யாத்திராகமம் 5 : 1 (ECTA)
பின்னர் மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் வந்து அவனை நோக்கி, "பாலைநிலத்தில் எனக்கொரு விழா எடுக்குமாறு என் மக்களைப் போகவிடு என இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைத்துள்ளார்" என்று அறிவித்தனர்.
யாத்திராகமம் 5 : 2 (ECTA)
அதற்குப் பார்வோன், "யார் அந்த ஆண்டவர்? அவரது பேச்சைக் கேட்டு இஸ்ரயேலை நான் ஏன் அனுப்ப வேண்டும்? அந்த ஆண்டவரை நான் அறியேன்; இஸ்ரயேலரை நான் போகவிடவும் மாட்டேன்" என்று கூறினான்.
யாத்திராகமம் 5 : 3 (ECTA)
அதற்கு அவர்கள், "எபிரேயரின் கடவுள் எங்களைச் சந்தித்தார். பாலை நிலத்தில் மூன்றுநாள் வழிப்பயணம் செய்து எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிடுமாறு எங்களை நீர் போகவிடும். இல்லையெனில், கொள்ளை நோயாலோ வாளாலோ அவர் எங்களைத் தாக்கிவிடுவார்" என்று கூறினர்.
யாத்திராகமம் 5 : 4 (ECTA)
எகிப்திய மன்னன் அவர்களை நோக்கி, "மோசே! ஆரோன்! நீங்கள் இம்மக்களை அவர்களின் வேலையைச் செய்ய விடாமல் ஏன் குழப்புகிறீர்கள்? உங்கள் வேலைகளுக்குச் செல்லுங்கள்" என்று கூறினான்.
யாத்திராகமம் 5 : 5 (ECTA)
மேலும், பார்வோன், "பாருங்கள், நாட்டில் உங்கள் மக்கள் இப்போது பெருந்திரளாயுள்ளனர். அப்படியிருக்க, அவர்களைத் தம் வேலையிலிருந்து ஓய்ந்திருக்கச் செய்கிறீர்கள்" என்றான்.
யாத்திராகமம் 5 : 6 (ECTA)
அதே நாளில், பார்வோன் மக்களிடம் அடிமைவேலை வாங்கும் அதிகாரிகளுக்கும் மேற்பார்வையாளருக்கும் ஆணைவிடுத்து,
யாத்திராகமம் 5 : 7 (ECTA)
"செங்கல் செய்வதற்காக இம்மக்களுக்கு இதுவரை வைக்கோல் கொடுத்துவந்ததுபோல் இனிச் செய்யவேண்டாம்! அவர்களே போய் வைக்கோல் சேகரித்துக் கொள்ளட்டும்.
யாத்திராகமம் 5 : 8 (ECTA)
ஆயினும் இதுவரை அவர்கள் அறுத்துக் கொடுத்த அளவு செங்கல் தயாரித்துக் கொடுப்பது அவர்கள் கடமை. அதிலிருந்து எதுவும் குறையக்கூடாது. ஏனெனில், அவர்கள் சோம்பேறிகள். இதனால்தான், "நாங்கள் போகவேண்டும்; எங்கள் கடவுளுக்குப் பலியிடவேண்டும்" என்று அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
யாத்திராகமம் 5 : 9 (ECTA)
அந்த ஆள்களுக்கு வேலைப்பளுவை இன்னும் மிகுதியாக்குங்கள். வெற்றுப் பேச்சுகளை நம்பாமல் அங்கே அவர்கள் வேலை செய்யட்டும்" என்றான்.
யாத்திராகமம் 5 : 10 (ECTA)
எனவே வேலைவாங்கும் அதிகாரிகளும் மேற்பார்வையாளர்களும் மக்களிடம் சென்று அவர்களை நோக்கி, "பார்வோன் கூறுவது இதுவே; நான் உங்களுக்கு வைக்கோல் கொடுக்கமாட்டேன்.
யாத்திராகமம் 5 : 11 (ECTA)
நீங்களே போய், உங்களுக்குத் தேவையான வைக்கோலைக் கிடைக்கும் இடத்திலிருந்து சேகரித்துக்கொள்ளுங்கள்" என்று அறிவித்தனர்.
யாத்திராகமம் 5 : 12 (ECTA)
எனவே வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடி சேகரிப்பதற்காக மக்கள் எகிப்து நாடெங்கும் அலைந்து திரிந்தனர்.
யாத்திராகமம் 5 : 13 (ECTA)
"வைக்கோல் உள்ளபோது செய்துவந்த அளவில் ஒவ்வொரு நாளுக்கும் உரிய வேலையை அன்றே முடித்துவிடுங்கள்" என்று கூறி, வேலை வாங்கும் அதிகாரிகள் அவசரப்படுத்தினர்.
யாத்திராகமம் 5 : 14 (ECTA)
"முன்பு நீங்கள் செய்து வந்த அளவுக்குச் செங்கல் அறுப்பு வேலையை நேற்றும் இன்றும் ஏன் செய்துமுடிக்கவில்லை?" என்று கேட்டு, பார்வோனின் வேலைவாங்கும் அதிகாரிகள் தாங்கள் இஸ்ரயேல் மக்களுள் மேற்பார்வையாளராக நியமித்திருந்தவர்கள் அடித்தனர்.
யாத்திராகமம் 5 : 15 (ECTA)
இஸ்ரயேல் மக்களின் மேற்பார்வையாளர் பார்வோனிடம் வந்து, "ஏன் உம் பணியாளர்களை இவ்வாறு நடத்துகிறீர்?
யாத்திராகமம் 5 : 16 (ECTA)
உம் பணியாளர்களாகிய எங்களுக்கு வைக்கோல் தராமலேயே "செங்கல் அறுங்கள்" என்று வேலை வாங்கும் அதிகாரிகள் கூறுகிறார்கள். குற்றம் உம் மக்களுடையதாய் இருக்க, உம் பணியாளர்களாகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம்" என்று கதறினர்.
யாத்திராகமம் 5 : 17 (ECTA)
அதற்கு அவன், "சோம்பேறிகள்; நீங்கள் சோம்பேறிகள்; அதனால்தான் "நாங்கள் போய் ஆண்டவருக்குப் பலியிட வேண்டும்" என்று கூறிக் கொண்டிருக்கிறீர்கள்.
யாத்திராகமம் 5 : 18 (ECTA)
எனவே இப்போதே வேலைக்குச் செல்லுங்கள். வைக்கோல் உங்களுக்குத் தரப்படமாட்டாது. எனினும் வழக்கமான எண்ணிக்கையின்படி செங்கல் அறுத்துக் கொடுக்க வேண்டும்" என்று கூறினான்.
யாத்திராகமம் 5 : 19 (ECTA)
"அந்தந்த நாளுக்குரிய செங்கல் தொகையிலிருந்து எதுவும் குறைக்கப்படமாட்டாது" என்று சொல்லக் கேட்டபோது, தாங்கள் இக்கட்டில் மாட்டிக்கொண்டதாக இஸ்ரயேல் மக்களின் மேற்பார்வையாளர் கண்டனர்.
யாத்திராகமம் 5 : 20 (ECTA)
பார்வோனிடமிருந்து திரும்பி வரும்போது, தங்களைச் சந்திப்பதற்காக நின்று கொண்டிருந்த மோசேயையும் ஆரோனையும் அவர்கள் சந்தித்து அவர்களை நோக்கி,
யாத்திராகமம் 5 : 21 (ECTA)
"ஆண்டவர் உங்களைக் கவனித்துக் கொள்ளட்டும்! உங்களுக்குத் தீர்ப்பு வழங்கட்டும்! ஏனெனில், பார்வோன் முன்னிலையிலும் அவனுடைய அலுவலர் முன்னிலையிலும் நம்மவர் வாடையே பிடிக்காதவாறு நீங்கள் செய்து விட்டீர்கள்! நம்மைக் கொல்வதற்கான வாளை அவர்கள் கையில் வைத்துவிட்டீர்கள்" என்றனர்.
யாத்திராகமம் 5 : 22 (ECTA)
அப்போது மோசே ஆண்டவரிடம் திரும்பிச் சென்று, "என் தலைவரே! இம்மக்களுக்கு நீர் ஏன்தொல்லை கொடுக்கிறீர்? எதற்காக இப்படி என்னை அனுப்பிவைத்தீர்?
யாத்திராகமம் 5 : 23 (ECTA)
உமது பெயரால் பேசுவதற்காகப் பார்வோனிடம் வந்ததிலிருந்தே இம்மக்களுக்கு அவனால் இடர்பாடுதான் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நீர் உம் மக்களுக்கு விடுதலையளிக்கவும் இல்லை" என்று கூறினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

BG:

Opacity:

Color:


Size:


Font: