Tamil சத்தியவேதம்

2 நாளாகமம் மொத்தம் 36 அதிகாரங்கள்

2 நாளாகமம்

2 நாளாகமம் அதிகாரம் 7
2 நாளாகமம் அதிகாரம் 7

1 சாலமோன் மன்றாடி முடிந்ததும், நெருப்பானது விண்ணின்று இறங்கி, தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் எரித்து விட்டது. மேலும் ஆண்டவரின் மகிமை ஆலயத்தை நிரப்பிற்று.

2 அதனால் குருக்கள் ஆண்டவரின் ஆலயத்துள் நுழைய முடிய வில்லை.

3 நெருப்பு இறங்குகிறதையும், ஆண்டவரது மகிமை ஆலயத்தின் மேல் தங்குகிறதையும் இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் கண்ட போது தரையில் நெடுங்கிடையாய் விழுந்து பணிந்து, "ஆண்டவர் நல்லவர்; அவர் தம் இரக்கம் என்றும் உள்ளது" என்று சொல்லி ஆண்டவரைப் போற்றி புகழ்ந்தனர்.

2 நாளாகமம் அதிகாரம் 7

4 அப்போது அரசரும் எல்லா மக்களும் சேர்ந்து ஆண்டவரின் திருமுன் பலிகளைச் செலுத்தினர்.

5 அதாவது சாலமோன் அரசர் இருபத்திரண்டாயிரம் மாடுகளையும் லட்சத்து இருபதினாயிரம் ஆட்டுக் கடாக்களையும் பலியிட்டார். இவ்வாறு அரசரும் மக்களும் கடவுளின் ஆலயத்தை அபிஷுகம் செய்தனர்.

6 குருக்கள் திருப்பணி புரிவதிலும், லேவியர்கள் ஆண்டவருக்குத் தோத்திரமாகத் தாவீது அரசர் இயற்றியிருந்த பாடல்களைக் கிண்ணாரங்களில் வாசித்துப் பாடுவதிலும் ஈடுபட்டிருந்தனர். "ஆண்டவரின் இரக்கம் என்றும் உள்ளது" என்று சொல்லி அவர்கள் தாவீது அரசர் இயற்றியிருந்த துதிப்பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகில் குருக்கள் இஸ்ராயேல் மக்கள் முன்னிலையில் நின்று எக்காளம் ஊதிக் கொண்டிருந்தார்கள்.

2 நாளாகமம் அதிகாரம் 7

7 ஆலய முக மண்டபத்தின் நடுப் பாகத்தையும் சாலமோன் அபிஷுகம் செய்து, அங்கே தகனப் பலிகளையும், சமாதானப் பலிகளின் கொழுப்பையும் பலி செலுத்தினார். ஏனெனில் அவர் செய்திருந்த வெண்கலப் பலிபீடம் தகனப்பலி, போசனப்பலி, சமாதானப் பலிகளின் கொழுப்பு முதலியவற்றை எல்லாம் கொள்ளவில்லை.

8 இவ்வாறு சாலமோன் ஏழு நாள் திருவிழாக் கொண்டாடினார். இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் அவரோடு சேர்ந்து விழாக் கொண்டாடினார்கள். ஏமாத்தின் எல்லை முதல் எகிப்தின் நீரோடை வரை வாழ்ந்து வந்த இஸ்ராயேல் அனைவருமே பெரும் திரளாய் அங்குக் கூடி வந்திருந்தனர்.

2 நாளாகமம் அதிகாரம் 7

9 எட்டாம் நாளை அவர்கள் பெரும் திருநாளாகக் கொண்டாடினர். ஏனெனில் ஏழு நாளளவாக அவர்கள் பலிபீடத்தை அபிஷுகம் செய்து அந்த ஏழு நாளும் திருவிழாக் கொண்டாடி வந்திருந்தனர்.

10 ஏழாம் மாதத்தின் இருபத்து மூன்றாம் நாள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போகும்படி மக்களுக்குச் சாலமோன் கட்டளையிட்டார். ஆண்டவர் தாவீதுக்கும் சாலமோனுக்கும் தம் மக்களான இஸ்ராயேலருக்கும் செய்திருந்த நன்மைகளை எண்ணி களிப்புற்று மன மகிழ்ச்சியுடன் அவர்கள் வீடு ஏகினர்.

2 நாளாகமம் அதிகாரம் 7

11 சாலமோன் இவ்வாறு ஆண்டவரின் ஆலயத்தையும் அரண்மனையையும் தாம் எண்ணியவாறே வெற்றிகரமாய்க் கட்டி முடித்தார்.

12 ஓர் இரவில் ஆண்டவர் அவருக்குத் தோன்றி, "நாம் உன் விண்ணப்பத்தை ஏற்று, இவ்விடத்தை நமக்குப் பலியிடும் ஆலயமாகத் தேர்ந்து கொண்டோம்.

13 நாம் மழை பெய்யாதவாறு வானத்தை அடைத்தாலும், நாட்டின் பயிரை அழிக்க வெட்டுக் கிளிகளுக்குக் கட்டளையிட்டாலும், எம் மக்களுக்குள் கொள்ளை நோயை அனுப்பினாலும்,

2 நாளாகமம் அதிகாரம் 7

14 நமது திருப் பெயரைக் கொண்டிருக்கும் நம் மக்கள் தங்களையே தாழ்த்தி, நமது திருமுன் வந்து தங்கள் தீய வழிகளை விட்டு விலகித் தவம் புரிந்து மன்றாடினால், நாம் விண்ணிலிருந்து அவர்களது விண்ணப்பத்தைக் கேட்டருள்வோம்; அவர்களது பாவத்தை மன்னித்து, அவர்களது நாட்டை நலன்களால் நிரப்புவோம்.

15 இங்கு வந்து மன்றாடுபவன் மேல் நமது கருணைக் கண்களைத் திருப்பி, அவனது மன்றாட்டிற்குச் செவிமடுப்போம்.

2 நாளாகமம் அதிகாரம் 7

16 ஏனென்றால் நமது திருப்பெயர் இவ்வாலயத்தில் என்றென்றும் விளங்கும்படி நாமே இவ்விடத்தைத் தேர்ந்து, அதைப் பரிசுத்தப்படுத்தியுள்ளோம். நாம் எந்நாளும் இதன் மேல் கண்ணும் கருத்துமாய் இருப்போம்.

17 உன் தந்தை தாவீதைப் போல் நீயும் நம் திருமுன் நடந்து, நமது சொல்லுக்குக் கீழ்ப்படிந்து எம் கட்டளைகளையும் நீதி முறைமைகளையும் பின்பற்றி வருவாயாகில்,

18 நாம் உனது அரசை நிலைநிறுத்துவோம். முன்பு நாம் உன் தந்தை தாவீதை நோக்கி, 'இஸ்ராயேலின் அரசு உன் சந்ததியை விட்டு என்றும் நீங்காது' என்று கூறிய வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.

2 நாளாகமம் அதிகாரம் 7

19 நீங்கள் நம்மை விட்டு விலகி நாம் உங்களுக்குக் கொடுத்த சட்டங்களையும் கட்டளைகளையும் மீறி, அந்நிய தெய்வங்களைத் தொழுது அவர்களுக்குப் பணிவிடை செய்து வருவீர்களேயானால்,

20 நாம் உங்களுக்குக் கொடுத்துள்ள நமது நாட்டிலிருந்து உங்களை அகற்றி விடுவோம்; நமது திருப்பெயர் விளங்கும்படி நாம் அபிஷுகம் செய்துள்ள இவ்வாலயத்தை நமது பார்வையினின்று அகற்றி அதை எல்லா இனத்தவர்களுக்கும் உவமையாகவும் அடையாளமாகவும் வைப்போம்.

2 நாளாகமம் அதிகாரம் 7

21 அப்பொழுது அவ்வழியே செல்பவர்களுக்கெல்லாம் அது ஒரு பழமொழியாய் இருக்கும். அவர்கள் அதைக் கண்டு வியந்து, 'ஆண்டவர் இந்நாட்டிற்கும் இவ்வாலயத்திற்கும் இவ்வாறு செய்தது ஏன்?' என்று வினவுவார்கள்.

22 அதற்கு மக்கள், 'தங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டுக் கொணர்ந்த தம் முன்னோருடைய கடவுளாகிய ஆண்டவரை விட்டு விலகி அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி அவற்றை அவர்கள் வழிப்பட்டு வந்தார்கள்; அதன் பொருட்டே ஆண்டவர் இத்தீங்குகளை எல்லாம் அவர்கள்மேல் வரச் செய்தார்' என்று மறுமொழி சொல்லுவார்கள்" என்றருளினார்.