Tamil சத்தியவேதம்

2 சாமுவேல் மொத்தம் 24 அதிகாரங்கள்

2 சாமுவேல்

2 சாமுவேல் அதிகாரம் 15
2 சாமுவேல் அதிகாரம் 15

1 பின்னர் அப்சலோம் ஒரு தேரையும், குதிரை வீரர்களையும், தனக்கு முன் செல்லத்தக்க ஐம்பது சேவகர்களையும் தனக்குச் சேர்த்துக் கொண்டான்.

2 அன்றியும் அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வாயிலில் நின்று கொண்டு எவனாவது தனக்குள்ள வழக்கை முன்னிட்டு அரசரிடம் முடிவு கேட்க வருவதைக் கண்டால், அவனை அழைத்து, "உனக்கு எந்த ஊர்?" என்று கேட்பான். அவன், "உம் அடியான் இஸ்ராயேலின் இன்ன கோத்திரத்தான்" என்று சொல்லுவான்.

2 சாமுவேல் அதிகாரம் 15

3 அப்போது அப்சலோம் அவனைப் பார்த்து, "உன் வழக்கு நல்லதும் நியாயமானதுமே என எனக்குப் படுகிறது. ஆனால் உன் வழக்கை விசாரிக்க அரசரால் ஏற்படுத்தப் பட்டவர் ஒருவரும் இல்லை" என்று சொன்ன பின்,

4 நீதி வேண்டுவோர் அனைவரும் என்னிடம் வரவும், நான் அவர்களுக்கு நீதி வழங்கவும் என்னை நாட்டில் நீதிபதியாக நியமிப்பவர் யாரோ!" என்று சொல்வான்.

5 அதுவுமன்றி எவனாவது அவனிடம் வந்து வணங்கினால், அப்சலோம் தன் கையை நீட்டி அவனைக் கட்டி அணைத்து முத்தமிடுவான்.

2 சாமுவேல் அதிகாரம் 15

6 அவ்விதமே அப்சலோம் அரசரிடம் நீதிகோரி வரும் இஸ்ராயேலர் அனைவர்க்கும் செய்து, இஸ்ராயேலரின் இதயங்களைக் கவர்ந்து வந்தான்.

7 ஆனால் நாற்பது ஆண்டுகளுக்குப் பின் அப்சலோம் தாவீது அரசரை நோக்கி, "நான் ஆண்டவருக்குச் செய்துள்ள நேர்ச்சையை நிறைவேற்றும் பொருட்டு எபிரோனுக்குப் போக எனக்கு அனுமதி அளியும்.

8 ஏனெனில் உம் அடியான் சீரியா நாட்டின் ஜெஸ்சூரில் இருந்த போது ஆண்டவரை நோக்கி, 'ஆண்டவர் என்னை யெருசலேமுக்குத் திரும்பிவர அருள் செய்தால் நான் ஆண்டவருக்குப் பலியிடுவேன்' என்று நேர்ச்சை செய்து கொண்டேன்" என்றான்.

2 சாமுவேல் அதிகாரம் 15

9 தாவீது அரசர் அவனை நோக்கி, "சமாதானமாய் போ" என்றார். அவன் எழுந்து எபிரோனுக்குச் சொன்றான்.

10 அப்சலோம் இஸ்ராயேலின் கோத்திரங்களுக்கெல்லாம் இரகசியமாகத் தூதரை அனுப்பி, "நீங்கள் எக்காளம் முழங்கக் கேட்டவுடன், 'அப்சலோம் எபிரோனின் அரசன்' என்று கூறுங்கள்" என்று கட்டளையிட்டிருந்தான்.

11 யெருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த இருநூறுபேர் அப்சலோமுடன் சென்றார்கள். அவர்கள் வஞ்சமில்லாமலும் ஒன்றும் அறியாதவருமாய் இருந்தனர்.

2 சாமுவேல் அதிகாரம் 15

12 மறுபடியும் அப்சலோம் கிலோனிலிருந்து தாவீதுடைய ஆலோசனைக்காரனான அக்கித்தோப்பேல் என்ற கிலோனியனை அழைத்துவரச் செய்தான். சதித்திட்டமும் வலுப்பெற்றது; அப்சலோமுடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

13 அப்போது ஒரு தூதன் தாவீதிடம் வந்து, "இஸ்ராயேலர் அனைவரும் இப்போது முழுமனத்தோடு அப்சலோமைப் பின்பற்றி வருகின்றனர்" என்றான்.

14 இதைக் கேட்டுத் தாவீது யெருசலேமில் தம்முடன் இருந்த தம் ஏவலர்களை நோக்கி, "எழுந்திருங்கள், நாம் தப்பி ஓடுவோம்; இல்லாவிடில் நாம் அப்சலோமின் கைக்குத் தப்ப முடியாது. விரைவில் வெளியேறுங்கள். நாம் புறப்படுவதற்குமுன் ஒருவேளை அவன் வருவானாகில் நம்மையும் கொன்று நகரையும் வாளால் அழித்து விடுவான்" என்றார்.

2 சாமுவேல் அதிகாரம் 15

15 அரசரின் ஏவலர்கள் அவரைப் பார்த்து, "எம் தலைவராம் அரசர் இடும் கட்டளைகளை எல்லாம் அடியோர் செய்ய இதோ தயாராய் இருக்கிறோம்" என்று மறுமொழி சொன்னார்கள்.

16 அதன்படி அரசரும் அவர் வீட்டார் அனைவரும் கால்நடையாய்ப் புறப்பட்டார்கள். அரசர் வீட்டைக் காக்கும்படி தம் வைப்பாட்டிகள் பத்துப்பேரை இருக்கச் செய்தார்.

17 அரசரும் இஸ்ராயேலர் அனைவரும் கால்நடையாய்ப் புறப்பட்டு வீட்டினின்று வெகுதூரம் சென்று அங்குத் தங்கினார்கள்.

2 சாமுவேல் அதிகாரம் 15

18 அவருடைய ஊழியர் எல்லாரும் அவருக்குப் பக்கத்தே நடந்து போனார்கள். கெரேத்தியருடையவும் பெலாத்தியருடையவும் சேனைகளும், கேத்திலிருந்து வந்திருந்த ஆற்றல் வாய்ந்த அறுநூறு கேத்தைய வீரர்களும் அரசருக்குமுன் நடந்து போனார்கள்.

19 அப்போது அரசர் கேத்தையனான எத்தாயியை நோக்கி, "நீ எங்களோடு வருவது ஏன்? நீ திரும்பி போய் அரசரோடு தங்கி இரு. உன் சொந்த நாட்டை விட்டு வந்துள்ள அகதி அன்றோ நீ?

2 சாமுவேல் அதிகாரம் 15

20 நேற்றுத் தானே நீ இங்கு வந்தாய்? இன்று எங்களுடன் வரும்படி நான் உன்னை வற்புறுத்துவது முறையா? நான் மட்டும் போகவேண்டிய இடத்திற்குப் போவேன். நீயும் உன் சகோதரரும் திரும்பிப்போங்கள்; நீ ஊக்கமும் பிரமாணிக்கமுமுள்ளவனுமாய் இருந்தால், ஆண்டவரும் உனக்கு இரக்கத்தையும் பிரமாணிக்கத்தையும் காட்டுவார்" என்றார்.

21 எத்தாயி அரசரை நோக்கி, "ஆண்டவர்மேல் ஆணை! என் தலைவராகிய அரசரின் உயிர்மேல் ஆணை! என் தலைவரான அரசே, நீர் எங்கு இருப்பீரோ அங்கே உம் அடியானாகிய நானும் இருப்பேன்; வாழ்ந்தாலும் மடிந்தாலும் இங்கேயே இருப்பேன்" என்று கூறினான்.

2 சாமுவேல் அதிகாரம் 15

22 அதைக் கேட்டு தாவீது எத்தாயியை நோக்கி, "நீ என்னோடு வா" என்றார். அப்படியே கேத்தையனாகிய எத்தாயியும், அவனோடு இருந்த வீரர்களும் மற்ற மக்களும் நடந்து போனார்கள்.

23 அங்கு இருந்தோர் அனைவரும் கூக்குரலிட்டு அழுது கொண்டிருக்க எல்லாரும் புறப்பட்டனர். அரசரும் நடந்து கெதிரோன் ஆற்றைக் கடந்தார். பிறகு மக்கள் எல்லாரும் பாலைவனத்திற்குப் போகும் வழியே சென்றார்கள்.

2 சாமுவேல் அதிகாரம் 15

24 அபியாத்தாரும் அரசரைப் பின் தொடர்ந்தார். அவரைத் தொடர்ந்து சாதோக் என்ற குருவும் அவரோடு லேவியரும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கி வந்தனர். நகரினின்று புறப்பட்டு வந்த மக்கள் அனைவரும் கடந்து தீரும் வரை பேழையை இறக்கி வைத்தார்கள்.

25 அப்போது அரசர் சாதோக்கைப் பார்த்து, "கடவுட் பேழையை நகருக்குத் திரும்பக் கொண்டு போங்கள். ஆண்டவருடைய கண்களில் எனக்குக் கருணை கிடைக்குமாகில், அவர் என்னைத் திரும்ப வரச் செய்து கடவுட் பேழையையும் கடவுள் வாழும் இடத்தையும் காணும் பேற்றை எனக்கு அளிப்பார்.

2 சாமுவேல் அதிகாரம் 15

26 ஆனால் அவர், 'உன் மேல் எனக்குப் பிரியமில்லை' என்பாராகில், இதோ நான் தயாராயிருக்கிறேன். அவர் தம்முடைய கண்களுக்கு நல்லது என்று பட்டதை எனக்குச் செய்வாராக" என்றார்.

27 பிறகு அரசர் குருவாகிய சாதோக்கை நோக்கி, "ஓ திருக்காட்சியாளரே, நீர் சமாதானமாய் நகருக்குத் திரும்பிப் போம். உன் மகன் அக்கிமாசும், அபியாத்தாரின் மகன் யோனத்தாசும் ஆகிய உங்கள் மக்கள் இருவரும் உங்களோடு இருக்கக்கடவார்கள்.

2 சாமுவேல் அதிகாரம் 15

28 எனக்குச் செய்தி அனுப்புங்கள். இதோ நான் பாலைவனத்தின் வெளிகளிலே மறைந்திருப்பேன்" என்றார்.

29 அப்படியே சாதோக்கும் அபியத்தாரும் கடவுட் பேழையை யெருசலேமுக்குக் கொண்டு சென்று அங்குத் தங்கினார்கள்.

30 ஆனால் தாவீது மூடிய தலையுடன் அழுது கொண்டு வெறுங்காலாய் ஒலிவ மலைமேல் ஏறிச் செல்ல, அவரோடு இருந்த மக்கள் அனைவரும் அவ்விதமே தலையை மூடிகொண்டு அழுதவராய் நடப்பார்கள்.

2 சாமுவேல் அதிகாரம் 15

31 அக்கித்தோபேலும் அப்சலோமோடு சேர்ந்து கொண்டு சதி செய்தான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்ட போது தாவீது, "ஆண்டவரே, அக்கித்தோபேலின் திட்டத்தை மடமையாக மாற்றியருளும்" என்று மன்றாடினார்.

32 ஆண்டவரை வழிபட வேண்டிய மலையின் உச்சிக்குத் தாவீது ஏறிப்போகையில், இதோ கிழிந்த ஆடையுடனும் புழுதி படிந்த தலையுடனும் அரக்கித் ஊரானான கூசாயி அவரை எதிர் கொண்டு வந்தான்.

33 தாவீது அவனைப் பார்த்து, "நீ என்னுடன் வருவது எனக்குப் பாரமாய் இருக்குமே;

2 சாமுவேல் அதிகாரம் 15

34 மாறாக நீ நகருக்குத் திரும்பிப் போய், அப்சலோமை நோக்கி: 'அரசே, நானும் உம்முடைய ஊழியன்தான். முன்பு நான் உம் தந்தைக்கு ஊழியனாய் இருந்தது போல் இப்போது உமக்கும் ஊழியனாய் இருப்பேன்' என்று சொல்வாயாகில், நீ அக்கித்தோபேலின் திட்டத்தை அழித்து விடுவாய்.

35 எப்படியெனில், உன்னோடு சாதோக், அபியாத்தார் என்ற குருக்கள் இருக்கிறார்களே. அரண்மனையைப் பற்றி நீ கேள்வியுறுவது அனைத்தையும் குருக்களாகிய சாதோக், அபியத்தார் என்பவர்களுக்கு நீ தெரிவி.

2 சாமுவேல் அதிகாரம் 15

36 அன்றியும், அங்கே அவர்களோடு இருக்கும் சாதோக்கின் மகன் அக்கிமாசு, அபியத்தாரின் மகன் யோனத்தாசு மூலமாய் நீங்கள் கேட்ட செய்திகள் அனைத்தையும் என்னிடம் அனுப்புங்கள்" என்றார்.

37 அப்படியே தாவீதின் நண்பன் கூசாயி நகருக்குத் திரும்பிப் போனான். அப்சலோமும் யெருசலேமுக்கு வந்தான்.