Tamil சத்தியவேதம்
யோபு மொத்தம் 42 அதிகாரங்கள்
யோபு அதிகாரம் 39
1 மலையாடுகள் ஈனும் காலத்தை நீ அறிவாயோ? பெண் மான்கள் குட்டி போடுவதைக் கவனித்திருக்கிறாயோ?
2 அவை சினையாய் இருக்கும் மாதங்களை நீ எண்ணக் கூடுமோ? அவை குட்டிபோடும் காலத்தை நீ அறிவாயோ?
3 அவை குனிந்து தம் குட்டிகளை ஈனும், அவற்றின் இளங் குட்டிகள் வெளிப்படும்.
4 அவற்றின் இளங் குட்டிகள் உறுதி பெறுகின்றன, வெட்ட வெளியில் அவை வளர்ந்து வருகின்றன, மேய்ச்லுக்குப் போன பின் திரும்பி வருகிறதில்லை.
யோபு அதிகாரம் 39
5 காட்டுக் கழுதையை விருப்பம் போல் திரியும்படி விட்டவர் யார்? விரைந்தோடும் கழுதையை அவிழ்த்து விட்டவர் யார்?
6 பாழ்வெளியை அதற்கு வீடாகக் கொடுத்தோம், உவர் நிலத்தை அதற்கு இருப்பிடமாக்கினோம்.
7 அது நகரத்தின் அமளியைப் பொருட்படுத்துவதில்லை. விரட்டுகிறவனின் கூச்சல் அதன் செவியில் ஏறுவதில்லை.
8 மேய்ச்சல் தேடி மலைகளையெல்லாம் சுற்றித் திரிகிறது, பசுமையானது அனைத்தையும் தேடி அலைகிறது.
யோபு அதிகாரம் 39
9 காட்டெருது உனக்கு ஊழியஞ் செய்ய உடன்படுமோ? உன் தொழுவத்தில் இரவைக் கழிக்குமோ?
10 அதைக் கலப்பையில் கயிறுகளால் பூட்ட உன்னால் முடியுமோ? பள்ளத்தாக்குகளை உன் விருப்பப்படி அது பரம்படிக்குமோ?
11 மிகுதியான அதன் உடல் வலிமையை நம்பி உன் கடின வேலையையெல்லாம் அதனிடம் விட்டு விடுவாயோ?
12 அது உன்னிடம் திரும்பி வரும் என்று நம்புகிறாயோ? தானியத்தை உன் களத்துக்கு அது கொணரும் என்று நினைக்கிறாயோ?
யோபு அதிகாரம் 39
13 தீக்கோழியின் இறக்கைகளை நாரை, பருந்து இவற்றின் இறக்கைகளோடு ஒப்பிட முடியுமோ?
14 தன் முட்டைகளைத் தரை மேலேயே இட்டு வைத்து, மண்ணிலேயே அவை வெப்பமுறும்படி விட்டு விடுகிறது.
15 காலால் மிதிபட்டு அவை நொறுங்குமென்றோ காட்டு விலங்குகள் அவற்றை நசுக்கி விடுமென்றோ அந்தத் தீக்கோழி எண்ணிப்பாக்கிறதில்லை .
16 குஞ்சுகளை அந்நியவை போலக் கடுமையாய் நடத்தும், தன் வேதனை வீணாயினும், அது கவலைப் படுவதில்லை.
யோபு அதிகாரம் 39
17 ஏனெனில் அது ஞானத்தை மறக்கும்படி கடவுள் செய்தார்; அறிவில் அவர் அதற்குப் பங்கு தரவில்லை.
18 ஓடுவதற்காக அது எழும்பும் போது, குதிரையையும் அதன் மேல் ஏறிச் சொல்பவனையும் கண்டு நகைக்கிறது.
19 குதிரைக்கு அதன் வலிமையைத் தருகிறவன் நீயோ? அதன் கழுத்தைப் பிடரி மயிரால் உடுத்துகிறவன் நீயோ?
20 தத்துக்கிளி போல் அதைத் தாவியோடச் செய்கிறவன் நீயோ? வீறுகொண்ட அதன் கனைப்பு அச்சம் தருகிறது.
யோபு அதிகாரம் 39
21 பள்ளத்தாக்கின் மண்ணை ஆரவாரத்தோடு குளம்பால் வாரியடிக்கிறது, படைக்கலங்களைச் சந்திக்க அஞ்சாமல் செல்கிறது.
22 அச்சத்தைக் கண்டு அது நகைக்கிறது; அது கலங்குகிறதில்லை; வாளுக்கு அஞ்சி அது புறங்காட்டி ஓடுவதில்லை.
23 அம்பறாத்தூணி அதன் மேல் கலகலக்கிறது, ஈட்டியும் எறிவேலும் மின்னிக் கொண்டு வருகின்றன;
24 தீரத்தோடு துடித்துக் கொண்டு அது காற்றாய்ப் பறந்தோடும், எக்காள முழக்கங் கேட்டுப் போருக்குத் துடிக்கும்.
யோபு அதிகாரம் 39
25 எக்காளம் முழங்கியதும், 'கி கீ' யெனக் கனைக்கிறது, போர்க் களத்தைத் தொலைவிலிருந்தே மோப்பம் பிடிக்கிறது, படைத்தலைவர் முழக்கத்தையும் கூச்சலையும் உணர்கிறது.
26 பருந்து உயரத்தில் எழும்பி பறப்பதும் தெற்கு நோக்கித் தன் இறக்கைகளை விரிப்பதும் உன் அறிவினாலோ?
27 உன் கட்டளையால் தான் கழுகு மேலே பறந்து சென்று உயரமான இடத்தில் தன் கூட்டைக் கட்டுகிறதோ?
யோபு அதிகாரம் 39
28 பாறையில் அது தன் வீட்டை அமைத்துக் குடியிருக்கிறது, செங்குத்தான மலை வெடிப்பு அதன் உறைவிடமாம்.
29 அங்கிருந்தே அது தன் இரையை உற்று நோக்கும், தொலைவிலிருந்தே அதன் கண்கள் இரையைக் காணும்.
30 அதன் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும், எங்கே பிணம் உண்டோ அங்கே கழுகு கூடும்."