லூக்கா 20 : 1 (ECTA)
ஒருநாள் இயேசு கோவிலில் மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்தார். அவர் நற்செய்தியை அறிவித்துக்கொண்டு இருந்தபோது தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மூப்பர்களும் அங்கு வந்தார்கள்.
லூக்கா 20 : 2 (ECTA)
அவர்கள் அவரை நோக்கி, "எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? எங்களுக்குச் சொல்லும்" என்றார்கள்.
லூக்கா 20 : 3 (ECTA)
அவர் அவர்களுக்கு மறுமொழியாக, "நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள்.
லூக்கா 20 : 4 (ECTA)
திருமுழுக்குக் கொடுக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா, அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? "என்று கேட்டார்.
லூக்கா 20 : 5 (ECTA)
அவர்கள் ';விண்ணகத்திலிருந்து வந்தது' என்போமானால், "ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை?" எனக் கேட்பார்;
லூக்கா 20 : 6 (ECTA)
"மனிதரிடமிருந்து வந்தது" என்போமானால் மக்கள் அனைவரும் நம்மீது கல் எறிவர்" என்று தங்களிடையே சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் மக்கள் யோவானை இறைவாக்கினர் என்று உறுதியாய் நம்பியிருந்தனர்.
லூக்கா 20 : 7 (ECTA)
எனவே அவர்கள், "எங்கிருந்து வந்தது எனத் தெரியாது" என்று பதிலுரைத்தார்கள்.
லூக்கா 20 : 8 (ECTA)
இயேசுவும் அவர்களிடம், "எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்" என்றார்.
லூக்கா 20 : 9 (ECTA)
பின்பு இயேசு மக்களை நோக்கி இந்த உவமையைச் சொல்லத் தொடங்கினார்; "ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டு விட்டு நீண்ட காலம் நெடும் பயணம் மேற்கொண்டார்.
லூக்கா 20 : 10 (ECTA)
பருவகாலம் வந்ததும் ஒரு பணியாளரை அவர் அனுப்பினார். ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் அவரை நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.
லூக்கா 20 : 11 (ECTA)
மீண்டும் அவர் வேறு ஒரு பணியாளரை அனுப்பி வைத்தார். அவர்கள் அவரையும் நையப்புடைத்து அவமதித்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.
லூக்கா 20 : 12 (ECTA)
மூன்றாம் முறையாக அவர் ஒருவரை அனுப்பினார். அவரையும் அவர்கள் காயப்படுத்தி வெளியே தள்ளினர்.
லூக்கா 20 : 13 (ECTA)
பின்பு திராட்சைத் தோட்ட உரிமையாளர், "நான் என்ன செய்வேன்? என் அன்பு மகனை அனுப்புவேன். ஒருவேளை அவனை அவர்கள் மதிப்பார்கள்" என்று சொல்லிக்கொண்டார்.
லூக்கா 20 : 14 (ECTA)
தோட்டத் தொழிலாளர்கள் அவருடைய மகனைக் கண்டதும், "இவன்தான் சொத்துக்கு உரியவன்; நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நம்முடையதாகும்" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.
லூக்கா 20 : 15 (ECTA)
எனவே அவர்கள் அவரைத் திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள். அப்படியானால் திராட்சைத் தோட்ட உரிமையாளர் அவர்களை என்ன செய்வார்?
லூக்கா 20 : 16 (ECTA)
அவர் வந்து அந்தத் தொழிலாளர்களை ஒழித்து விட்டு, திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் குத்தகைக்கு விடுவார். "அப்போது அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள், ";ஐயோ! அப்படி நடக்கக் கூடாது" என்றார்கள்.
லூக்கா 20 : 17 (ECTA)
ஆனால், இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, 'கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று" என்று மறைநூலில் எழுதியிருப்பதன் பொருள் என்ன?
லூக்கா 20 : 18 (ECTA)
அந்தக் கல்லின் மேல் விழுகிற எவரும் நொறுங்கிப் போவார்; அது யார்மேல் விழுமோ அவரும் நசுங்கிப்போவார்" என்றார்.
லூக்கா 20 : 19 (ECTA)
மறைநூல் அறிஞர்களும் தலைமைக் குருக்களும் தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை உணர்ந்து கொண்டு, அந்நேரமே இயேசுவைப் பிடிக்க வழிதேடினார்கள்; ஆனால் மக்களுக்கு அஞ்சினார்கள்.
லூக்கா 20 : 20 (ECTA)
ஆகவே அவர்கள் இயேசுவைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தார்கள்; நேர்மையாளர் போன்று நடித்து, அவரது பேச்சில் குற்றம் காண ஒற்றர்களை அனுப்பி வைத்தார்கள்; அவரை ஆளுநரின் ஆட்சி அதிகாரத்திற்கு ஒப்புவிப்பதே அவர்கள் நோக்கமாய் இருந்தது.
லூக்கா 20 : 21 (ECTA)
ஒற்றர்கள் அவரிடம், "போதகரே, நீர் சொல்வதும் கற்பிப்பதும் சரியே. நீர் ஆள் பார்த்துச் செயல்படாதவர்; கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும்.
லூக்கா 20 : 22 (ECTA)
சீசருக்கு நாம் கப்பம் கட்டுவது முறையா இல்லையா?" என்று கேட்டார்கள்;
லூக்கா 20 : 23 (ECTA)
அவர்களுடைய சூழ்ச்சியை அவர் தெளிவாகப் புரிந்துகொண்டு அவர்களிடம்,
லூக்கா 20 : 24 (ECTA)
"ஒரு தெனாரியத்தை எனக்குக் காட்டுங்கள்; இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை? "என்று கேட்டார். அவர்கள், "சீசருடையவை" என்றார்கள்.
லூக்கா 20 : 25 (ECTA)
அவர் அவர்களை நோக்கி, "அப்படியானால், சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் "என்று சொன்னார்.
லூக்கா 20 : 26 (ECTA)
மக்கள் முன்னிலையில் இயேசுவின் பேச்சில் அவர்களால் குற்றம் காண இயலவில்லை; அவருடைய மறுமொழியைக் கண்டு அவர்கள் வியப்புற்றுப் பேசாதிருந்தார்கள்.
லூக்கா 20 : 27 (ECTA)
உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி,
லூக்கா 20 : 28 (ECTA)
"போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார்.
லூக்கா 20 : 29 (ECTA)
இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார்.
லூக்கா 20 : 30 (ECTA)
இரண்டாம்,
லூக்கா 20 : 31 (ECTA)
மூன்றாம், சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்;
லூக்கா 20 : 32 (ECTA)
கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.
லூக்கா 20 : 33 (ECTA)
அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?" என்று கேட்டனர்.
லூக்கா 20 : 34 (ECTA)
அதற்கு இயேசு அவர்களிடம், "இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்.
லூக்கா 20 : 35 (ECTA)
ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை.
லூக்கா 20 : 36 (ECTA)
இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.
லூக்கா 20 : 37 (ECTA)
இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, "ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள் யாக்கோபின் கடவுள்" என்று கூறியிருக்கிறார்.
லூக்கா 20 : 38 (ECTA)
அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே" என்றார்.
லூக்கா 20 : 39 (ECTA)
மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, "போதகரே, நன்றாகச் சொன்னீர்" என்றனர்.
லூக்கா 20 : 40 (ECTA)
அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
லூக்கா 20 : 41 (ECTA)
அப்போது இயேசு அவர்களை நோக்கி, "மெசியா தாவீதின் மகன் என்று கூறுவது எப்படி?
லூக்கா 20 : 42 (ECTA)
ஏனென்றால் திருப்பாடல்கள் நூலில், "ஆண்டவர், என் தலைவரிடம்,
லூக்கா 20 : 43 (ECTA)
"நான் உம் பகைவரை உமக்குக் கால் மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்" என்றுரைத்தார்" எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா?
லூக்கா 20 : 44 (ECTA)
எனவே தாவீது அவரைத் தலைவர் என அழைப்பதால் அவர் அவருக்கே மகனாய் இருப்பது எப்படி?" என்று கேட்டார்.
லூக்கா 20 : 45 (ECTA)
மக்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தபோது இயேசு தம் சீடர்களிடம்,
லூக்கா 20 : 46 (ECTA)
"மறைநூல் அறிஞர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஏனென்றால் அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதை விரும்புகிறார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதை விரும்புகிறார்கள்; தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் விரும்புகிறார்கள்;
லூக்கா 20 : 47 (ECTA)
கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; நீண்டநேரம் இறைவனிடம் வேண்டுவதுபோல நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் அவர்களே" என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47

BG:

Opacity:

Color:


Size:


Font: