அப்போஸ்தலர்கள் 8 : 1 (ECTA)
ஸ்தேவானைக் கொலை செயவதற்குச் சவுலும் உடன்பட்டிருந்தார். அந்த நாள்களில் எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்குள்ளாகியது. திருத்தூதர்களைத் தவிர மற்ற அனைவரும் யூதேயா, சமாரியாவின் நாட்டுப் புறமெங்கும் சிதறடிக்கப்பட்டுப் போயினர்.
அப்போஸ்தலர்கள் 8 : 2 (ECTA)
இறைப்பற்று உள்ள மக்கள் ஸ்தேவானை அடக்கம்செய்து, அவருக்காக மாரடித்துப் பெரிதும் புலம்பினர்.
அப்போஸ்தலர்கள் 8 : 3 (ECTA)
சவுல் வீடுவீடாய் நுழைந்து ஆண்களையம் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய், அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தார். இவ்வாறு அவர் திருச்சபையை அழித்துவந்தார்.
அப்போஸ்தலர்கள் 8 : 4 (ECTA)
சிதறிய மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர்.
அப்போஸ்தலர்கள் 8 : 5 (ECTA)
பிலிப்பு சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார்.
அப்போஸ்தலர்கள் 8 : 6 (ECTA)
பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒரு மனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர்.
அப்போஸ்தலர்கள் 8 : 7 (ECTA)
ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்தக் குரலுடன் கூச்சலிட்டுக் கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர்.
அப்போஸ்தலர்கள் 8 : 8 (ECTA)
இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று.
அப்போஸ்தலர்கள் 8 : 9 (ECTA)
அந்நகரில் சீமோன் என்னும் பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் தன் மாயவித்தைகளால் சமாரியாவின் மக்கள் எல்லாரையும் மலைப்புக்குள்ளாக்கித் தன்னை ஒரு பெரிய மனிதனாகக் காட்டிவந்தான்.
அப்போஸ்தலர்கள் 8 : 10 (ECTA)
சிறியோர்முதல் பெரியோர்வரை அனைவரும், "மாபெரும் வல்லமையாம் கடவுளின் வல்லமை இவரிடம் உள்ளது" என்று கூறி அவனுக்குச் செவிசாய்த்தனர்.
அப்போஸ்தலர்கள் 8 : 11 (ECTA)
அவன் தன் மாய வித்தைகளால் நெடுங்காலமாக அவர்களை மலைப்புக்குள்ளாக்கியதால் அவர்கள் அவனுக்குச் செவிசாய்த்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 8 : 12 (ECTA)
ஆயினும் இறையாட்சியையும், இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரையும்பற்றிய நற்செய்தியைப் பிலிப்பு அறிவித்தபோது பல ஆண்களும் பெண்களும் நம்பிக்கைக்கொண்டு திருமுழுக்குப் பெற்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 8 : 13 (ECTA)
சீமோனும் நம்பிக்கைகொண்டவனாய்த் திருமுழுக்குப் பெற்று, பிலிப்புடன் கூடவே இருந்தான்; அவர் செய்த அரும் அடையாளங்களையும் வல்ல செயல்களையும் கண்டு மலைத்து நின்றான்.
அப்போஸ்தலர்கள் 8 : 14 (ECTA)
சமாரியர் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டனர் என்பதை எருசலேமிலுள்ள திருத்தூதர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 8 : 15 (ECTA)
அவர்கள் சென்று சமாரியர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள்.
அப்போஸ்தலர்கள் 8 : 16 (ECTA)
ஏனெனில் அதுவரை அவர்களுள் யாருக்கும் தூய ஆவி அருளப்படவில்லை. ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் அவர்கள் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 8 : 17 (ECTA)
பின்பு பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 8 : 18 (ECTA)
திருத்தூதர் கைகளை வைத்ததும் அவர்கள் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டதைச் சீமோன் கண்டபோது,
அப்போஸ்தலர்கள் 8 : 19 (ECTA)
";நான் யார்மீது கைகளை வைப்பேனோ அவரும் தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படி எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுங்கள்" என்று கூறி, அதற்காகப் பணம் கொடுக்க முன்வந்தான்.
அப்போஸ்தலர்கள் 8 : 20 (ECTA)
அப்போது பேதுரு அவனிடம், "கடவுளது கொடையைப் பணம் கொடுத்து வாங்க எண்ணியதால் நீயும் உன் பணத்தோடு நாசமாய்ப் போ.
அப்போஸ்தலர்கள் 8 : 21 (ECTA)
உன் உள்ளம் கடவுளின்முன் நேர்மையற்றதாய் இருப்பதால், இதில் உனக்குப் பங்குமில்லை, உரிமையுமில்லை.
அப்போஸ்தலர்கள் 8 : 22 (ECTA)
இப்போதே உனது தீய போக்கைவிட்டு நீ மனம் மாறி ஆண்டவரிடம் மன்றாடு. ஒருவேளை உன் உள்ளத்தில் எழுந்த இந்த எண்ணம் மன்னிக்கப்படலாம்.
அப்போஸ்தலர்கள் 8 : 23 (ECTA)
ஏனென்றால் நீ கசப்பு நிறைந்த உள்ளத்தினனாய் தீவினைக்கு அடிமையாயிருப்பதை நான் காண்கிறேன்" என்று கூறினார்.
அப்போஸ்தலர்கள் 8 : 24 (ECTA)
சீமோன் அதற்கு மறுமொழியாக, "நீங்கள் கூறிய கேடு எதுவும் எனக்கு நேரிடாதவாறு எனக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள், "என்றான்.
அப்போஸ்தலர்கள் 8 : 25 (ECTA)
பிறகு அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை எடுத்துக் கூறிச் சான்று பகர்ந்தவாறே எருசலேமுக்குத் திரும்பினார்கள்; சமாரியாவின் பல ஊர்களிலும் நற்செய்தியை அறிவித்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 8 : 26 (ECTA)
பின்பு ஆண்டவரின் தூதர் பிலிப்பிடம், "நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ" என்றார். அது ஒரு பாலைநிலப் பாதை.
அப்போஸ்தலர்கள் 8 : 27 (ECTA)
பிலிப்பு அவ்வாறே புறப்பட்டுப்போனார். அப்போது எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் எருசலேம் சென்று, கடவுளை வணங்கி விட்டுத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அவர் ஓர் அலி; எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர்.
அப்போஸ்தலர்கள் 8 : 28 (ECTA)
அவர் தமது தேரில் அமர்ந்து எசாயாவின் இறைவாக்கு நூலைப் படித்துக் கொண்டிருந்தார்.
அப்போஸ்தலர்கள் 8 : 29 (ECTA)
தூய ஆவியார் பிலிப்பிடம், "நீ அந்தத் தேரை நெருங்கிச் சென்று அதனோடு கூடவே போ" என்றார்.
அப்போஸ்தலர்கள் 8 : 30 (ECTA)
பிலிப்பு ஓடிச் சென்று, அவர் எசாயாவின் இறைவாக்கு நூலை வாசிப்பதைக் கேட்டு, "நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?" என்று கேட்டார்.
அப்போஸ்தலர்கள் 8 : 31 (ECTA)
அதற்கு அவர், "யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?" என்று கூறித்தேரில் ஏறித் தன்னோடு அமருமாறு பிலிப்பை அழைத்தார்.
அப்போஸ்தலர்கள் 8 : 32 (ECTA)
அவர் வாசித்துக்கொண்டிருந்த மறைநூல் பகுதி பின்வருமாறு; "அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும், உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர்தம் வாயைத் திறவாதிருந்தார்.
அப்போஸ்தலர்கள் 8 : 33 (ECTA)
தாழ்வுற்ற நிலையில் அவருக்கு நீதி வழங்கப்படவில்லை. அவருடைய தலைமுறையைப் பற்றி எடுத்துரைப்பவன் யார்? ஏனெனில் அவருடைய உயிர்தான் எடுக்கப்பட்டுவிட்டதே!"
அப்போஸ்தலர்கள் 8 : 34 (ECTA)
அவர் பிலிப்பிடம், "இறைவாக்கினர் யாரைக்குறித்து இதைக் கூறுகிறார்?தம்மைக் குறித்தா, அல்லது மற்றொருவரைக் குறித்தா? தயவுசெய்து கூறுவீரா?" என்று கேட்டார்.
அப்போஸ்தலர்கள் 8 : 35 (ECTA)
அப்போது பிலிப்பு, இந்த மறைநூல் பகுதியிலிருந்து தொடங்கி, இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அவருக்கு அறிவித்தார்.
அப்போஸ்தலர்கள் 8 : 36 (ECTA)
அவர்கள் போய்க் கொண்டிருந்தபோது வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடத்துக்கு வந்தார்கள். அப்போது அவர், "இதோ, தண்ணீர் உள்ளதே, நான் திருமுழுக்குப்பெற ஏதாவது தடை உண்டா?" என்று கேட்டார்.
அப்போஸ்தலர்கள் 8 : 37 (ECTA)
"அதற்குப் பிலிப்பு, "நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடையில்லை" என்றார். உடனே அவர், "இயேசு கிறிஸ்து இறைமகன் என்று நம்புகிறேன்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 8 : 38 (ECTA)
உடனே அமைச்சர் தேரை நிறுத்தக் கூறினார். பிலிப்பு, அமைச்சர் ஆகிய இருவரும் தண்ணீருக்குள் இறங்கினர். பிலிப்பு அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார்.
அப்போஸ்தலர்கள் 8 : 39 (ECTA)
அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியேறினவுடனையே ஆண்டவரின் ஆவியார் பிலிப்புவை எடுத்துச் சென்றுவிட்டார். அமைச்சர் அதன்பின் அவரைக் காணவில்லை; அவர் மகிழச்சியோடு தம் வழியே சென்றார்.
அப்போஸ்தலர்கள் 8 : 40 (ECTA)
பின்பு பிலிப்பு ஆசோத்து என்னும் இடத்தில் காணப்பட்டார். செசரியா போய்ச் சேரும்வரை அவர் சென்ற நகரங்களிலெல்லாம் நற்செய்தியை அறிவித்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40

BG:

Opacity:

Color:


Size:


Font: