1 கொரிந்தியர் 15 : 1 (ECTA)
சகோதர சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக் கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 15 : 2 (ECTA)
நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே.
1 கொரிந்தியர் 15 : 3 (ECTA)
நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே; மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து,
1 கொரிந்தியர் 15 : 4 (ECTA)
அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்.
1 கொரிந்தியர் 15 : 5 (ECTA)
பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார்.
1 கொரிந்தியர் 15 : 6 (ECTA)
பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்து விட்டனர்.
1 கொரிந்தியர் 15 : 7 (ECTA)
பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்.
1 கொரிந்தியர் 15 : 8 (ECTA)
எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.
1 கொரிந்தியர் 15 : 9 (ECTA)
நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன்.
1 கொரிந்தியர் 15 : 10 (ECTA)
ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிடவில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடிருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது.
1 கொரிந்தியர் 15 : 11 (ECTA)
நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராயிருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.
1 கொரிந்தியர் 15 : 12 (ECTA)
இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார் என அறிவிக்கப்பட்டிருக்க, உங்களுள் சிலர் இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை எனச் சொல்வது ஏன்?
1 கொரிந்தியர் 15 : 13 (ECTA)
இறந்தோர் உயிர்த்தெழ மாட்டார் எனில் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும்.
1 கொரிந்தியர் 15 : 14 (ECTA)
கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்.
1 கொரிந்தியர் 15 : 15 (ECTA)
நாங்களும் கடவுளின் சார்பில் பொய்ச்சான்று பகர்வோர் ஆவோம். ஏனெனில் இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால் கடவுள் உயிர்த்தெழச் செய்யாத கிறிஸ்துவை, கடவுள்தான் உயிர்த்தெழச் செய்தார் என்று சான்று பகரும்போது கடவுளுக்கு எதிராகச் சான்று கூறியவர்கள் ஆவோம் அல்லவா?
1 கொரிந்தியர் 15 : 16 (ECTA)
ஏனெனில் இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும்.
1 கொரிந்தியர் 15 : 17 (ECTA)
கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள்.
1 கொரிந்தியர் 15 : 18 (ECTA)
அப்படியானால், கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு இறந்தவர்களும் அழிவுக்குள்ளாவார்கள்.
1 கொரிந்தியர் 15 : 19 (ECTA)
கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும்விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம்.
1 கொரிந்தியர் 15 : 20 (ECTA)
ஆனால் இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
1 கொரிந்தியர் 15 : 21 (ECTA)
ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்ததுபோல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர்.
1 கொரிந்தியர் 15 : 22 (ECTA)
ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர்.
1 கொரிந்தியர் 15 : 23 (ECTA)
ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர்பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர்.
1 கொரிந்தியர் 15 : 24 (ECTA)
அதன்பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார்.
1 கொரிந்தியர் 15 : 25 (ECTA)
எல்லாப் பகைவரையும் அடிபணியவைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும்.
1 கொரிந்தியர் 15 : 26 (ECTA)
சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும்.
1 கொரிந்தியர் 15 : 27 (ECTA)
ஏனெனில், "கடவுள் எல்லாவற்றையும் அவருக்கு அடிபணியச் செய்தார். "ஆனால் எல்லாம் அடிபணிந்தன என்று சொல்லும்போது அனைத்தையும் கிறிஸ்துவுக்கு அடிபணிய வைக்கும் கடவுளைத் தவிர மற்றவை யாவும் அடிபணிந்தன என்பது தெளிவாகிறது.
1 கொரிந்தியர் 15 : 28 (ECTA)
அனைத்துமே மகனுக்கு அடிபணியும்போது தமக்கு அனைத்தையும் அடிபணியச் செய்த கடவுளுக்கு மகனும் அடிபணிவார். அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்.
1 கொரிந்தியர் 15 : 29 (ECTA)
மேலும் இறந்தோருக்காகச் சிலர் திருமுழுக்குப் பெறுகிறார்களே! ஏன் அப்படிச் செய்கிறார்கள்? இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவது இல்லை என்றால் அவர்களுக்காகத் திருமுழுக்குப் பெறுவானேன்?
1 கொரிந்தியர் 15 : 30 (ECTA)
நாங்களும் எந்நேரமும் ஆபத்திற்குள்ளாவதேன்?
1 கொரிந்தியர் 15 : 31 (ECTA)
நான் நாள்தோறும் சாவை எதிர்கொள்கிறேன். அன்பர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அடியான் என்னும் முறையில் நான் உங்கள்மேல் கொண்டுள்ள பெருமையின்மீது ஆணையாக இதைச் சொல்கிறேன்.
1 கொரிந்தியர் 15 : 32 (ECTA)
நான் எபேசுவில் கொடிய விலங்குகளோடு போராடினேன். மனித முறையில் அதனால் எனக்கு வரும் பயன் என்ன? இறந்தோர் உயிர்த்தெழுதல் இல்லையெனில் "உண்போம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்" என்றிருக்கலாமே!
1 கொரிந்தியர் 15 : 33 (ECTA)
நீங்கள் ஏமாந்துபோக வேண்டாம். தீய நட்பு நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்.
1 கொரிந்தியர் 15 : 34 (ECTA)
அறிவுத்தெளிவுடன் இருங்கள்; நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள்; பாவஞ் செய்யாதீர்கள். ஏனெனில் உங்களுள் சிலருக்குக் கடவுளைப்பற்றிய அறிவு இல்லை. உங்களுக்கு வெட்கம் உண்டாகவே இதைச் சொல்கிறேன்.
1 கொரிந்தியர் 15 : 35 (ECTA)
"இறந்தோர் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? எத்தகைய உடலோடு வருவார்கள்?" என ஒருவர் கேட்கலாம்.
1 கொரிந்தியர் 15 : 36 (ECTA)
அறிவிலியே, நீ விதைக்கும் விதை மடிந்தாலொழிய உயிர்பெறாது.
1 கொரிந்தியர் 15 : 37 (ECTA)
முளைத்த பயிராக நீ அதை விதைக்கவில்லை; மாறாக வெறும் கோதுமை மணியையோ மற்றெந்த விதையையோதான் விதைக்கிறாய்.
1 கொரிந்தியர் 15 : 38 (ECTA)
கடவுளோ தம் விருப்பப்படி அதற்கு ஓர் உருவைக் கொடுக்கிறார்; ஒவ்வொரு விதைக்கும் அதற்குரிய உருவைக் கொடுக்கிறார்.
1 கொரிந்தியர் 15 : 39 (ECTA)
எல்லா ஊனும் ஒரே வகையான ஊன் அல்ல. மானிடருக்கு ஒரு வகையான ஊனும், விலங்குகளுக்கு இன்னொரு வகையான ஊனும், பறவைகளுக்கு வேறொரு வகையான ஊனும், மீன்களுக்கு மற்றொரு வகையான ஊனும் உண்டு.
1 கொரிந்தியர் 15 : 40 (ECTA)
விண்ணைச் சார்ந்தவைகளுக்கு ஒரு வகையான உருவமும் மண்ணைச் சார்ந்தவைகளுக்கு இன்னொரு வகையான உருவமும் உண்டு. விண்ணைச் சார்ந்தவற்றின் அழகு வேறு; மண்ணைச் சார்ந்தவற்றின் அழகு வேறு.
1 கொரிந்தியர் 15 : 41 (ECTA)
கதிரவனின் சுடர் ஒன்று; நிலவின் சுடர் இன்னொன்று. விண்மீன்கள் சுடர் மற்றொன்று; விண்மீனுக்கு விண்மீன் சுடர் வேறுபடுகிறது.
1 கொரிந்தியர் 15 : 42 (ECTA)
இறந்தோர் உயிர்த்தெழும்போதும் இவ்வாறே இருக்கும். அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர்பெற்று எழுகிறது.
1 கொரிந்தியர் 15 : 43 (ECTA)
மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர்பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர்பெற்று எழுகிறது.
1 கொரிந்தியர் 15 : 44 (ECTA)
மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால் ஆவிக்குரிய உடலும் உண்டு.
1 கொரிந்தியர் 15 : 45 (ECTA)
மறைநூலில் எழுதியுள்ளபடி, முதல் மனிதராகிய ஆதாம் உயிர்பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார்; கடைசி ஆதாமோ உயிர்தரும் தூய ஆவியானார்.
1 கொரிந்தியர் 15 : 46 (ECTA)
தூய ஆவிக்குரியது முந்தியது அல்ல; மனித இயல்புக்குரியதே முந்தியது. தூய ஆவிக்குரியது பிந்தியது.
1 கொரிந்தியர் 15 : 47 (ECTA)
முதல் மனிதர் களிமண்ணால் ஆனவர்; அவர் மண்ணிலிருந்து வந்தவர். இரண்டாம் மனிதரோ விண்ணிலிருந்து வந்தவர்.
1 கொரிந்தியர் 15 : 48 (ECTA)
மண்ணைச் சார்ந்த மனிதர் போலவே மண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். விண்ணைச் சார்ந்த மனிதர் போலவே விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர்.
1 கொரிந்தியர் 15 : 49 (ECTA)
எனவே நாம் மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பதுபோல விண்ணைக் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.
1 கொரிந்தியர் 15 : 50 (ECTA)
அன்பர்களே, நான் சொல்வது இதுவே; ஊனியல்புடைய மனிதர் இறையாட்சியை உரிமைப் பேறாக அடைய முடியாது. அழிவுக்குரியது அழியாமையை உரிமைப் பேறாக அடைய முடியாது.
1 கொரிந்தியர் 15 : 51 (ECTA)
இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்; நாம் யாவரும் சாகமாட்டோம்; ஆனால் அனைவரும் மாற்றுரு பெறுவோம்.
1 கொரிந்தியர் 15 : 52 (ECTA)
ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்; நாமும் மாற்றுரு பெறுவோம்.
1 கொரிந்தியர் 15 : 53 (ECTA)
ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்.
1 கொரிந்தியர் 15 : 54 (ECTA)
அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்து கொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்; "சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது.
1 கொரிந்தியர் 15 : 55 (ECTA)
சாவே, உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?"
1 கொரிந்தியர் 15 : 56 (ECTA)
பாவமே சாவின் கொடுக்கு. பாவத்துக்கு வலிமை தருவது திருச்சட்டமே.
1 கொரிந்தியர் 15 : 57 (ECTA)
ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!
1 கொரிந்தியர் 15 : 58 (ECTA)
எனவே என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, உறுதியோடு இருங்கள்; நிலையாய் நில்லுங்கள். ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58

BG:

Opacity:

Color:


Size:


Font: