ஆதியாகமம் 21 : 1 (ECTA)
ஆண்டவர் தாம் கூறியிருந்தபடி சாராவைக் கண்ணோக்கினார். ஆண்டவர் தம் வாக்குறுதிக்கேற்ப சாராவுக்குச் செய்தருளினார்.
ஆதியாகமம் 21 : 2 (ECTA)
கடவுள் வாக்களித்தபடி, குறிப்பிட்ட அதே காலத்தில் சாரா கருத்தாங்கி, ஆபிரகாமுக்கு அவரது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.
ஆதியாகமம் 21 : 3 (ECTA)
ஆபிரகாம் தமக்குப் பிறந்த, சாரா தமக்குப் பெற்றுக்கொடுத்த, மகனுக்கு "ஈசாக்கு" என்று பெயரிட்டார்.
ஆதியாகமம் 21 : 4 (ECTA)
கடவுள் கட்டளையிட்டபடி, ஆபிரகாம் தம் மகன் ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளன்று அவனுக்கு விருத்தசேதனம் செய்தார்.
ஆதியாகமம் 21 : 5 (ECTA)
அவருடைய மகன் ஈசாக்கு அவருக்கு பிறந்த பொழுது அவருடைய வயதோ நூறு.
ஆதியாகமம் 21 : 6 (ECTA)
அப்பொழுது சாரா, "கடவுள் என்னைச் சிரிக்க வைத்தார் என்றும் இதைக் கேட்கும் அனைவரும் என்னோடு சேர்ந்து சிரிப்பர்" என்றும் சொன்னார்.
ஆதியாகமம் 21 : 7 (ECTA)
மீண்டும் அவர், "சாரா தம் புதல்வர்களுக்குப் பாலூட்டுவார்" என்று ஆபிரகாமிடம் யாராவது சொல்லியிருப்பார்களா? ஆயினும் இதோ அவருக்கு அவரது முதிர்ந்த வயதில் நான் ஒரு மகனைப் பெற்றெடுத்துள்ளேன்" என்றார்.
ஆதியாகமம் 21 : 8 (ECTA)
அந்தக் குழந்தை வளர்ந்து பால் குடியும் மறந்தது. அப்படிப் பால் குடிப்பதை நிறுத்திய நாளன்று ஆபிரகாம் பெரியதொரு விருந்து அளித்தார்.
ஆதியாகமம் 21 : 9 (ECTA)
பின்னர் எகிப்தியளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்றெடுத்த மகன் சிரித்து விளையாடுவதைச் சாரா கண்டு,
ஆதியாகமம் 21 : 10 (ECTA)
ஆபிரகாமை நோக்கி, "இந்தப் பணிப்பெண்ணையும் அவள் மகனையும் துரத்திவிடும். ஏனென்றால், பணிப்பெண்ணின் மகன் என் மகன் ஈசாக்குடன் பங்காளியாய் இருக்கக் கூடாது என்றார்.
ஆதியாகமம் 21 : 11 (ECTA)
தம் மகனுக்கு எதிரான இவ்வார்த்தை ஆபிரகாமுக்கு மிகுந்த வேதனை அளித்தது.
ஆதியாகமம் 21 : 12 (ECTA)
அப்போது கடவுள் ஆபிரகாமை நோக்கி, "பையனையும் பணிப்பெண்ணையும் குறித்து வேதனைப்படாதே. சாரா உனக்குச் சொல்வதையெல்லாம் அப்படியே செய். ஏனெனில் ஈசாக்கின் மூலமே உன் வழிமரபு விளங்கும்.
ஆதியாகமம் 21 : 13 (ECTA)
பணிப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருப்பதால், அவனிடமிருந்தும் இனமொன்று தோன்றச் செய்வேன்" என்றார்.
ஆதியாகமம் 21 : 14 (ECTA)
எனவே ஆபிரகாம் காலையில் எழுந்து, அப்பத்தையும், தோற்பை நிறையத் தண்ணீரையும் எடுத்து ஆகாரிடம் கொடுத்தார்; அவற்றை அவள் தோள்மேல் வைத்து குழந்தையையும் அவளுடன் அனுப்பி வைத்தார். அவளும் புறப்பட்டுப் போய் பெயேர்செபா என்னும் பாலைநிலத்தில் அலைந்து திரிந்தாள்.
ஆதியாகமம் 21 : 15 (ECTA)
தோற்பையிலிருந்த தண்ணீர் தீர்ந்தபின் அவள் புதர் ஒன்றின் அடியில் குழந்தையைக் கிடத்தினாள்.
ஆதியாகமம் 21 : 16 (ECTA)
பின்பு அவள் முன்புறம் சென்று அம்புஎறி தூரத்தளவில் உட்கார்ந்து கொண்டாள். "குழந்தை சாவதைப் பார்க்கச் சகியேன் "என்று கூறி, முன்புறமிருந்து கொண்டே கூக்குரலிட்டு அழுதாள்.
ஆதியாகமம் 21 : 17 (ECTA)
அப்போது கடவுள் பையனின் அழுகுரலைக் கேட்டார். ஆண்டவரின் தூதர் வானத்தினின்று ஆகாரைக் கூப்பிட்டு, "ஆகார்! உனக்கு நிகழ்ந்தது என்ன? அஞ்சாதே. ஏனெனில், கிடத்தியிருக்கிற இடத்தினின்று பையனின் அழுகுரலை கடவுள் கேட்டருளினார்.
ஆதியாகமம் 21 : 18 (ECTA)
நீ எழுந்து பையனைத் தூக்கி விடு. அவனை உன் கையில் பிடித்துக் கொள். ஏனெனில், அவனிடமிருந்து பெரிய இனமொன்று தோன்றச் செய்வேன்" என்றார்.
ஆதியாகமம் 21 : 19 (ECTA)
அப்பொழுது கடவுள் அவள் கண்களைத் திறந்துவிட, அவள் நீருள்ள கிணற்றைக் கண்டாள். அவள் அங்குச் சென்று தோற்பையை நீரால் நிரப்பிப் பையனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
ஆதியாகமம் 21 : 20 (ECTA)
கடவுளும் பையனோடு இருந்தார். அவன் வளர்ந்து பாலை நிலத்தில் குடியிருந்தான். அம்பு எய்வதில் வல்லவனானான்.
ஆதியாகமம் 21 : 21 (ECTA)
அவன் பாரான் என்னும் பாலைநிலத்தில் வாழ்ந்து வருகையில், அவன் தாய் எகிப்து நாட்டைச் சார்ந்த ஒரு பெண்ணை அவனுக்கு மணமுடித்து வைத்தாள்.
ஆதியாகமம் 21 : 22 (ECTA)
அக்காலத்தில் அபிமெலக்கு தன் படைத்தலைவன் பிக்கோலோடு வந்து ஆபிரகாமை நோக்கி, "நீர் செய்கிற யாவற்றிலும் கடவுள் உம்முடனே இருக்கிறார்.
ஆதியாகமம் 21 : 23 (ECTA)
ஆகையால், எனக்கும் என் புதல்வருக்கும் என் இனத்தாருக்கும் நீர் வஞ்சனை செய்யாமல், உமக்கு நான் இரக்கம் காட்டியதுபோல எனக்கும், நீர் பிழைப்புக்காக வந்த இந்த நாட்டிற்கும், நீர் இரக்கம் காட்டுவதாகக் கடவுள் பெயரால் ஆணையிட்டு எனக்கு வாக்களியும்" என்றான்.
ஆதியாகமம் 21 : 24 (ECTA)
அதற்கு ஆபிரகாம், "அவ்விதமே ஆணையிட்டு வாக்களிக்கிறேன்" என்று கூறினார்.
ஆதியாகமம் 21 : 25 (ECTA)
பிறகு அபிமெலக்கின் ஊழியர்கள் கைப்பற்றியிருந்த நீருள்ள கிணறு ஒன்றைப் பற்றி அவனிடம் ஆபிரகாம் முறையிட்டார்.
ஆதியாகமம் 21 : 26 (ECTA)
அபிமெலக்கு அதற்கு மறுமொழியாக, "இந்தக் காரியத்தைச் செய்தவன் யாரென்று எனக்குத் தெரியாது. நீரும் அதை எனக்குத் தெரிவிக்கவில்லை. இன்றுதான் இதைப்பற்றிக் கேள்விப்படுகிறேன்" என்றான்.
ஆதியாகமம் 21 : 27 (ECTA)
பின் ஆபிரகாம் ஆடு மாடுகளை அபிமெலக்கிடம் கொண்டுவந்து கொடுக்க, அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் உடன்படிக்கை செய்து கொண்டனர்.
ஆதியாகமம் 21 : 28 (ECTA)
அப்பொழுது ஆபிரகாம் மந்தையினின்று ஏழு பெண் ஆட்டுக்குட்டியைப் பிரித்தெடுத்துத் தனியாக நிறுத்தினார்.
ஆதியாகமம் 21 : 29 (ECTA)
அபிமெலக்கு ஆபிரகாமை நோக்கி, "நீர் இவ்வேழு பெண் ஆட்டுக்குட்டிகளைத் தனியாக நிறுத்தி வைத்திருப்பதன் காரணம் என்ன?" என்று கேட்டான்.
ஆதியாகமம் 21 : 30 (ECTA)
அவர், "இந்தக் கிணற்றைத் தோண்டியது நான்தான் என்பதற்குச் சான்றாக, நீர் இந்தப் பெண் ஆட்டுக்குட்டிகள் ஏழையும் என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளும்" என்றார்.
ஆதியாகமம் 21 : 31 (ECTA)
அதன் காரணமாக அந்த இடம் "பெயேர்செபா" என்று அழைக்கப்பட்டது. ஏனென்றால், அங்குத்தான் இருவரும் ஆணையிட்டு வாக்களித்துக் கொண்டனர்.
ஆதியாகமம் 21 : 32 (ECTA)
இவ்வாறு பெயேர்செபாவில் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். இதன் பின் அபிமெலக்கும் அவன் படைத்தலைவன் பிக்கோலும் பெலிஸ்தியர் நாட்டிற்குத் திரும்பிச் சென்றனர்.
ஆதியாகமம் 21 : 33 (ECTA)
ஆபிரகாமோ பெயேர்செபாவில் ஏசல் மரத்தை நட்டு, அங்கு என்றும் வாழும் இறைவனாகிய ஆண்டவரின் திருப்பெயரைத் தொழுதார்.
ஆதியாகமம் 21 : 34 (ECTA)
அவர் பெலிஸ்தியர் நாட்டில் நெடுங்காலம் குடியிருந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34

BG:

Opacity:

Color:


Size:


Font: