Tamil சத்தியவேதம்

2 நாளாகமம் மொத்தம் 36 அதிகாரங்கள்

2 நாளாகமம்

2 நாளாகமம் அதிகாரம் 4
2 நாளாகமம் அதிகாரம் 4

1 மேலும் சாலமோன் இருபது முழ நீளமும் இருபது முழ அகலமும், பத்து முழ உயரமுமுள்ள ஒரு வெண்கலப் பலிபீடத்தைக் கட்டினார்.

2 கடல் என்னும் தொட்டியையும் அவர் வார்ப்பித்தார். அது வட்டவடிவமானது. அதன் அகலம் பத்து முழம்; உயரம் ஐந்து முழம்; சுற்றளவு முப்பது முழம்.

3 அதன் கீழ் சுற்றிலும் எருதுகளின் உருவங்கள் இருந்தன. அதைச் சுற்றிலும் பத்து முழ அகலத்தில் அவை இரண்டு வரிசைகளில் வைக்கப்பட்டிருந்தன. இவை தொட்டியோடு ஒன்றாகவே வார்க்கப் பட்டிருந்தன.

2 நாளாகமம் அதிகாரம் 4

4 அத்தொட்டி பன்னிரு எருதுகளின் மேல் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று வடக்கையும் மூன்று மேற்கையும் மூன்று தெற்கையும் மூன்று கிழக்கையும் நோக்கிய வண்ணம் இருந்தன. எருதுகளின் பின்பக்கம் உட்புறம் இருந்தது. தொட்டியின் களம் ஒருச்சாண்.

5 அதன் விளிம்பு கிண்ணத்தின் விளிம்பைப் போன்றும், மலர்ந்த லீலியைப் போன்றும் இருந்தது. அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.

2 நாளாகமம் அதிகாரம் 4

6 சாலமோன் பத்துக் கொப்பரைகளையும் செய்தார்; ஐந்தை வலப்பக்கத்திலும், ஐந்தை இடப்பக்கத்திலும் வைத்தார். தகனப் பலிப் பொருளெல்லாம் அவற்றில் கழுவப்பட்டன. கடல் தொட்டியோ குருக்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக வைக்கப் பட்டிருந்தது.

7 மேலும், பத்துப் பொன்விளக்குத் தண்டுகளையும் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு செய்தார். ஐந்தை வலப்புறமும் ஐந்தை இடப்புறமுமாக ஆலயத்தில் வைத்தார்.

2 நாளாகமம் அதிகாரம் 4

8 பத்து மேசைகளைச் செய்து ஐந்தை வலப்புறமும், ஐந்தை இடப்புறமுமாக ஆலயத்தில் வைத்தார். நூறு பொற்கிண்ணங்களையும் செய்தார். குருக்களின் வளாகத்தையும்,

9 பெரிய வளாகத்தையும் கட்டினார். ஆலயத்தின் கதவுகளை வெண்கலத் தகட்டால் வேய்ந்தார்.

10 கடல் தொட்டியை ஆலயத்தின் வலப்பக்கம் தென்கிழக்கே வைத்தார்.

11 ஊராம் செப்புப் பாத்திரங்களையும் சாம்பலை எடுக்கத்தக்க பெரிய முட்கரண்டிகளையும் கிண்ணங்களையும் செய்தான். இவ்வாறு அரசர் செய்யச் சொல்லியிருந்த ஆலய வேலைகளை எல்லாம் அவன் செய்து முடித்தான்.

2 நாளாகமம் அதிகாரம் 4

12 அவையாவன: இரு தூண்கள், அவற்றின் மேல் இரு போதிகைகள், குமிழ்கள், அக்குமிழ்களை மூட இரண்டு முனையின் மேல் வலைப்பின்னல்கள்,

13 மாதுளம் பழங்களைப் போன்ற நானூறு குமிழ்கள், இரு வலைப்பின்னல்களுமாம். அவை ஒவ்வொன்றிலும் மாதுளம் பழங்கள் இரண்டு வரிசைகளில் வைக்கப் பட்டிருந்தன. வலைப் பின்னல்களோ தூண்களின் போதிகைகளையும் குமிழ்களையும் மூடியிருந்தன.

14 கொப்பரைகள், இவற்றைத் தாங்கும் ஆதாரங்கள்,

2 நாளாகமம் அதிகாரம் 4

15 ஒரு கடல் தொட்டி, அதன்கீழ் இருந்த பன்னிரு எருதுகள், செப்புப்பாத்திரங்கள்,

16 பெரிய முட்கரண்டிகள், கிண்ணங்கள் முதலியன. தந்தையைப் போன்று இருந்த ஊராம்- அபி ஆண்டவரின் ஆலயத்துக்கு வேண்டிய தட்டு முட்டுகளைக் கலப்பற்ற வெண்கலத்தால் சாலமோனுக்குச் செய்து கொடுத்தான்.

17 அரசர் யோர்தானின் அக்கரையில் சொக்கோத்துக்கும் சரேதத்தாவுக்கும் நடுவிலுள்ள சமவெளியில் அவற்றை வார்ப்பித்தார்.

2 நாளாகமம் அதிகாரம் 4

18 அவை எண்ணிலடங்கா. அவற்றைச் செய்வதற்கு அளவிடற்கரிய வெண்கலம் செலவானது.

19 சாலமோன் ஆலயத்துக்கு வேண்டிய தட்டு முட்டுகள் எல்லாவற்றையும், பொற்பீடத்தையும் காணிக்கை அப்பங்களை வைக்கும் மேசைகளையும்,

20 உள்தூயகத்திற்கு முன்பாக முறைப்படி கொளுத்தவேண்டிய விளக்குகளையும், அவற்றின் தண்டுகளையும், பசும் பொன்னால் செய்தார்.

21 அதேபோன்று பூக்களையும், விளக்குகளையும், இடுக்கிகளையும் பசும்பொன்னால் செய்தார்.

2 நாளாகமம் அதிகாரம் 4

22 நறுமண எண்ணெய்ச் சிமிழ்களையும் தூபக் கலசங்களையும் கிண்ணங்களையும் சிறிய உரல்களையும் பசும் பொன்னால் செய்தார். உள்தூயகக் கதவுகளில் வேலைப்பாடுகளை அமைத்து, ஆலய வெளிவாயில்களைத் தங்கத்தால் செய்தார். இவ்வாறு சாலமோன் செய்து வந்த ஆண்டவரின் ஆலய வேலை முடிவுற்றது.