினம் கொடியது; சீற்றம் பெருவெள்ளம் போன்றது; ஆனால் பொறாமையின் கொடுமையை எதிர்த்து நிற்க யாரால் இயலும்?
நீதிமொழிகள் 27 : 5 (ECTA)
வெளிப்படுத்தப்படாத அன்பை விட, குற்றத்தை வெளிப்படையாகக் கண்டிக்கும் கடிந்துரையே மேல்.
நீதிமொழிகள் 27 : 6 (ECTA)
நண்பர் கொடுக்கும் அடிகள் நல்நோக்கம் கொண்டவை; பகைவர் தரும் முத்தங்களோ வெறும் முத்தப்பொழிவே.
நீதிமொழிகள் 27 : 7 (ECTA)
வயிறார உண்டவர் தேனையும் உதறித் தள்ளுவார்; பசியுள்ளவருக்கோ கசப்பும் இனிக்கும்.
நீதிமொழிகள் 27 : 8 (ECTA)
தம் வீட்டை விட்டு வெளியேறி அலைந்து திரிபவர், தன் கூட்டை விட்டு வெளியேறி அலைந்து திரியும் குருவிக்கு ஒப்பானவர்.
நீதிமொழிகள் 27 : 9 (ECTA)
நறுமணத் தைலம் உள்ளத்தை மகிழ்விக்கும்; கனிவான அறிவுரை மனத்திற்குத் திடமளிக்கும்.
நீதிமொழிகள் 27 : 10 (ECTA)
உன் நண்பரையும் உன் தந்தையின் நண்பரையும் கைவிடாதே; உனக்கு இடுக்கண் வரும்காலத்தில் உடன்பிறந்தான் வீட்டிற்குச் செல்லாதே; தொலையிலிருக்கும் உடன்பிறந்தாரைவிட அண்மையிலிருக்கும் நன்பரே மேல்.
நீதிமொழிகள் 27 : 11 (ECTA)
பிள்ளாய், நீ ஞானமுள்ளவனாகி என் மனத்தை மகிழச்செய்; அப்பொழுது நான் என்னைப் பழிக்கிறவருக்குத் தக்க பதிலளிப்பேன்.
நீதிமொழிகள் 27 : 12 (ECTA)
எதிரில் வரும் இடரைக் கண்டதும் விவேகமுள்ளவர் மறைந்து கொள்வார்; அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்.
நீதிமொழிகள் 27 : 13 (ECTA)
அன்னியருடைய கடனுக்காகப் பிணையாக நிற்கிறவனுடைய ஆடையை எடுத்துக்கொள்; அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு.
நீதிமொழிகள் 27 : 14 (ECTA)
ஒரு நண்பரிடம் விடியுமுன் போய் உரக்கக் கத்தி அவரை வாழ்த்துவது, அவரைச் சபிப்பதற்குச் சமமெனக் கருதப்படும்.
நீதிமொழிகள் 27 : 15 (ECTA)
ஓயாது சண்டைபிடிக்கும் மனைவி, அடைமழை நாளில் இடைவிடாத் தூறல் போன்றவள்.
நீதிமொழிகள் 27 : 16 (ECTA)
அவளை அடக்குவதைவிடக் காற்றை அடக்குவதே எளிது எனலாம்; கையால் எண்ணெயை இறுகப் பிடிப்பதே எளிது எனலாம்.
நீதிமொழிகள் 27 : 17 (ECTA)
இரும்பை இரும்பு கூர்மையாக்குவது போல, ஒருவர்தம் அறிவால் மற்றவரைக் கூர்மதியாளராக்கலாம்.
நீதிமொழிகள் 27 : 18 (ECTA)
அத்திமரத்தைக் காத்துப் பேணுகிறவருக்கு அதன் கனி கிடைக்கும்; தம் தலைவரைக் காத்துப் பேணுகிறவருக்கு மேன்மை கிடைக்கும்.
நீதிமொழிகள் 27 : 19 (ECTA)
நீரில் ஒருவர் தம் முகத்தைக் காண்பார்; அதுபோல, தம் உள்ளத்தில் ஒருவர் தம்மைக் காண்பார்.
நீதிமொழிகள் 27 : 20 (ECTA)
பாதாளமும் படுகுழியும் நிறைவு பெறுவதேயில்லை; ஒருவர் கண்களின் விருப்பமும் நிறைவு பெறுவதில்லை.
நீதிமொழிகள் 27 : 21 (ECTA)
வெள்ளியை உலைக்களமும் பொன்னைப் புடைக்குகையும் சோதித்துப் பார்க்கும்; ஒருவரை அவர் பெறுகின்ற புகழைக்கொண்டு சோதித்துப் பார்க்கலாம்.
நீதிமொழிகள் 27 : 22 (ECTA)
மூடனை உரலில் போட்டு உலக்கையால் நொய்யோடு நொய்யாகக் குத்தினாலும், அவனது மடமை அவனை விட்டு நீங்காது.
நீதிமொழிகள் 27 : 23 (ECTA)
உன் ஆடுகளை நன்றாகப் பார்த்துக் கொள்; உன் மந்தையின்மேல் கண்ணும் கருத்துமாயிரு.
நீதிமொழிகள் 27 : 24 (ECTA)
ஏனெனில், செல்வம் எப்போதும் நிலைத்திராது; சொத்து தலைமுறை தலைமுறையாக நீடித்திருப்பதில்லை.
நீதிமொழிகள் 27 : 25 (ECTA)
புல்லை அறுத்தபின் இளம்புல் முளைக்கும்; மலையில் முளைத்துள்ள புல்லைச் சேர்த்துவை.
நீதிமொழிகள் 27 : 26 (ECTA)
ஆடுகள் உனக்கு ஆடை தரும்; வெள்ளாட்டுக் கிடாயை விற்று விளைநிலம் வாங்க இயலும்.
நீதிமொழிகள் 27 : 27 (ECTA)
எஞ்சிய ஆடுகள் உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் தேவைப்படும் பாலைக் கொடுக்கும்; உன் வேலைக்காரருக்கும் பால் கிடைக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27

BG:

Opacity:

Color:


Size:


Font: