Tamil சத்தியவேதம்

பிரசங்கி மொத்தம் 12 அதிகாரங்கள்

பிரசங்கி

பிரசங்கி அதிகாரம் 3
பிரசங்கி அதிகாரம் 3

1 ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலம் உண்டு; வானத்தின்கீழ் நிகழ்வனவெல்லாம் அதற்குக் குறிக்கப்பட்ட கெடுவின்படி நடக்கின்றன. பிறக்க ஒரு காலமுண்டு;

2 இறக்க ஒரு காலமுண்டு. நடுவதற்கு ஒரு காலமுண்டு; நட்டதைப் பிடுங்குவதற்கு ஒரு காலமுண்டு.

3 கொல்ல ஒரு காலமுண்டு; குணமாக்க ஒரு காலமுண்டு. இடிக்க ஒரு காலமுண்டு; கட்ட ஒரு காலமுண்டு.

4 கண்ணீர்விட ஒரு காலமுண்டு; சிரிக்க ஒரு காலமுண்டு. புலம்ப ஒரு காலமுண்டு; கூத்தாட ஒரு காலமுண்டு.

பிரசங்கி அதிகாரம் 3

5 கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு; கற்களைச் சேர்ப்பதற்கு ஒரு காலமுண்டு. தழுவுவதற்கு ஒரு காலமுண்டு; தழுவாதிருப்பதற்கு ஒரு காலமுண்டு.

6 பொருட்களைத் தேட ஒரு காலமுண்டு; இழக்க ஒரு காலமுண்டு. காப்பாற்ற ஒரு காலமுண்டு; எறிந்துவிட ஒரு காலமுண்டு.

7 கிழிக்க ஒரு காலமுண்டு; தைக்க ஒரு காலமுண்டு. மௌனமாயிருக்க ஒரு காலமுண்டு; பேச ஒரு காலமுண்டு.

பிரசங்கி அதிகாரம் 3

8 அன்பு செய்ய ஒரு காலமுண்டு; பகைக்க ஒரு காலமுண்டு. போர்புரிய ஒரு காலமுண்டு; சமாதானம் செய்ய ஒரு காலமுண்டு.

9 வருந்தி உழைப்பதனால் மனிதனுக்குப் பயன் என்ன?

10 மனுமக்கள் பாடுபட்டுப் பரிசோதிக்கப்படும்படி கடவுள் அவர்களுக்கு நியமித்துள்ள தொல்லையைக் கண்டேன்.

11 அவர் எல்லாவற்றையும் அதனதன் காலத்திலே நல்லதாய் இருக்கும்படி செய்திருக்கிறார். உலகத்தையோ அதைக் குறித்து அவர்கள் விவாதிப்பதற்கு விட்டுவிட்டார். உண்மையில் கடவுளுடைய செயலெல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்து முடியும் வரையிலும் கண்டுபிடிக்கிற மனிதன் ஒருவனுமில்லை.

பிரசங்கி அதிகாரம் 3

12 என் வாழ்நாட்களில் மகிழ்வதையும் நன்மை செய்வதையும்விட நலமானது ஒன்றுமில்லை என்று அறிந்தேன்.

13 ஏனென்றால், ஒருவன் உண்டு குடித்துத் தன் உழைப்பால் உண்டான நன்மையைப் பார்ப்பது அவனுக்குக் கடவுள் தந்த வரம்.

14 கடவுள் செய்த செயலெல்லாம் என்றைக்கும் நிலைத்திருக்குமென்று அறிவேன். மனிதர் தமக்கு அஞ்சும்படி கடவுள் செய்தது எதுவோ, அதனோடு நாம் ஒன்றும் குறைக்கவும் இயலாது.

பிரசங்கி அதிகாரம் 3

15 உண்டாயிருந்தது எதுவோ, அதுவே இப்பொழுது இருக்கிறது; இனி உண்டாகப் போவது எதுவோ, அது ஏற்கனவே இருந்திருக்கிறது; கடந்து போனதையோ கடவுள் புதுப்பிக்கிறார்.

16 சூரியன் முகத்தே நீதிமன்றத்தில் அநீதமும் நியாய மன்றத்தில் அக்கிரமும் இருக்கக் கண்டேன்.

17 ஆதலால், கடவுள் நீதிமானையும் நெறிகெட்டவனையும் நடுத்தீர்ப்பார் என்றும், அப்பொழுது எல்லாவற்றுக்கும் காலம் முடியுமென்றும் என் மனத்தில் உணர்ந்தேன்.

பிரசங்கி அதிகாரம் 3

18 மேலும் மனுமக்களைக் கடவுள் சோதிப்பதற்காக அவர்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்கள் என நான் மனிதருடைய நிலைமையைக் குறித்து என் உள்ளத்தில் எண்ணினேன்.

19 அதைப் பற்றியே மனிதனுக்கும் சரி, மிருகங்களுக்கும் சரி - ஒரே விதச் சாவு. அவனுக்கும் இவைகளுக்கும் ஒரே முடிவு. மனிதன் சாவது எவ்விதமோ அவ்விதமே மிருகமும் சாகும். உயிர்களுக்கெல்லாம் மூச்சு ஒன்றே. (இது காரியத்தில்) மிருகத்தைக் காட்டிலும் மனிதன் மேன்மையுள்ளவன் அல்லன். எல்லாம் வீணே.

பிரசங்கி அதிகாரம் 3

20 எல்லாம் ஒரே இடத்துக்குப் போகின்றன. எல்லாம் மண்ணினால் உண்டானவை; எல்லாம் மண்ணுக்குத் திரும்பும்.

21 ஆதாமின் மக்களுடைய ஆன்மா உயர ஏறுகிறதென்றும், மிருகங்களின் ஆவி தாழ இறங்குகிறதென்றும் அறிகிறவன் யார்?

22 இப்படியிருக்கிறபடியால், மனிதன் தன் செயல்களில் மகிழ்வுறுதல் நலமேயொழிய அவனுக்கு வேறென்ன நலமாயிருக்கும்? இதுவே மனிதனுடைய பங்கு. தனக்குப்பின் நிகழப்போவது இன்னதென்று அவன் அறியும்படி அவனைத் திரும்பி வரச் செய்ய யாராலே கூடும்?