மத்தேயு 12 : 1 (ECTA)
அன்று ஓர் ஓய்வுநாள். இயேசு வயல்வழியே சென்று கொண்டிருந்தார். பசியாயிருந்தால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர்.
மத்தேயு 12 : 2 (ECTA)
பரிசேயர்கள் இதைப் பார்த்து இயேசுவிடம், "பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை உம் சீடர்கள் செய்கிறார்கள்" என்றார்கள்.
மத்தேயு 12 : 3 (ECTA)
அவரோ அவர்களிடமும், "தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்தது இல்லையா?
மத்தேயு 12 : 4 (ECTA)
இறை இல்லத்திற்குள் சென்று அவரும் அவரோடு இருந்தவர்களும் அர்ப்பண அப்பங்களை உண்டார்கள். குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அப்பங்களை அவர்கள் உண்டது தவறல்லவா?
மத்தேயு 12 : 5 (ECTA)
மேலும் ஓய்வு நாள்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வுநாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா?
மத்தேயு 12 : 6 (ECTA)
ஆனால் கோவிலைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 12 : 7 (ECTA)
"பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்கமாட்டீர்கள்.
மத்தேயு 12 : 8 (ECTA)
ஆம், ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" என்றார்.
மத்தேயு 12 : 9 (ECTA)
இயேசு அங்கிருந்து அகன்று அவர்களுடைய தொழுகைக்கூடத்திற்குள் சென்றார்.
மத்தேயு 12 : 10 (ECTA)
அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும் நோக்குடன் அவரிடம், "ஓய்வுநாளில் குணமாக்குவது முறையா?" என்று கேட்டனர்.
மத்தேயு 12 : 11 (ECTA)
அவர் அவர்களிடம், "உங்களுள் எவரும் தம் ஒரே ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்துவிட்டால் அதைப் பிடித்துத் தூக்கி விடாமல் இருப்பாரா?
மத்தேயு 12 : 12 (ECTA)
ஆட்டைவிட மனிதர் எவ்வளவோ மேலானவர். ஆகவே ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை" என்றார்.
மத்தேயு 12 : 13 (ECTA)
பின்பு இயேசு கை சூம்பியவரை நோக்கி, "உமது கையை நீட்டும்" என்றார். அவர் நீட்டினார். அது மறு கையைப் போல நலமடைந்தது.
மத்தேயு 12 : 14 (ECTA)
பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.
மத்தேயு 12 : 15 (ECTA)
இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பலர் அவருக்குப்பின் சென்றனர். அவர்களெல்லாரையும் அவர் குணமாக்கினார்.
மத்தேயு 12 : 16 (ECTA)
தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டாம் என அவர்களிடம் அவர் கண்டிப்பாகச் சொன்னார்.
மத்தேயு 12 : 17 (ECTA)
இறைவாக்கினராகிய எசாயா உரைத்த பின்வரும் வாக்குகள் இவ்வாறு நிறைவேறின;
மத்தேயு 12 : 18 (ECTA)
"இதோ என் ஊழியர்; இவர் நான் தேர்ந்துகொண்டவர். இவரே என் அன்பர்; இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது; இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; இவர் மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார்.
மத்தேயு 12 : 19 (ECTA)
இவர் சண்டைசச்சரவு செய்யமாட்டார்; கூக்குரலிடமாட்டார்; தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார்; நீதியை வெற்றி பெறச் செய்யும்வரை,
மத்தேயு 12 : 20 (ECTA)
நெரிந்த நாணலை முறியார்; புகையும் திரியை அணையார்.
மத்தேயு 12 : 21 (ECTA)
எல்லா மக்களினங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்."
மத்தேயு 12 : 22 (ECTA)
பேய்பிடித்த ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்தனர். அவர் பார்வையற்றவரும் பேச்சற்றவருமாக இருந்தார். இயேசு அவரைக் குணமாக்கினார். பேச்சற்ற அவர் பேசவும் பார்வையற்ற அவர் பார்க்கவும் முடிந்தது.
மத்தேயு 12 : 23 (ECTA)
திரண்டிருந்த மக்கள் யாவரும் மலைத்துப் போய், "தாவீதின் மகன் இவரோ?" என்று பேசிக்கொண்டனர்.
மத்தேயு 12 : 24 (ECTA)
ஆனால் இதைக் கேட்ட பரிசேயர், "பேய்களின் தலைவனாகிய பெயல் செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்" என்றனர்.
மத்தேயு 12 : 25 (ECTA)
இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து அவர்களிடம் கூறியது;" தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த நகரமும் வீடும் நிலைத்து நிற்காது.
மத்தேயு 12 : 26 (ECTA)
சாத்தான் சாத்தானையே ஓட்டினால் அவன் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போவான். அப்படியானால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்?
மத்தேயு 12 : 27 (ECTA)
நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்றுத் தவறு என்பதற்குச் சாட்சிகள்.
மத்தேயு 12 : 28 (ECTA)
நான் கடவுளின் ஆவியைக் கொண்டே பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா?
மத்தேயு 12 : 29 (ECTA)
முதலில் வலியவரைக் கட்டினாலன்றி எப்படி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களைக் கொள்ளையிட முடியும்? அவரைக் கட்டிவைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.
மத்தேயு 12 : 30 (ECTA)
என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்.
மத்தேயு 12 : 31 (ECTA)
எனவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தூய ஆவிக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது. மக்களுடைய மற்றப் பாவங்கள், பழிப்புரைகள் அனைத்தும் மன்னிக்கப்படும்.
மத்தேயு 12 : 32 (ECTA)
மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்.
மத்தேயு 12 : 33 (ECTA)
"மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்.
மத்தேயு 12 : 34 (ECTA)
விரியன் பாம்புக் குட்டிகளே, தீயோர்களாகிய நீங்கள் எவ்வாறு நல்லவை பேச முடியும்? உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.
மத்தேயு 12 : 35 (ECTA)
நல்லவர் நல்ல கருவ+லத்திலிருந்து நல்லவற்றை வெளிக் கொணர்வர். தீயவரோ தீய கருவ+லத்திலிருந்து தீயவற்றையே வெளிக்கொணர்வர்.
மத்தேயு 12 : 36 (ECTA)
மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும் என உங்களுக்குச் சொல்கிறேன்
மத்தேயு 12 : 37 (ECTA)
உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள்; உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள்."
மத்தேயு 12 : 38 (ECTA)
அப்பொழுது மறைநூல் அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக, "போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்" என்றனர்.
மத்தேயு 12 : 39 (ECTA)
அதற்கு அவர் கூறியது; "இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.
மத்தேயு 12 : 40 (ECTA)
யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.
மத்தேயு 12 : 41 (ECTA)
தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!
மத்தேயு 12 : 42 (ECTA)
தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக் கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!
மத்தேயு 12 : 43 (ECTA)
"ஒருவரைவிட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல்,
மத்தேயு 12 : 44 (ECTA)
"நான் விட்டு வந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்" எனச் சொல்லும். திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டு யாருமின்றி இருப்பதைக் காணும்.
மத்தேயு 12 : 45 (ECTA)
மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடு அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையைவிடக் கேடுள்ளதாகும். இத்தலைமுறைக்கும் இவ்வாறே நிகழும்."
மத்தேயு 12 : 46 (ECTA)
இவ்வாறு மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்த போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.
மத்தேயு 12 : 47 (ECTA)
ஒருவர் இயேசுவை நோக்கி, "அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள்" என்றார்.
மத்தேயு 12 : 48 (ECTA)
அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, "என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?" என்று கேட்டார்.
மத்தேயு 12 : 49 (ECTA)
பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, "என் தாயும் சகோதரர்களும் இவர்களே.
மத்தேயு 12 : 50 (ECTA)
விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50

BG:

Opacity:

Color:


Size:


Font: