1. சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்; எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன்.
|
2. பிறஇனத்தார் உன் வெற்றியைக் காண்பர்; மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்; ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய்.
|
3. ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்.
|
4. "கைவிடப்பட்டவள்" என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்; "பாழ்பட்டது" என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ "எப்சிபா" என்று அழைக்கப்படுவாய்; உன் நாடு "பெயுலா" என்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும்.
|
5. இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்து கொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.
|
6. எருசலேமே, உன் மதில்கள்மேல்;;; காவலரை நிறுத்தியுள்ளேன்; இராப்பகலாய் ஒருபோதும் அவர்கள் அமைதியாய் இரார்; ஆண்டவருக்கு நினைப்பூட்டுவோரே! நொடிப்பொழுதும் அமைதியாய் இராதீர்.
|
8. ஆண்டவர் தம் வலக்கையின் மேலும் வலிமைமிக்க தம் புயத்தின் மேலும் ஆணையிட்டுக் கூறியது; உன் தானியத்தை இனி நான் உன் பகைவருக்கு உணவாகக் கொடுக்கமாட்டேன்; உன் உழைப்பால் கிடைத்த திராட்சை இரசத்தை வேற்றின மக்கள் பருகமாட்டார்கள்.
|
9. அறுவடை செய்தவர்களே அதை உண்டு ஆண்டவரைப் போற்றுவர். பழம் பறித்தவர்களே என் தூயகச் சுற்றுமுற்றங்களில் இரசம் பருகுவர்.
|
10. செல்லுங்கள், வாயில்கள் வழியாய்க் கடந்து செல்லுங்கள்; மக்கள் வரப் பாதையைத் தயாராக்குங்கள்; அமையுங்கள், நெடுஞ்சாலையைச் சீராக அமையுங்கள்; கற்களை அகற்றுங்கள்; மக்களினங்கள்முன் கொடியைத் தூக்கிப் பிடியுங்கள்.
|
11. உலகின் கடைக்கோடி வரை ஆண்டவர் பறைசாற்றியது; "மகள் சீயோனிடம் சொல்லுங்கள்; இதோ, உன் மீட்பு வருகின்றது, அவரது வெற்றிப்பரிசு அவருடன் உள்ளது; அவரது செயலின் பயன் அவர் முன்னே உள்ளது. "
|
12. 'புனித மக்களினம்' என்றும் 'ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்' என்றும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்; நீயோ, 'தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்' என்றும் இனி 'கைவிடப்படாத நகர்' என்றும் பெயர் பெறுவாய்.
|